மகா சிவராத்திரி: ‘கோவிந்தா... கோபாலா...' கோஷத்துடன் சிவாலய ஓட்டம்!

சிவாலய ஓட்டம்
சிவாலய ஓட்டம்

ஆலயங்கள் பலவற்றுக்கும் பாதயாத்திரையாகச் செல்லும் பக்தர்கள் ஏராளம். ஆனால், ஓட்டமாக ஓடிச் சென்று சிவ தரிசனம் செய்யும் திருத்தலம் குமரியில் உண்டு. சொல்லப்போனால், திருத்தலங்கள் என்றே சொல்லவேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், மகா சிவராத்திரி நாளில், 12 சிவாலயங்களை தரிசித்து வழிபடும் ‘சிவாலய ஓட்டம்’ என்ற நிகழ்ச்சி வெகு பிரசித்தம். ‘ஹரியும் சிவனும் ஒன்றே’ என்ற தத்துவத்தை உணர்த்துவதே இந்தச் சிவாலய ஓட்டம் என்று சொல்லப்படுகிறது.

மகா சிவராத்திரியன்று பக்தர்கள் விரதம் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம், திருமலை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்றிப்பாகம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக்கோடு, திருநட்டாலம் ஆகிய 12 சிவாலயங்களை ஓடி ஓடி தரிசிப்பதே சிவாலய ஓட்டம் என அழைக்கப்படுகிறது.

சிவாலய ஓட்டம் எனும் வழிபாட்டின் பின்னணியில் ஒரு புராணக் கதையும் சொல்கிறார்கள்.

இடுப்புக்கு மேலே மனித வடிவமும், கீழே புலி வடிவமும் கொண்டது புருஷாமிருகம். புலிக்கால் முனிவரான வியாக்ரபாதரே சிவபெருமானை வேண்டி இப்படியொரு உருவத்தை வரமாகப் பெற்றார் என்கிறது புராணம். புருஷாமிருகத்துக்கு விஷ்ணுவைப் பிடிக்காது; தனது எல்லைக்குள் யாராவது திருமால் நாமத்தைக் கூறினால், அவரைத் தாக்கிவிடும்.

சிவாலய ஓட்டம்
சிவாலய ஓட்டம்

‘தவ வலிமையைவிட புஜ பலமே சிறந்தது’ என்று நம்பியவன் பீமன். பீமனுக்கும் புருஷாமிருகத்துக்கும் ‘சிவனும் ஹரியும் ஒன்று’ என்பதை உணர்த்தவேண்டும் என்பது பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருவுளமாக இருந்தது.

ஒருமுறை தர்மர், ராஜசூய யாகம் நடத்த முடிவு செய்தார். யாகத்துக்கு புருஷாமிருகத்தின் பால் கொண்டு வருமாறு பீமனை அனுப்பிவைத்தார். அவனும் சம்மதித்தான். ஆனால், வைணவத்தை வெறுக்கும் புருஷாமிருகத்திடம் சென்று பால் பெறுவது எப்படி எனத் தயங்கினான். ஆனால் கிருஷ்ணரோ, ‘‘பயப்படாதே பீமா! நான் உனக்குப் 12 ருத்திராட்சங்கள் தருகிறேன். புருஷாமிருகம் உன்னைத் தாக்க வரும்போது, ருத்திராட்சக் கொட்டைகளில் ஒன்றைக் கீழே போடு. அது சிவலிங்கமாக மாறும். லிங்கத்தைப் பார்த்தவுடன், புருஷாமிருகம் பூஜிக்கத் துவங்கிவிடும். அப்போது தப்பித்து விடலாம்!’’ என்று கூறினார். அதன்படி, காட்டுக்குச் சென்றான் பீமன்.

திருமலையில் ஒரு பாறை மீது அமர்ந்து, சிவனை நோக்கித் தவம் புரிந்து கொண்டிருந்தது புருஷாமிருகம். அப்போது பீமன், ‘கோவிந்தா, கோபாலா!’ என்று கூவினான். இதில் புருஷா மிருகத்தின் தவம் கலைந்தது. அது கோபத்துடன் பீமனைத் துரத்தியது. பீமன், ஒரு ருத்திராட்சத்தைக் கீழே போட்டான். அந்த விநாடியே ருத்ராட்சம் சிவலிங்கமாக மாறியது. இதைக் கண்டதும் புருஷாமிருகம் சிவபூஜையை அங்கு ஆரம்பித்தது. பீமன், ‘கோவிந்தா, கோபாலா’ என்று மீண்டும் குரல் எழுப்பினான். புருஷாமிருகம் மீண்டும் பீமனைத் துரத்த, பீமன் மீண்டும் ருத்திராட்சத்தைக் கீழே போட்டான். அங்கும் அது ஒரு சிவலிங்கமாக மாறியது. அந்த இடமே திக்குறிச்சி என விவரிக்கிறார் நெல்லை சங்கரபட்டர்.

இப்படி, 11 இடங்களைக் கடந்து 12-வது இடத்தில் (திருநட்டாலம்) ருத்திராட்சத்தைப் போடும்போது, புருஷாமிருகம் பீமனைப் பிடித்தது. அப்போது பீமனின் ஒரு கால் புருஷாமிருகத்தின் எல்லைக்குள்ளும், மற்றொரு கால் வெளியேயும் இருந்தன. உடனே பீமன், ‘’உனது எல்லையைக் கடந்து விட்டேன். என்னை விட்டுவிடு!’’ என்றான்.

அப்போது, தர்மர் அங்கே வந்தார். அவரிடம் இருவரும் நியாயம் கேட்டனர். தம்பி சிக்கலில் இருப்பது தெரிந்தும், அவர் பாரபட்சம் பார்க்காமல், தம்பி பக்கம் நிற்காமல், ‘’ஒரு கால் பகுதி புருஷாமிருகத்தின் எல்லையில் இருப்பதால், பாதி உடல் புருஷா மிருகத்துக்கே” என தீர்ப்பு வழங்கினார். அப்போது அங்கே ஒளிப்பிழம்புடன் தோன்றிய ஸ்ரீகிருஷ்ணர், பீமனுக்கும் புருஷாமிருகத்துக்கும், ‘ஹரியும் சிவனும் ஒன்றே’ எனும் தத்துவத்தை உணர்த்தி அருளினார். .

இருவரும் ஸ்ரீகிருஷ்ணரை வணங்கினார்கள். தர்மரின் ராஜ சூய யாகம் நடக்க புருஷாமிருகம் பெரிதும் உதவியது.

இந்தப் புராண நிகழ்வைக் குறிக்கும் வகையில், மகா சிவராத்திரி நன்னாளில், சிவாலய ஓட்டத்தை மேற்கொள்கிறார்கள் பக்தர்கள். மாசி மாதம் ஏகாதசி அன்று, மாலை அணிந்து, அன்றிலிருந்து விரதம் இருப்பார்கள். சிவராத்திரிக்கு முன் தினம் காலையிலிருந்தே எதுவும் சாப்பிடாமல், காவி உடை அணிந்து புறப்படுவார்கள். ‘கோவிந்தா... கோபாலா’ என்று கோஷமிட்டபடி குமரி திருமலையில் இருந்து சிவாலய ஓட்டம் துவங்குவார்கள். இப்படியாக ஓடிக்கொண்டே 12 சிவாலயங்களுக்கும் சென்று தரிசிப்பார்கள்.

புருஷா மிருகம்
புருஷா மிருகம்

இந்த சிவாலய ஓட்ட தரிசனம், மகா சிவராத்திரி நன்னாளில் நடைபெறும். முன்பெல்லாம் ஓட்டமாகவே பக்தர்கள் சென்று தரிசித்தார்கள். ஆனால் இப்போது, ஓட்டமாகச் செல்வதுடன் மட்டுமில்லாமல், ஒருசிலர் இரு சக்கர வாகனங்களிலும் கார் முதலான வாகனங்களிலும் சென்று தரிசிப்பதும் நடக்கிறது.

கோவிந்தா... கோபாலா... நமசிவாய வாழ்க... நாதன் தாள் வாழ்க!

(நாளை 18.02.2023 மகாசிவராத்திரித் திருநாள்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in