தீபாவளியில்... எண்ணெய், சிகைக்காய், வெந்நீர்க் குளியல், புத்தாடை ஏன்? எதற்கு?

ஐஸ்வர்யம் தரும் தீபாவளி மகிமை
தீபாவளியில்... எண்ணெய், சிகைக்காய், வெந்நீர்க் குளியல், புத்தாடை ஏன்? எதற்கு?

தீபாவளித் திருநாள் விரதங்கள் பற்றி ஆழமாகவே எடுத்துரைக்கின்றன ஞானநூல்கள். தீபாவளிப் பண்டிகையை தீபாவளி என்று நாம் எப்போதிருந்து சொல்லத் தொடங்கினோம் என்பது தெரியவில்லை. ஆனால், இந்தப் பண்டிகை குறித்த விவரங்கள் புராண இதிகாசங்களில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

தீர்க்கதமஸ் மகா முனிவர் சோலைவனத்தில், சிறிய ஆஸ்ரமம் அமைத்து, மூன்று வேளையும் பூஜை செய்து, கடும் தவமிருந்து வந்தார். முனிவரின் பூஜைக்கு மனைவி மக்களும் சீடர் பெருமக்களும் பக்கபலமாக இருந்து எல்லா பணிவிடைகளையும் செய்து வந்தார்கள். பூஜைக்குத் தேவையான தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். பூக்கள் பறித்து வந்தார்கள். பழங்களைப் பறித்து நைவேத்தியத்துக்கு வழங்கினார்கள்

சர்வ வரங்களைப் பெற்ற ஞானயோகி சனாதன முனிவர் ஒருநாள், அந்த ஆஸ்ரமத்துக்கு வந்தார். அவரைப் பார்த்ததும் வாசலுக்கு ஓடி வந்து வரவேற்றார் தீர்க்கதமஸ் முனிவர். மனைவி மக்களுடன் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். சனாதன முனிவருக்கு பாதபூஜைகள் செய்தார். அவரை ஆசனத்தில் அமரச் செய்து, நமஸ்கரித்தார். அவருக்கு குரு மரியாதைகள் செய்து, உணவுக்கும் ஏற்பாடு செய்தார். பிறகு, சனாதன முனிவர் அனைவரையும் எதிரே அமரச் சொல்லி, உபதேசங்களை வழங்கினார்.

‘‘மனதில் உள்ள துன்ப இருளை அகற்றுவதற்குப் பிரயத்தனப்படுவதே மனிதப் பிறப்பின் மிகப்பெரிய நோக்கம்; கடமை. அதேபோல், வாழ்வில் இன்ப ஒளியேற்றும் நிகழ்வு வராதா என்கிற ஏக்கமும் எல்லோருக்கும் இருக்கிறதுதானே! இருளை அகற்றவும் ஒளியை அதிகரிக்கவும் விரதம் ஒன்று உண்டு. அதைக் கடைப்பிடித்தால் நடப்பது எல்லாம் நன்மையாகவே நடந்தேறும். விரும்பியவை எல்லாம் கிடைத்தே தீரும். குருவருளும் கிடைக்கும்; இறையருளும் கிடைக்கும். சரஸ்வதியும் அருளுவாள்; லட்சுமியும் அரவணைப்பாள். சிவ விஷ்ணுவின் பேரருளைப் பெறலாம்’’ என்றார் சனாதன முனிவர்.

’’இந்த விரதம் மிக மிக எளிமையானது. அதேநேரம் மிகமிக வலிமையானது. அற்புதமான இந்த விரதத்தை சொல்லித் தருகிறேன் கேள். துலா மாதம் (ஐப்பசி) தேய்பிறை திரயோதசி அன்று மகா பிரதோஷ பூஜை செய்யுங்கள். சிவனாரையும் நந்தி தேவரையும் உரிய மலர்களால் அலங்கரித்து, மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். அப்படியே, எம தீபம் ஏற்றி எமதரும ராஜனை வழிபடுங்கள். இதனால் நம் வாழ்க்கை மலரும்.

நம்முடைய முன்னோர்கள் சொர்க்கத்துக்குச் செல்வார்கள். அப்படிச் செல்லும் நம்முடைய முன்னோரின் ஆசி, நமக்கு பரிபூரணமாகக் கிடைக்கும். ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் நிம்மதியாகவும் சகல சம்பத்துகளுடனும் வாழலாம்’’ என அருளினார் சனாதன முனிவர்.

அவர் மேலும் தொடர்ந்தார்...

‘‘தீபாவளித் திருநாளில், உஷத் காலத்தில் அதாவது சூரியோதயத்துக்கு முன்னதாக, விடியற்காலையில் எழுந்து, எண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராட வேண்டும். உஷத் காலத்தில் பெரும்பாலும் சுவாதி நட்சத்திரத்தில் சூரியனும் சந்திரனும் சஞ்சரிப்பதாக ஐதீகம்! எனவே, இந்த நாள், மிகவும் புனிதமானது. சக்தி வாய்ந்தது. இந்த நாளில் செய்யும் விரதமும் பூஜையும் பல மடங்கு பலன்களைத் தந்தருளும்!

இந்தப் புனித நன்னாளில், எண்ணெயில் திருமகள் வீற்றிருக்கிறாள். உடலில் தேய்த்துக்கொள்ளும் அரப்புப் பொடி அல்லது சிகைக்காய் பொடியில் கலைமகள் அமர்ந்திருக்கிறாள். சந்தனத்தில் நிலமகள் ஐக்கியமாகியிருக்கிறாள். குங்குமத்தில் ஸ்ரீகௌரி நிறைந்திருக்கிறாள். மலர்களில் தேவதைகளும் நீரில் கங்காதேவியும் வாசம் செய்கிறார்கள். புத்தாடைகளில் மகாவிஷ்ணு அருள்பாலிக்கிறார். தீபத்தில் சிவபெருமான் கலந்திருக்கிறார் என்கிறார்கள் தேவர்களும் மகா ஞானிகளும்’’ என்று விளக்கினார் சனாதன முனிவர். அதுவே தீபாவளித் திருநாள் எனும் பெயரில், கொண்டாடப்பட்டு வருகிறது.

அக்டோபர் 24-ம் தேதி திங்கட்கிழமை தீபாவளித் திருநாள். அற்புதமான இந்த நன்னாளில், எண்ணெய் தேய்த்து, அரப்புத் தூள் உபயோகித்து, வெந்நீரில் நீராடுவோம். இதனால் கங்கையில் ஸ்நானம் செய்த பலனும் புண்ணியமும் கிடைக்கும். அதனால்தான், வீட்டில் குளித்தாலும் ‘கங்கா ஸ்நானம் ஆச்சா?’ என்று நாம் கேட்டுக்கொண்டு, வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்கிறோம்.

புத்தாடை உடுத்தி, தீபங்கள் ஏற்றி, இனிப்புகள் படைத்து இறைவனை வணங்கி வழிபடுவோம். சகல சம்பத்துகளும் கிடைக்கப்பெறுவோம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in