சுபிட்சம் தரும் சுக்கிர வார பிரதோஷ தரிசனம்!

சுபிட்சம் தரும் சுக்கிர வார பிரதோஷ தரிசனம்!

இன்று 03.02.2023 வெள்ளிக்கிழமை பிரதோஷம்.

பிரதோஷ நாளில், சிவாலயங்களுக்குச் சென்று நந்திதேவரையும் சிவபெருமானையும் வணங்கி வழிபடுவது மிகுந்த பலன் தரும் என்பார்கள். சுக்கிர வாரமான வெள்ளிக்கிழமை நாளில் பிரதோஷமும் இணைந்து வரும் அற்புத வேளையில், மறக்காமல் சிவ தரிசனம் செய்வோம்.

அனைத்து சிவாலயங்களில், பிரதோஷ பூஜை என்பது சிறப்புறக் கொண்டாடப்படுவது வழக்கம். பிரதோஷ வேளை என்று சொல்லப்படும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரத்தில், சிவனாருக்கும் நந்திதேவருக்கும் விசேஷ அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறும். அப்போது, 16 வகையான அபிஷேகங்களும் தீபாராதனைகளும் காட்டப்படும்.

நந்திதேவர்தான் பிரதோஷ பூஜையின் பிரதான நாயகன். எனவே நந்திதேவருக்குத்தான் அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடந்தேறும். இவருக்குத்தான், 16 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெறும். நம்மால் முடிந்த அபிஷேகப் பொருட்களை வழங்கி, சிவனாரையும் நந்திதேவரையும் தரிசனம் செய்வது எல்லா வளங்களையும் தந்தருளும் என்கிறார் திருக்கண்டியூர் சிவன் கோயில் சுந்தர குருக்கள்.

வெள்ளிக்கிழமையில் பிரதோஷம் வருவதும் அப்போது தரிசனம் செய்வதும் ரொம்பவே சிறப்பும் சக்தியும் வாய்ந்தது. இந்த நாளில், மறக்காமல் பிரதோஷ தரிசனம் செய்வோம். சிவபுராணம் பாராயணம் செய்வோம். நமசிவாய மந்திரத்தை ஜபிப்போம். கோளறு பதிகம் பாராயணம் செய்து, சிவபெருமானைத் தொழுவது, ரொம்பவே சிறப்பு வாய்ந்தது.

அபிஷேகத்துக்கு நம்மாலான பொருட்களை வழங்கி தரிசிப்போம். அருகம்புல், செவ்வரளி, வில்வம் கொண்டு சிவ நந்தி தரிசனம் செய்வோம். கண்ணாரத் தரிசித்து, மனதாரப் பிரார்த்திப்போம். சுக்கிர வாரத்தில்... பிரதோஷ தரிசனம் செய்தால், இதுவரை அல்லல்பட்டுக் கொண்டிருந்த கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுவோம். இல்லத்தில் சுபிட்சமும் அமைதியும் குடிகொள்ளும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in