காசி, ராமேஸ்வரத்துக்கு நிகரான பாபநாசம் 108 சிவாலயம்!

பாபநாசம் 108 சிவாலயம்
பாபநாசம் 108 சிவாலயம்

108 சிவலிங்கங்களைத் தரிசிக்க, 108 சிவாலயத்துக்கு வந்தால் போதும். மெய்யுருகத் தரிசிக்கலாம். நினைத்த காரியம் அனைத்தும் கைகூடும். பாவங்கள் அனைத்தும் விலகிவிடும் என்கிறது ஸ்தல புராணம்.

ஊரின் பெயரிலேயே... கோயிலுக்கு சென்று தரிசித்தால் கிடைக்கும் பலன் இருக்கிறது. ஆமாம்... ஊரின் பெயர் பாபநாசம். தஞ்சாவூருக்கு அருகில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு வந்து தரிசித்தால், நம் பாவங்கள் அனைத்தும் நாசமாகிவிடும் என்பதால், ஊரின் பெயர் பாபநாசம் என்றானது!

கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது பாபநாசம் திருக்கோயில். புராதனமான, புராணத் தொடர்பு கொண்ட திருத்தலம் இது என்று போற்றுகின்றனர் சிவாச்சார்யர்கள்.

பாபநாசம் 108 சிவாலயம்
பாபநாசம் 108 சிவாலயம்

கீழை ராமேஸ்வரம் எனும் பெருமை கொண்ட கோயில் இது. எந்தத் தலத்துக்கும் இல்லாத பெருமையும் அதிசயமும் இந்தக் கோயிலுக்கு உண்டு. இங்கே 108 சிவலிங்கங்கள் இருக்கின்றன. ஆக இந்தத் தலத்துக்கு வந்து தரிசித்தால், 108 சிவலிங்கங்களைத் தரிசித்த, 108 சிவாலயத்துக்குச் சென்று தரிசித்த புண்ணியத்தைக் கிடைக்கப் பெறலாம் என்கிறார் கோவிந்தராஜ் சிவாச்சார்யர்.

தலம் விசேஷமானது. தீர்த்தப் பெருமை கொண்ட திருத்தலம். மூர்த்தமும் சொல்லில் அடங்காத சக்திகள் கொண்டது. ஆகவே, தலம், தீர்த்தம், மூர்த்தம் எனும் விசேஷங்களைக் கொண்ட திருத்தலங்களில் இதுவும் உண்டு என ஸ்தல புராணம் விவரிக்கிறது.

இந்தக் கோயிலில் அமைந்திருக்கும் சிவனாரின் திருநாமம் ராமலிங்கேஸ்வரர். ஆமாம்... ஸ்ரீராமபிரான் வழிபட்ட திருத்தலம் இது. அம்பாள் ஸ்ரீபர்வதவர்த்தினி. சிவனாருக்கு உகந்த வில்வத்தையே தல விருட்சமாகக் கொண்ட திருத்தலங்களில் இதுவும் ஒன்று. குடமுருட்டி, சூரிய புஷ்கரணி, சந்திர புஷ்கரணி, அக்னி தீர்த்தம் என இந்தத் தலத்தின் தீர்த்தங்கள் முக்கியத்துவமும் புனிதத்துவமும் வாய்ந்தவை என்கின்றனர்.

ராவணனை வதம் செய்துவிட்டு, லங்காபுரியை அழித்து விட்டு, ராமேஸ்வரம் வந்து அங்கிருந்து ராமபிரான், சீதையுடனும் லட்சுமணர் மற்றும் அனுமருடனும் வந்துகொண்டிருந்தார். இங்கே... பாபநாசம் தலத்திற்கு வந்த போது, ஒரு விஷயத்தை உணர்ந்தார்கள். ராமபிரானை, ஏதோவொன்று நிழல் போலான உருவத்தில் தொடர்ந்து கொண்டிருப்பதாக எல்லோரும் அறிந்துகொண்டார்கள். யுத்தத்தில் பலரையும் கொல்ல நேர்ந்த தோஷத்துக்கு ஆளானதால், அந்தப் பாவம் தன்னைப் பின் தொடர்கிறது என்பதை உணர்ந்தார் ஸ்ரீராமர். ஆகவே காவிரியும் தென்னந்தோப்பும் வயல்வெளிகளுமாக குளிர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருக்கும் இந்தத் தலத்தில், 108 சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வேண்டினால், பாவங்கள் அனைத்தும் நீங்கப் பெறலாம் என்பதை தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்தார் ராமபிரான்.

அதன்படி, காவிரியில் இருந்து மணல் எடுத்து வந்தார்கள். அந்த மணலைக் கொண்டு சிவலிங்கம் பிடித்து வைத்தார்கள். ஒவ்வொரு லிங்கமாக பிடித்துப் பிடித்து வைத்துக் கொண்டே வந்தார்கள். முன்னதாக, காசிக்குச் சென்று அங்கிருந்து சிவலிங்கம் ஒன்றை எடுத்துவரச் சொல்லி அனுமனை அனுப்பி வைத்தார் ராமபிரான். அனுமனும் காசிக்குப் பறந்தார்.

அத்தனை சிவலிங்கங்களுக்கும் மூலவராக, நாயகராக ஆறடி உயரத்தில் சிவலிங்கமாக அமைத்தார் ராமபிரான். அதுவே கருவறையில் குடிகொண்டிருக்கிறது என்கிறது ஸ்தல புராணம். ராமர் வழிபட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட மூலவர், ஸ்ரீராமலிங்கேஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார். அவருக்கு அருகில் பிராகாரத்தில்... 106 சிவலிங்கங்கள் அமைக்கப்பட்டன. காசியில் இருந்து அனுமன் கொண்டு வந்த சுமார் ஐந்தடி உயரமுள்ள லிங்கமும் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆக மொத்தம் 108 லிங்கங்களை அமைத்து ராமபிரான் வழிபட்ட சிவ ஸ்தலம் எனும் பெருமை கொண்டதாகத் திகழ்கிறது. பாபநாசம் ஸ்ரீராமலிங்கேஸ்வரர் கோயில் என்று சொல்லப்பட்டாலும் பாபநாசம் 108 சிவாலயம் என்றே எல்லோராலும் சொல்லப்படுகிறது.

ராமபிரானின் பாபங்களையெல்லாம் நாசம் செய்து அவரின் தோஷத்தைப் போக்கிய தலம், பாபநாசம் என்றே இன்றளவும் அழைக்கப்படுகிறது. இன்றைக்கும் இந்தத் தலத்துக்கு வந்து 108 சிவலிங்கங்களையும் தரிசிப்பவர்களின் பாவங்களையெல்லாம் போக்கி அருள்கிறார் சிவனார் என்பது ஐதீகம்!

அழகிய ஆலயம். அற்புதமான திருத்தலம். சாந்நித்தியம் நிறைந்த சந்நிதிகளும் பிராகாரங்களும் கொண்ட க்ஷேத்திரம். 108 லிங்கங்கள் கொண்ட கோயிலுக்கு வாழ்வில் ஒருமுறையேனும் வந்து தரிசித்தால், நம் முன் ஜென்மத்துப் பாவங்கள் உட்பட சகல பாவங்களும் நம்மை விட்டு விலகும்; நம் புண்ணியங்கள் பெருகும். குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெற்று சந்ததிகள் சிறக்க வாழலாம். இழந்ததையெல்லாம் திரும்பப் பெறலாம் என்பது உறுதி என்கிறார் சிவாச்சார்யர்கள்.

மிக நீண்ட மண்டபத்தில் மூன்று வரிசைகளில் வரிசைக்கு முப்பத்தி ஐந்து லிங்கங்கள் இருக்கின்றன. மூன்றாவது வரிசையில் மட்டும் முப்பத்தி ஆறு லிங்கங்கள் இருக்கின்றன. ஆக மொத்தம் 106 லிங்கங்கள். காசியில் இருந்து அனுமன் எடுத்துவந்த லிங்கம்... அனுமத்லிங்கம் என்றே அழைக்கப்படுகிறது. இது 107வது லிங்கம். நிறைவாக 108 வது லிங்கமாக, கருவறையில் மூலவராகக் காட்சி தருகிறார் ஸ்ரீராமலிங்கேஸ்வரர்!

நினைத்த காரியம் கைகூட வேண்டும் என நினைப்பவர்கள், 108 சிவலிங்கங்களையும் தரிசனம் செய்தால், விரையில் காரியம் நடந்தேறுவதை உணருவீர்கள். காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட லிங்கம் உள்ள தலம் என்பதால், காசிக்கு இணையான திருத்தலம் பாபநாசம் என்று போற்றப்படுகிறது. அதேபோல் ஸ்ரீராமர் வழிபட்ட தலம் என்பதால், ராமேஸ்வரத்துக்கு இணையான தலமாகவும் திகழ்கிறது பாபநாசம் 108 சிவன்கோயில்!

வாழ்வில், ஒருமுறையேனும் பாபநாசம் 108 சிவாலயத்துக்கு வந்து தரிசிப்போம். நம் வாழ்வில் இழந்ததையெல்லாம் திரும்பப் பெற்று, நிம்மதியும் நிறைவுமாக வாழ்வோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in