அருள்தரும் சக்தி பீடங்கள் – 34

திருவண்ணாமலை அபீதகுஜாம்பாள்
அபீதகுஜாம்பாள்
அபீதகுஜாம்பாள்

அம்மனின் சக்தி பீட வரிசையில் திருவண்ணாமலை அபீதகுஜாம்பாள் உடனுறை அருணாசலேஸ்வரர் கோயில், அருணை சக்தி பீடமாக போற்றப்படுகிறது. விநாயகருக்கான அறுபடை வீடுகளில் இத்தலம் முதலாம் படை வீடாகும். பஞ்ச பூதத் தலங்களுள் அக்னி தலமாகக் கருதப்படும் இத்தலம் சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களுள் 233-வது தலமாகும்.

தல வரலாறு

ஒருமுறை, பிரம்மதேவருக்கும் திருமாலுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இதுதொடர்பாக இருவரும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். இருவரில் யார் தனது அடியையும் முடியையும் கண்டு வருகிறார்களோ, அவரே பெரியவர் என்று சிவபெருமான் அறிவித்துவிட்டு, ஜோதிப் பிழம்பாகக் காட்சி தந்தார். அந்த ஜோதியே நெருப்பு மலையாக மாறியது. இதுவே கோயிலின் பின்னணியில் உள்ள திருவண்ணாமலையாகும்.

அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பொருள். அண்ணா என்றால் நெருங்கவே முடியாது என்று அர்த்தம். பிரம்மதேவர், திருமால் இருவராலும் சிவபெருமானின் அடியையும் முடியையும் நெருங்கவே முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என்ற பெயர் கிட்டியது.

பிருங்கி முனிவர் எப்போதும் பார்வதிதேவியை வணங்காமல், சிவபெருமானை மட்டுமே வணங்கி, வலம் வருவார். அவருக்கு சிவனும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக, சிவபெருமான், அம்பிகையைப் பிரிந்தார். பார்வதிதேவி, சிவபெருமானுடன் இணைவதற்காக, இத்தலத்தில் தவம் இருந்தார். அவருக்கு நேரில் காட்சியளித்த சிவபெருமான், அவரை தனது இடது பாகத்தில் ஏற்று அர்த்தநாரீஸ்வரராக அருள்பாலித்தார். உண்மையை உணர்ந்த பிருங்கி முனிவர், தனது செயலுக்காக வருந்தினார். இச்சம்பவம் சிவராத்திரி நாளில் நடைபெற்றது. சிவபெருமான் அர்த்தநாரீஸ்வர வடிவம் எடுத்தது இத்தலத்தில்தான் என்பதால், இத்தலம் கூடுதல் சிறப்பைப் பெறுகிறது.

மலைச் சிறப்பு

லிங்கமே மலையாக அமைந்த திருவண்ணாமலையை கீழ் திசையிலிருந்து பார்த்தால் ஒன்றாகத் தெரியும். இது ஏகத்தைக் குறிக்கும். கிரிவலப் பாதையிலிருந்து பார்த்தால் இரண்டாகத் தெரியும். இது அர்த்தநாரீஸ்வர தத்துவத்தை உணர்த்துகிறது. மலையின் பின்னால் மேற்கு திசையிலிருந்து பார்த்தால் மூன்றாகத் தெரியும். இது மும்மூர்த்திகளை நினைவுபடுத்தும். கிரிவலம் முடிக்கும்போது 5 முகங்கள் காணப்படும். இது சிவபெருமானின் திருமுகங்களைக் குறிக்கும்.

திருவண்ணாமலை, அருணகிரியார் பிறந்து வளர்ந்து முக்தி அடைந்த தலமாகும். வாழ்க்கையை வெறுத்து தன்னுயிர் மாய்த்துக்கொள்ள அருணகிரியார் துணிந்தபோது, முருகப் பெருமானே வந்து அவரைக் காப்பாற்றி திருப்புகழ் பாட உத்தரவிட்டார். இத்தலம் எண்ணற்ற சித்தர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் தலமாக உள்ளது. சேஷாத்திரி சுவாமிகள், ரமண மகரிஷி, யோகி ராம் சுரத்குமார், இடைக்காட்டுச் சித்தர், அம்மணி அம்மாள், அண்ணாமலை சுவாமிகள், அப்பைய தீட்சிதர், ஈசான்ய ஞானதேசிகர், தட்சிணாமூர்த்தி சுவாமிகள், தம்பிரான் சுவாமிகள், மூக்குப் பொடி சித்தர், விருப்பாட்சி முனிவர், மங்கையர்க்கரசியார், ராதாபாய் அம்மை போன்றோர் திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தர்களாவர், இவர்களில் பலர் இங்கேயே ஜீவசமாதி அடைந்துள்ளார்கள்.

கிரிவலச் சிறப்பு

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை என்று சிறப்பு பெற்ற தலத்தில் ‘நான்’ என்ற அகந்தை அழிந்தது. உண்ணாமுலையம்மன் சிவபெருமானிடம் இடப்பாகம் பெற கிரிவலம் வந்து தவம் செய்த தலமாக இத்தலம் போற்றப்படுகிறது. பௌர்ணமி நாட்களில் நிலவின் ஒளி மலை மீதும் மலையிலுள்ள மூலிகைச் செடிகள் மீதும் பட்டு பிரதிபலிக்கிறது. அன்றைய தினத்தில் மலையைச் சுற்றி வந்தால் உடலும் உள்ளமும் தூய்மை அடைகிறது.

கார்த்திகை மாதம் கார்த்திகை நாளில் பார்வதி தேவிக்கு சிவபெருமான் இடப்பாகம் அளித்ததால் அன்றைய தினத்தில் கிரிவலம் செய்வது சிறப்பு என்று கூறப்படுகிறது. முனிவர்கள் ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பு, பிரதோஷ தினங்களில் கிரிவலம் வந்தார்கள். அக்னி தலமாக இருப்பதால், அக்னிக்கு உரிய செவ்வாய்க்கிழமையில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

ஞாயிற்றுக்கிழமைகளில் கிரிவலம் வந்தால் சிவபதவிகள் கிடைக்கும். திங்கள் – இந்திரபதவி கிடைக்கும். செவ்வாய் – கடன், வறுமை நீங்கும். புதன் – கலைகளில் தேர்ச்சி, முக்தி கிடைக்கும். வியாழன் – ஞானிகளுக்கு ஒப்பான நிலை கிடைக்கும். வெள்ளி – விஷ்ணு பதம் அடையலாம். சனிக்கிழமை – நவக்கிரகங்களை வழிபட்டதன் பயன் கிடைக்கும். அமாவாசை தினத்தில் கிரிவலம் வந்தால் மனக்கவலைகள் தீரும். தம்பதியர் 48 நாட்கள் விரதமிருந்து அதிகாலையில் நீராடி கிரிவலம் வந்தால் மகப்பேறு கிட்டும் என்பது ஐதீகம்.

எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களைக் கொண்டு திருவண்ணாமலை அமைந்துள்ளது, இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், வருண லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகியன கிரிவலப் பாதையில் அமைந்துள்ளன. இந்த மலையின் சுற்றளவு 14 கிமீ ஆகும்.

கோயில் அமைப்பு

கோயிலில், 9 கோபுரங்கள், 6 பிரகாரங்கள், 142 சந்நிதிகள், 22 விநாயகர், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், பால ரமணர் தவம் செய்த இடமான பாதாள லிங்கம், 43 செப்புச் சிலைகள், திருமண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் ஆகியவை உள்ளன. கோயிலின் உள்ளே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தக் குளங்கள் உள்ளன.

கிளிக்கோபுரம் அருகில் உள்ள தீப தரிசன மண்டபம், மங்கையர்கரசி அம்மையாரால் 1202-ம் ஆண்டு எழுப்பப்பட்டது. தீபத் திருநாளில் இங்கு பஞ்சமூர்த்திகள் எழுந்தருள்வது வழக்கம்.

24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள திருவண்ணாமலை கோயிலை கட்டி முடிக்க 1,000 ஆண்டுகள் ஆனதாக கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன. தமிழ், கன்னடம், சம்ஸ்கிருத மொழிகளில் இக்கல்வெட்டுகள் அமைந்துள்ளன. இதிகாச காலத்தில் மகிழ மரத்தடியில் சிவபெருமான் சுயம்புலிங்கமாக தோன்றியதாகக் கூறப்படுகிறது. கோயிலுக்குத் திருப்பணி செய்தவர்களில் கிருஷ்ண தேவராயரும், பல்லவ மன்னன் கோப்பெருஞ் சிங்கனும் குறிப்பிடத்தக்கவர்கள். வல்லாள மகாராஜா மீது கொண்ட தனிப்பட்ட பாசத்தால், அவரை தன் தந்தையாக ஏற்றுக் கொண்ட அண்ணாமலையார், அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்ததாகக் கூறப்படுகிறது. ஆண்டுதோறும் மாசி மாதம் அண்ணாமலையார், அவருக்கு ஒரு மகன் ஸ்தானத்தில் இருந்து கடமைகளை செய்து (திதி கொடுப்பது) வருகிறார்.

கார்த்திகை மகாதீபம்

கார்த்திகை மகாதீபம் இக்கோயில் 10 நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. விழாவின் நிறைவு நாளில் சுவாமி, அம்பாளுக்கு பூஜைகள் செய்யப்பட்டது, 10 தீபங்களை மேளதாளத்துடன் எடுத்துச் சென்று கொடிக்கம்பம் அருகே தீபக் கொப்பரையில் ஒன்று சேர்த்து எரியவிடுவது வழக்கம். இத்தத்துவம் ‘ஏகன் அநேகனாகி, அநேகன் ஏகனாதல்’ எனப்படுகிறது. பரம்பொருளான சிவபெருமான் பல வடிவங்களாக அருள்கிறார் என்பது இதன் மூலம் அறியப்படுகிறது. அந்த நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வராக சுவாமி அருள்பாலிப்பார். உடனே மலையில் உள்ளவர்களுக்கு சைகை காண்பிக்கப்பட்டு அங்கு மகாதீபம் ஏற்றப்படும்.

ஏழடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. 3 டன் பசு நெய், 1,000 மீட்டர் காடாதுணி திரி, 2 கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றப்படுகிறது, தீபத்தின் ஒளி, 30 கிமீ தொலைவில் இருப்பவர்களுக்கும் தெரியும். இறைவன் ஜோதி வடிவானவன். அவனுடன் நாம் இரண்டறக் கலப்பதால் அவரவர் முன்வினைப் பாவங்கள், கர்மவினைகள், பிறப்பு இறப்பு சுழற்சிகள் அனைத்தும் நீங்கும் என்பதை விளக்குவதே கார்த்திகை தீபத் தத்துவம் ஆகும்.

அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம் ஆகும். தீபம் என்பது திருமகளின் வடிவத்தையும் (சுடர்) கலைமகளின் பிம்பத்தையும் (ஒளி), மலைமகளின் சக்தியையும் (வெப்பம்) ஒன்று சேர்த்தது. தீபச்சுடரில் முப்பெரும்தேவியரின் வடிவத்தை காணலாம். தீப ஒளி, தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது.

தீபத்தின் அடிப்பாகத்தில் பிரம்மதேவர், தண்டு பாகத்தில் திருமால், நெய், எண்ணெய் நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் புரிகிறார்கள். எல்லா நாளும் தீபம் ஏற்றி வழிபட உயர்வான பலன் தரும் என்று கூறப்பட்டாலும், கார்த்திகை மாதத்தில் கோயில்களிலும் இல்லங்களிலும் விளக்கேற்றுவது அனைத்து மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும் என்பது ஐதீகம்.

நூல்கள்

திருவண்ணாமலை தலத்தில் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. சைவ எல்லப்ப நாவலர் எழுதிய அருணாச்சல புராணம், அருணைக் கலம்பகம், குருநமச்சிவாயர் எழுதிய அண்ணாமலை வெண்பா ஆகியன திருவண்ணாமலையின் பெருமையை உரைக்கும் நூல்களாகும். கார்த்திகை தீப வெண்பா, அருணாசலேசுவரர் பதிகம், உண்ணாமலையம்மன் சதகம், உண்ணாமுலையம்மன் வருகைப் பதிகம், அருணாச்சலேசுவரர் உயிர் வருக்கம் படைத்தற் பாமாலை, அருணாசல அட்சரமாலை, அருணாசல நவமணி மாலை, திருவண்ணாமலைப் பதிகங்கள் ஆகியனவும் இத்தலத்தின் புகழைப் பாடும் நூல்களாகும்.

நேர்த்திக் கடன்

மனத் துயரம் நீங்க, வேண்டும் வரம் பெற, குழந்தை பாக்கியம் பெற, திருமணத் தடை நீங்க, பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர, வியாபாரத்தில் மேன்மை அடைய, வேலையில் முன்னேற்றம் பெற, வழக்கில் வெற்றி பெற இத்தலத்தில் பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். தொட்டில் கட்டுவது, துலாபாரம் எடுப்பது, சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வது, நல்லெண்ணெய் தீபமேற்றுவது, திருக்கல்யாண உற்சவம், அன்னதானம் முதலானவற்றை செய்து வருடம் முழுமைக்கும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்துகின்றனர்.

திருவிழாக்கள்

கார்த்திகை மாத பிரம்மோற்சவம், கார்த்திகை தீபத் திருவிழா, மாசி சிவராத்திரி, தை மாத மாட்டுப் பொங்கல் திருவூடல் உற்சவம், தை மாத ரதசப்தமி, மாசி மக தீர்த்தவாரி, பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம், ஆடிப்பூர தீமிதி விழா ஆகியவை இங்கு சிறப்பாக நடைபெறும். தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு, பிரதோஷ தினங்களில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெறும். அன்றைய தினங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெறும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in