அருள்தரும் சக்தி பீடங்கள் – 7

அம்பத்தூர் வைஷ்ணவி தேவி
வைஷ்ணவி தேவி
வைஷ்ணவி தேவி

அம்மனின் சக்தி பீடமான வைஷ்ணவி தேவி பீடம், சென்னை அம்பத்தூருக்கு அருகே உள்ள திருமுல்லைவாயிலில் அமைந்துள்ளது. ஐம்பத்து ஒன்றாவது ஊர் என்பது, பின்னாட்களில் அம்பத்தூர் என்று மருவி அழைக்கப்படுகிறது. வைஷ்ணவி தேவியின் அருளால் செல்வ வளமும் கல்வி வளமும் கிட்டும் என்பது ஐதீகம்.

சென்னை மாநகரத்தை அடுத்துள்ள பாடல் பெற்ற தலமாக (வட) திருமுல்லைவாயில் விளங்குகிறது. சுந்தரமூர்த்தி நாயனார், அருணகிரி நாதர், வள்ளலார் ஆகியோர் திருமுல்லைவாயில் தலத்தைப் போற்றிப் பாடியுள்ளனர்.

தலவரலாறு

ஒருசமயம் திருமுல்லைவாயில் பிரதேசத்தை ஆட்சி புரிந்து வந்த தொண்டைமான் என்ற மன்னர், பகை வேந்தரிடம் தோல்வி அடைந்தார். அதன் காரணமாக, தொண்டைமானை அழிக்கும்பொருட்டு, பகை நாட்டு காவலர்கள் அவரைத் துரத்தினர். தப்பித்தால் போதும் என்று நினைத்த மன்னர், போர் யானையின் மீது ஏறி, அந்த இடத்தை விட்டு அகல நினைத்தார். வரும்வழியில் யானையின் கால்களை முல்லைக் கொடிகள் சுற்றிக் கொண்டன. முல்லைக் கொடிகளின் பிடியில் இருந்து யானையை விடுவிக்க, மன்னர் தனது கைவாளால் கொடிகளை வெட்டினார்.

வெட்டிய இடத்தில் இருந்து குருதி பெருகி ஓடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மன்னர், தான் கொடிகளை வெட்டியதற்கா குருதி வரும் என்று யோசித்தார். பிறகு தான் வெட்டிய கொடிகளை விலக்கிப் பார்த்தபோது அங்கு சிவலிங்கம் இருப்பதை அறிந்தார். அந்த லிங்கத்தின் உச்சியில் இருந்து குருதி வழிவதைக் கண்டார்.

போரில் தோல்வி அடைந்ததற்குகூட வருந்தாத மன்னர், சிவலிங்கத்தை வாளால் வெட்டியது குறித்து பெரிதும் கவலை அடைந்தார். இந்த உயிரைக் காப்பாற்றும் முயற்சியால்தான் இத்தகைய விபரீதம் நிகழ்ந்தது என்பதை உணர்ந்தார். உயிர் மீது இருந்த ஆசை காரணமாக உலகங்களுக்கெல்லாம் தலைவனாக உள்ள சிவபெருமானின் அபச்சாரத்துக்கு ஆளாகி விட்டோமே என்று நினைத்து, தன்னுயிரை மாய்த்துக் கொள்ள துணிந்தார். அப்போது இறைவனின் குரல், “மன்னவனே அஞ்ச வேண்டாம். உனது வாள் என்னை ஊறுபடுத்தாது. நான் மாசிலாமணி என்று அறிக” என்று ஒலித்தது. மேலும், பகைவர்களை விரட்டியடிக்கவும் நந்திதேவருக்கு ஆணை பிறப்பித்தார் சிவபெருமான்.

இறைவனின் ஆணையை ஏற்று, நந்திதேவர் சிவ கணங்களுக்கு தலைமை ஏற்று, பகைவர்களை அழித்து தொண்டைமானுக்கு வெற்றியைத் தேடித் தந்தார். இந்த நிகழ்ச்சி காரணமாக, இத்தலத்தில் நந்திதேவர் இறைவனை நோக்கி இராமல் எதிர்நோக்கியவாறு அருள்பாலிக்கிறார். இந்த வரலாறு, ‘சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச் சூழ்கொடி முல்லையாள் கட்டிட்டு எல்லையில் இன்பம் அவர் பெற வெளிப்பட்டருளிய இறைவன்’ என்ற தேவாரப் பாடல் மூலம் அறியப்படுகிறது.

‘தழுவுமையால் முன்னும் தமிழிறையாற் பின்னும் தொழுமிறையால் மேலும் சுவடு’ என்று மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தனது வாட்போக்கி கலம்பகத்திலும் இதுகுறித்து குறிப்பிட்டுள்ளார்.

அன்னையின் உடற்கூறு விழுந்த இந்த இடத்தில் நடைபெற்ற இச்சம்பவத்தால் மனம் மகிழ்ந்த தொண்டைமான், தான் அறியாமல் செய்த பிழையை இறைவன் மன்னித்ததை நினைத்து அவருக்கு நன்றி தெரிவித்தார். இக்கோயிலுக்கு மிக அருகில் மன்னாதீஸ்வர பச்சையம்மன் கோயில் உள்ளது.

வைஷ்ணவி பீடம்

திருமுல்லைவாயில் தலத்தில் அமைந்துள்ள மாசிலாமணீஸ்வர் – கொடியிடை நாயகி அம்மன் கோயிலுக்கு அருகிலேயே வைஷ்ணவி தேவி கோயில் அமைந்துள்ளது. தனி சந்நிதி கொண்டு அருள்பாலிக்கும் வைஷ்ணவி தேவியின் ஆணைக்கு உட்பட்டு, இத்தலத்துக்கு வரும் அனைவருக்கும் கல்வி வளத்தையும் செல்வ வளத்தையும், சரஸ்வதி தேவியும் லட்சுமி தேவியும் அளிப்பதாக கூறப்படுகிறது.

சக்தி - சிவன்
சக்தி - சிவன்

நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் வைஷ்ணவி தேவி, அனைவருக்கும் இகபர சுகங்களை அளிப்பவர். அனைவரது துன்பங்கள், பலவீனங்களை இருக்கும் இடம் தெரியாமல் ஓடச் செய்பவர். அதர்மத்தை அழித்து தர்மத்துக்கு வெற்றியைத் தேடித் தந்த புனிதத் தலமாக திருமுல்லைவாயில் விளங்குகிறது. வைஷ்ணவி தேவி கோயில் தற்போது சன்மார்க்க சங்கத்தின் பொறுப்பில் இயங்கி வருகிறது.

கோயில் அமைப்பு

வைஷ்ணவி தேவியின் சந்நிதிக்கு இருபுறமும் கந்த பெருமானும், விநாயகப் பெருமானும் எழுந்தருளியுள்ளனர். தேவியின் சந்நிதிக்கு அருகே பகவான் ரமணரின் உருவப் படம் வைக்கப்பட்டுள்ளது. கோயிலின் சுற்றுச் சுவரில் ஆஞ்சநேயர், ஸ்ரீ மஹேஸ்வரி, ஸ்ரீ நாராயணி, ஸ்ரீ பிராம்மி ஆகியோரின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் வாயிற்புறத்தில் வள்ளிமலை சுவாமி, அகத்தியர், அருணகிரிநாதர், ஹயக்ரீவர் அருள்பாலிக்கின்றனர்.

தட்சிணாமூர்த்தி விக்கிரகம்

தனி சந்நிதியில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். 24-1-1959 (தைப்பூசம்) வரை இக்கோயிலில் தட்சிணாமூர்த்திக்கு தனி சந்நிதி இல்லை. ஏகாதசி தினத்தில் (3-2-1959) பிரம்ம முகூர்த்த வேளையில் ஓர் அன்பர், தனது கனவில் பகவான் ரமணர் படத்தின் அருகே நாகம் படமெடுத்து ஆடுவதாக உணர்ந்தார். இது சிவசக்தி ஐக்கிய தத்துவத்தை உணர்த்துவதாகவே அறிந்து கொண்டார். வைஷ்ணவி தேவியே நாக வடிவில் வந்து சிவசக்தி ஐக்கியத்தை வலியுறுத்தியதால் அன்பர்களின் உதவியுடன் தட்சிணாமூர்த்தி விக்கிரகத்தை, மகிழ மரத்தடியில் பிரதிஷ்டை செய்து குடமுழுக்கும் (6-3-1959) நடைபெற்றது. சிவராத்திரி இரவில் நான்கு கால பூஜையும் நடைபெற்றது.

இக்கோயிலில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி விக்கிரகம், இடப நந்தியுடன் வீற்றிருப்பதாக அமைந்துள்ளது. சிவபெருமான் முதலில் பார்வதி தேவிக்கு உத்தரகோச மங்கையில் உபதேசம் செய்து அருளினார். பின்னர் சிவச ரூப்ய பதவியில் கண நாதராகத் திகழும் நந்தியம்பெருமானுக்கு சகல கலைகளையும் உபதேசித்து அருளினார். பிறகு, சனகாதி நால்வர் கல்லாலின் நிழலில் தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெற்றனர். இவ்வாறு உபதேச கிரமத்தில் இந்தக் கோயிலில் நந்தியம்பெருமானுக்கு உபதேசித்து அருளும் விக்கிரகம் அமைந்துள்ளது.

அன்னை வைஷ்ணவி தேவியின் தோற்றம்

மூலஸ்தானத்தில் சாந்த ஸ்வரூபினியாக, அபய வரத அஸ்தங்களுடன், முகத்தின் இருபுறம் விரிந்த கேசங்களுடன் அன்னை வைஷ்ணவி தேவி தரிசனம் தருகிறார். விசேஷ நாட்களில் சந்தனக் காப்பு, ரத்ன கிரீடம், கவசம் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வைஷ்ணவி தேவி, நவதுர்கையின் அம்சமாக வணங்கப்படுகிறார். தேவியின் முகம் – சிவ அம்சம், திருவடிகள் – நான்முகன் அம்சம், கண்கள் – அக்னியின் அம்சம், காதுகள் – வாயுவின் அம்சமாகக் கொண்டாடப்படுகிறது. சிவபெருமானின் சூலம், திருமாலின் சக்கரம் முதலானவற்றை தனது ஆயுதங்களாக கொண்டுள்ளார் வைஷ்ணவி தேவி.

மூலவர் வைஷ்ணவி தேவிக்கு இடதுபுறத்தில் தங்க முலாம் பூசிய பஞ்சலோக விக்கிரகம் (மீனாட்சி அம்மன்), பீடத்தில் அர்த்த மேரு – ஸ்ரீ சக்கரத்துடன் காமாட்சி உற்சவ விக்கிரகத்தை தரிசிக்கலாம்.

மகா பெரியவர் வருகை

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இக்கோயிலுக்கு (4-4-1959) வந்து, வைஷ்ணவி தேவியை தரிசித்தார். அன்றிரவு கோயிலில் தங்கியிருந்து காஞ்சி காமாட்சியின் மகிமைகளை அன்பர்களுக்கு கூறியருளினார். மேலும், அன்னை காமாட்சியும் வைஷ்ணவி தேவியும் ஒரே அம்சத்தைக் கொண்டவர்கள் என்று உணர்த்தினார்.

காஞ்சி என்ற சொல்லுக்கு மகளிர் இடையணி (ஒட்டியாணம்) என்ற பொருள் உண்டு என்றும், காஞ்சிபுரம் (பிருத்வி தலம்) உலகத்தை தன்னுள் அடக்கிய தேவியின் ஒட்டியாணம் போன்ற சிறப்புடையது என்றும், மகா பெரியவர் கூறிக் கொண்டிருக்கும் சமயத்தில், வைஷ்ணவி தேவிக்கு பச்சை வைரம் உள்ளிட்ட நவரத்தின கற்களால் இழைக்கப்பட்ட தங்க ஒட்டியாணம் செய்து அணிவிக்கப்பட்டது.

மேலும், கலைநயத்துக்கு எடுத்துக்காட்டாக, அன்னை வைஷ்ணவி தேவிக்கு மாணிக்க மணிமகுடம் அணிவிக்கப்பட்டது. மகா பெரியவரின் உபதேச மொழிகளால், காஞ்சி காமாட்சியும் அம்பத்தூர் வைஷ்ணவி தேவியும் ஒரே அம்சத்தினர் என்பதை உணர்ந்த அன்பர்கள், நூற்றுக்கணக்கான கவிதைகளைக் கொண்டு அன்னைக்கு பாமாலை புனைந்து சூட்டினர்.

நேர்த்திக் கடன்

உயிருக்கு அஞ்சி ஓடிய பக்தர் காப்பாற்றப்பட்டதோடு, வெற்றியும் அடைந்தார். கால நேரம் சரியில்லை, அதனால் தோல்வியைத் தழுவினோம் என்று தன் மனதைத் தேற்றிக் கொண்ட மன்னருக்கு, எதிர்பாராத சமயத்தில் இறைவன் அருளால் வெற்றி கிட்டியதைப் போன்று, எதிர்பாரா சமயத்தில் துன்பத்தைக் களைந்து, இன்பத்தை அளிக்கக் கூடியவர் வைஷ்ணவி தேவி. தாயுள்ளத்தோடு அருள்பாலிக்கும் வைஷ்ணவி தேவி வீற்றிருக்கும் இக்கோயிலை பக்தர்கள் சரணாலயமாகக் கருதுகின்றனர். வைஷ்ணவி தேவியால் எந்த நேரத்திலும் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழலாம் என்பதைக் கூறி, ஸ்ரீ வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் திருப்புகழ் பாராயணம் செய்து, தேவியை ஆவாஹனம் செய்துள்ளார்.

திருவிழாக் காலங்களில், பக்தர்கள் வைஷ்ணவி தேவிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, சந்தனக் காப்பு அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கம். கல்வி, செல்வம், குழந்தைப் பேறு, வழக்கில் வெற்றி பெற, இழந்த செல்வத்தை மீட்க பக்தர்கள் இங்கு வழிபாடு செய்வர்.

திருவிழாக்கள்

ஆண்டுதோறும் இங்கு நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் மூலவருக்கு கருட வாஹினி, அன்னபூரணி, ஸ்ரீ வள்ளி, நாக வாஹினி, காயத்ரி, கஜலட்சுமி, ராஜ ராஜேஸ்வரி, யோகேஸ்வரி, மகா காளி, சரஸ்வதி தேவி அலங்காரம் செய்யப்படும். உற்சவர் விதவிதமான வாகனங்களில் வீதியுலா செல்வார். நவராத்திரி நாட்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள், சண்டி ஹோமம், வேத பாராயணம் நடைபெறும். ஸ்ரீ சக்கரத்துக்கு லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை நடைபெறும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in