நல்ல கணவன் கிடைக்க வரம் தரும் ஆண்டாள் நாச்சியார்!

ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமைகள்!
நல்ல கணவன் கிடைக்க வரம் தரும் ஆண்டாள் நாச்சியார்!

பிரம்மாண்டமான ஆலயங்கள் நம் தமிழகத்தில் ஏராளம். அவற்றில் மிக மிக முக்கியமான திருத்தலங்களில் ஸ்ரீவில்லிபுத்தூரும் ஒன்று. பெரியாழ்வார் வாழ்ந்த திருத்தலம். ஆண்டாள் அவதரித்த பூமி என ஸ்ரீவில்லிபுத்தூர் திருத்தலத்தின் புராண - புராதனப் பெருமைகள் ஏராளம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலை, ஸ்ரீவடபத்ர சாயி திருத்தலம் என்பார்கள். மிக பிரமாண்டமான, தொன்மையான, புராணப் பிரசித்திப் பெற்ற ஆலயங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலும் ஒன்று! விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அற்புதமான திருத்தலம். 108 திவ்விய தேசங்களில் இந்த க்ஷேத்திரமும் ஒன்று. அனைத்துக்கும் மேலாக, ’கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர்’ என்று ஸ்ரீவில்லிபுத்தூரைச் சொல்வார்கள்.

நந்தவனத்தில் தாம் பறிக்கும் பூக்களை இறைவனுக்கு மாலையாகக் கட்டி முதலில் அதை தன் கூந்தலில் சூடி, இறைவனுக்கு தான் பொருத்தம் உடையவளா என்பதைக் கண்ணாடியிலே கண்டு களிப்பாளாம் ஆண்டாள் நாச்சியார். பிறகு மாலையைக் கழற்றிவைத்துவிடுவாள். அதை, பூஜைக்கும் கொடுத்து விடுவாள். அந்த மாலையை தந்தை பெரியாழ்வாரும் இறைவனுக்கு சார்த்தி அலங்கரிப்பார். இது ஒருநாள் நடக்கவில்லை. ஒவ்வொரு நாளும் நடந்தது.

ஒருநாள்... இறைவனுக்கு சார்த்தவேண்டிய மாலையில் தலைமுடி இருப்பது கண்டு பதறிப்போனார் பெரியாழ்வார். அந்த மாலையைத் தவிர்த்து விட்டு வேறு மலர்களைக் கொண்டு உடனே மாலையாக்கிச் சூட்டினார். அப்போது பெருமாள், “கோதையின் கூந்தலில் சூட்டிய மாலையையே நான் விரும்புகிறேன். அதையே எனக்குச் சூட்டு” என அருளினார்.

பெரியாழ்வார், கோதையின் விருப்பத்தை அறிந்துகொண்டார். கோதையை மானுடர் யாருக்கும் மணமுடிக்க சம்மதிக்காமல் இறைவனுக்காகவே காத்திருந்தார். கோதை ஆண்டாள், இறைவனையே நினைத்து ஏங்கிக்கொண்டிருந்தாள். ’’திருவரங்கத்துக்கு வாருங்கள்’’ என்று அழைப்பு விடுத்தார் பெருமாள். அதையடுத்து, பூப்பல்லக்கில் ஸ்ரீரங்கம் சென்றாள் ஆண்டாள். ரங்கநாத சந்நிதியில் ஐக்கியமானாள்.

ஸ்ரீவில்லிபுத்தூரிலும் கோதையோடு சேர்ந்து எழுந்தருள வேண்டும் என்று பெரியாழ்வார் வேண்டிக்கொண்டார். இறைவனும் அதை ஏற்று இத்தலத்தில் எழுந்தருளினார். வைணவர்களின் முக்கிய ஸ்தலமாக இந்தக் கோயில் இன்றைக்கும் போற்றப்படுகிறது.

மூலஸ்தானத்தில் விமலாக்ருதி விமானத்தின் கீழ், அரவணைப் பள்ளியில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக , சயன திருக்கோலத்தில் காட்சி தருகிறார் பெருமாள். இவரைச் சுற்றி மூன்று பக்கங்களிலும் சுதை வேலையில் செய்து வர்ணம் தீட்டப்பட்ட கருடாழ்வார், சேனை முதலியார், சூரியன், தும்புருநாரதர், சனத்குமாரர், வில், கதை, சக்கரம், சங்கு, பெருமாளின் நாபிக் கமலத்திலிருந்து உண்டான தாமரையில் அமர்ந்திருக்கும் பிரம்மா, வாள் சனகர், கந்தர்வர்கள், சந்திரன், மதுகைடபர், பிருகு முனிவர், மார்க்கண்டடேயர் ஆகியோரின் திருவுருவங்களும் தரிசிக்கக் கிடைக்கின்றன.

விமானத்தைச் சுற்றி வர விமானத்திலே ஒரு சிறுவிட்ட வாசல் பிராகாரமும் இருக்கிறது. இதில் திருமுடியையும் திருவடிகளையும் சேவிக்க சிறிய திட்டி வாசல்கள் உள்ளன. இவை மார்கழித் திருநாள் ஆரம்பத்திற்கு முதல்நாள் பிரியாவிடையன்று அனைவரும் தரிசிப்பதற்காக திறந்து வைக்கப்படுகின்றன.

திருப்பதியில் புரட்டாசி 3வது சனிக்கிழமை பிரம்மோற்ஸவ த்துக்கு ஆண்டாள் மாலையை திருப்பதி பெருமாளுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து எடுத்துச் சென்று அணிவிக்கப்படுகிறது. அதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் ஆண்டாள் திருக்கல்யாணத்துக்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலிலிருந்து திருமணத்துக்கான பட்டுப் புடவை வருகிறது. மதுரையில் சித்திரைத் திருவிழா அழகர் எதிர் சேவையின்போது ஆண்டாளின் சூடிக்கொடுத்த மாலையைத்தான் கள்ளழகர் அணிந்திருக்கிறார். விஷ்ணு சித்தர் என்று போற்றப்படும் பெரியாழ்வாரும் ஸ்ரீஆண்டாளும் அவதரித்த திருத்தலம் இது என்கிற பெருமை ஸ்ரீவில்லிபுத்தூருக்கு உண்டு.

ஸ்ரீவில்லிப்புத்தூரில் வசித்த பெரியாழ்வார் மதுரையில் நடந்த போட்டியில் பொற்கிழி பரிசுகளைப் பெற்றார். பெருமாள் கருட வாகனத்தில் தோன்றி, இந்தப் பரிசை கிடைக்கச் செய்தார். இந்தக் காட்சியை அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கானோர் தரிசித்தனர். ’மக்களின் கண்கள், பெருமாள் திருமேனி மீது பட்டு அவருக்கு திருஷ்டி ஏற்பட்டிருக்குமோ, அவருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமோ’ என பெரியாழ்வார் பயந்துபோனாராம்.

பெரியாழ்வார், பெருமாளை இறைவனாகவே பாவிக்கவில்லை. தனக்கு நெருங்கிய உறவுக்காரர் போல், ஆத்ம ஸ்நேகிதன் போலவே பாவித்தார். போதாக்குறைக்கு, ஆழ்வார்களில், பெருமாளுக்கு மாமனார் எனும் பாக்கியம் பெற்றவர் பெரியாழ்வார்தானே! எனவே, பெருமாள் பல்லாண்டு வாழ வேண்டும் என உருகி, ”பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம், மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வித் திருக்காப்பு” என்று துவங்கி “திருப்பல்லாண்டு” பாடினார். இந்த உயர்ந்த பக்தியை மெச்சிய பெருமாள், “நீரே பக்தியில் பெரியவர்” என வாழ்த்தினார். அதுவரை, விஷ்ணு சித்தர் என்று அழைக்கப்பட்டவர், அதன் பிறகுதான் பெரியாழ்வார் எனும் திருநாமம் பெற்றார் என்கிறது புராணம்.

இந்தப் பல்லாண்டு பாடலே உலகம் முழுவதும் உள்ள திருமால் கோயில்களில் இன்றைக்கும் தினந்தோறும் பாடப்படுகிறது.

மார்கழி நோன்பிருந்த ஆண்டாள், முப்பது பாசுரங்கள் கொண்ட திருப்பாவை எனும் பிரபந்தம் பாடினாள். கண்ணனை தரிசிக்க தோழியரை எழுப்புவது போன்ற பொருளில் பாடப்பட்டிருக்கும் அழகிய பாடல்கள் இவை! தோழியரை ஆண்டாள் எழுப்பும் சிற்பங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில், ஆண்டாள் சந்நிதி விமானத்தில் உள்ளன. இதற்கு, திருப்பாவை விமானம் என்றே பெயர்.

ஆண்டாள் சந்நிதிக்கு முன்புறத்தில் மாதவிப்பந்தல் உள்ளது. ஆண்டாள், இந்த பந்தலுக்கு கீழ்தான் வளர்ந்தாள். இந்தப்பந்தல், மரங்களால் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆண்டாள், தன்னை கோபிகையாக பாவித்து, கண்ணனை வேண்டிப் பாடிய சிற்பங்கள் இந்தப் பந்தலுக்கு அருகிலுள்ள விதானச் சுவரில் செதுக்கப்பட்டுள்ளன. இதேபோல திருப்பாவைக் காட்சிகளை ஆண்டாள் கோயில் முன்மண்டபத்தில் ஓவியங்களாகவும் தரிசிக்கலாம்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர், ஆண்டாளின் மடியில் சயனித்திருப்பார். அதுபோல, ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் ஆடித்திருவிழாவின் 7ம் நாளில் ரங்கமன்னார் சுவாமி, ஆண்டாளின் மடியில் சயனித்த திருக்கோலத்தில் அருளுவதைக் காணலாம். இந்த ஊரின் கிருஷ்ணன் கோயிலில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். இதைத் தரிசித்தால், தம்பதியிடம் ஒற்றுமை மேலோங்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலில், மார்கழியின் பகல்பத்து திருநாளின் முதல்நாள், ஆண்டாள் தம் பிறப்பிட வம்சாவளியினரான வேதபிரான் பட்டர் வீட்டுக்குச் செல்வாள். அந்த வீட்டு முன்பு காய்கறிகளைப் பரப்பி வைத்து ஆண்டாளுக்கு வரவேற்பு அளிப்பார்கள். இதனை, “பச்சைப்பரத்தல்” என்பார்கள். கொண்டைக்கடலை, சுண்டக் காய்ச்சிய பால், வெல்லம் ஆகியவை சேர்க்கப்பட்ட திரட்டுப்பால், மணிப்பருப்பு நைவேத்தியத்தை ஆண்டாளுக்கு படைப்பார்கள். ஆண்டாளுக்கு பெருமாளுடன் திருமணம் நடக்கும் முன் அவளுக்கும் இப்படியாக உண்ணக் கொடுத்ததாக புராணம் விவரிக்கிறது. அதன் நினைவாக இன்றும் இந்த வழக்கம் தொடர்கிறது. திருமணம் ஆனதும் பெண்கள் இதைச் சாப்பிட்டால் ஆரோக்கியமான உடல்நிலை கிடைக்கும். சத்தான குழந்தைகள் பிறக்கும் என்பது ஐதீகம்.

வைகாசி பெளர்ணமி நன்னாளில், ஆண்டாளுக்குத் தயிர் சாதம், பால்மாங்காய் நைவேத்தியம் செய்கின்றனர். சுண்டக் காய்ச்சிய பாலில் நறுக்கிய மாங்காய்த் துண்டுகள், மிளகு, சீரகம், சர்க்கரை ஆகியவை சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படும் உணவு இது! பெரியாழ்வார் தலைமுறையைச் சேர்ந்த குடும்பத்தினர் இதனை படைக்கின்றனர். இந்நேரத்தில் ஆண்டாள் வெண்ணிற உடை அணிந்து. சந்தனமெல்லாம் பூசியபடி, மல்லிகை மலர்களை சூடிக்கொண்டு அற்புதமாகக் காட்சி தருவாள்!

பங்குனி உத்திரத்தில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடக்கும்போது, பெரியாழ்வார் தன் இருப்பிடத்திற்குச் செல்கிறார். அவருடன் பெரியாழ்வாரின் வம்சாவளியினர் சேர்ந்து கொண்டு இரண்டு கலசங்களில் தீர்த்தம் எடுத்து வந்து, ரங்கமன்னாருக்கு பூரணகும்ப மரியாதை கொடுத்து, தங்கள் பெண்ணை மனப்பூர்வமாக கொடுப்பதாகச் சொல்லி, கன்னிகாதானம் செய்வார்கள். பிறகு ரங்கமன்னார், ஆண்டாளுக்கு மாலையிட்டு, தன்னுடைய மனைவியாக்கிக் கொள்கிறார்.

ஆண்டாள் சந்நிதியில் உத்ஸவ மூர்த்திகள் எழுந்தருளியிருக்கும் மண்டபம், முத்துப்பந்தல் எனப்படுகிறது. இதில் வாழைமரம், மாவிலை மற்றும் பூச்செண்டும் இருக்கிறது. மேலே திருமாலின் திருப்பாதம் இருக்கிறது.

பொதுவாக பெருமாள் தலங்களில் கருடாழ்வார், சுவாமி சந்நிதிக்கு எதிரே அவரை நோக்கி வணங்கியபடிதான் இருப்பார். ஆனால், இத்தலத்தில் பெருமாளுக்கு அருகிலேயே வணங்கிய திருக்கோலத்தில் இருக்கிறார். இத்தலத்தில் பிறந்த பெரியாழ்வார், கருடாழ்வாரின் அம்சமாக பிறந்ததாகவும் புராணம் தெரிவிக்கிறது. தன் மகளை, திருமாலுக்கு திருமணம் செய்து தந்தபோது, மாப்பிள்ளைக்கு அருகில் நின்றுகொண்டாராம். இதன் அடிப்படையில் இங்கு சுவாமிக்கு அருகில் இருக்கிறார் கருடாழ்வார்!

ஸ்ரீவில்லி்புத்தூரில் ஆண்டாள் கிழக்கு நோக்கி தனிச்சந்நிதியில் அருளுகிறாள். பொதுவாக கிழக்கு நோக்கியிருக்கும் பெண் தெய்வங்களை வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். ஸ்ரீஆண்டாள் நாச்சியாரை, தொடர்ந்து வணங்கி வந்தால், சகல செளபாக்கியங்களும் கிடைக்கப் பெறலாம். நல்ல கணவன் கிடைத்து இனிதே வாழ்வார்கள் பெண்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in