எமன் தினமும் வந்து வழிபடும் கள்ளழக பெருமாள்!

- நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் தரும் மதுரை அழகர்
கள்ளழகர்
கள்ளழகர்

மதுரை கள்ளழகர் கோயிலுக்கு வந்து வேண்டிக்கொண்டால், நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

மதுரைக்கு அருகே உள்ளது அழகர்கோவில். இந்த ஊரில் அழகராக கள்ளழகப் பெருமாள் குடிகொண்டிருப்பதால், ஊரின் பெயரும் இதுவாயிற்று என்கிறது ஸ்தல புராணம். மதுரை மாநகரின் முக்கியத் திருவிழாவே, அழகர் ஆற்றில் இறங்குகிற வைபவம்தான். மீனாட்சியம்மைக்கும் சொக்கேசருக்கும் நடக்கிற திருமண வைபவம், அழகர் ஆற்றில் இறங்குகிற வைபவம் இரண்டுமே பிரசித்தம்.

மதுரை கள்ளழகர் கோயிலுக்கும் எமதருமனுக்கும் தொடர்பு உண்டு என விவரிக்கிறார் அழகர்கோயிலின் அம்பி பட்டாச்சார்யர். எமதருமர் வழிபட்டு அருள்பெற்ற திருத்தலம் இது.

எமதருமர், செந்நிற மேனி கொண்டவர். கவர்ச்சியான முகம் கொண்டவர். காந்தக் கண்களை உடையவர். அவரின் நாசி எடுப்பாக இருக்கும். செம்பவள உதடுகளைக் கொண்டவர். அவரின் பற்களை முத்து போன்றவை என்று எமதருமனை விவரிக்கின்றன புராணங்கள். ஆனால், அழகிய உருவம் கொண்டவராக இருந்தவர், தன் தேஜஸை இழந்து, கோர முகத்துடன் இன்றளவும் காட்சி தருகிறார் எமதருமன்.

இதற்கு புராண விளக்கமும் உண்டு.

தேவலோகப் பெண்களையே மயக்கும் பேரழகு பெற்றிருந்ததால், எமதர்மனைக் கண்டு பயப்படுவதற்கு பதில் அவன் மீது மோகம் கொண்டார்கள் ஜீவராசிகள் அனைவரும். சில தருணங்களில், தனது அழகில் மயங்கிய தேவலோகப் பெண்கள் வீசும் காதல் வலையில் எமதர்மன் சிக்கித் தவிக்கவும் நேர்ந்தது. இப்படி, காலதேவன் தனது கடமையையே மறந்ததால் பூலோகத்தில் பாரம் கூடியது. இதனால் மனிதர்களுக்கு மரணமே இல்லாத நிலை ஏற்பட்டது. இதை அறிந்த சிவபெருமான், உடனே எமனை அழைத்தார். அதன்படி திருக்கயிலாயம் வந்த எமனிடம் விளக்கம் கேட்டார். தன் அழகில் தேவலோகப் பெண்களே மயங்குகின்றனர் என வெட்கத்துடன் சொன்னார் எமன்.

உடனே சிவனார், தனது சக்தியால் எமதர்மனின் உருவத்தையே மாற்றினார். பிறகு, ‘’எமதர்மா, அதோ அந்தத் தடாகத்தில் உள்ள தெளிந்த நீரில் உனது உருவத்தைப் பார்’’ என்று உத்தரவிட்டார்.

எமதர்மன் தடாகத்துக்குச் சென்று நீரில் தன் உருவம் பார்த்தார். அதிர்ந்து போனார். பதறிப் போய் கண்ணீர் மல்க சிவனாரிடம் ஓடோடி வந்தவர், ‘’சுவாமி, அந்தத் தடாகத்துக்குள் கோர ரூபம் கொண்ட ஒருவன் ஒளிந்திருக்கிறான். அவனது கோரைப் பற்களும் கரிய நிறமும் பார்க்க எனக்கு பயமாக இருக்கிறது. அகண்ட மீசையும், சிவந்த கண்களும், தலையில் கொம்புகளும் புஜ பலமும் கூடிய அவன் யார் சுவாமி?’’ என்று அச்சத்துடன் கேட்டார்.இதைக் கேட்டுச் சிரித்த ஈசன், ‘’காலதேவா, நீ பார்த்தது உனது உருவத்தைத்தான். கலங்காதே’’ என்றார்.

மனம் சோர்ந்து போனார் எமதர்மன். மீண்டும் ஒருமுறை சிவனாரை ஏக்கத்துடன் பார்த்தார். இடையில் புலித் தோல். மேனியில் சுடுகாட்டுச் சாம்பலுடன் திகழும் இவரிடம் பேசிப் பயனில்லை என்ற எண்ணத்துடன் பிரம்மாவைத் தேடி சத்திய லோகம் சென்றார் எமன்.

அங்கு, ஓலைச் சுவடியில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார் பிரம்மன். பிரம்ம தேவனைக் கண்டதுமே எமதர்மனின் மனதில் அவநம்பிக்கை ஏற்பட்டது. இவரே ஒரு தலையை இழந்து நிற்கிறார். இவரிடம் பரிகாரம் கேட்பது வீண் என்ற எண்ணத்துடன் திருமாலை தரிசிக்கக் கிளம்பினார்.

வைகுண்டத்தில், திருமகளிடம் அளவளாவிக் கொண்டிருந்தார் மகாவிஷ்ணு. இதைக் கண்டு, மகிழ்ச்சியுடன் இருக்கும் தம்பதிக்கு இடையூறு செய்யக் கூடாது என்று சிந்தித்தபடியே எமதர்மன், பூலோகம் வந்தார். கடும் தவம் மேற்கொண்டார். தவத்தின் மூலமாக இழந்த அழகை மீண்டும் பெறுவது என முடிவு செய்தார்.

பூலோகத்தில், தென் திசை நோக்கிப் பயணித்தார். வழியில் ஓர் இடம் மிகவும் அவரைக் கவர்ந்தது. அங்கே,அந்த மலையடிவாரத்தில், திருமாலை நினைத்து, தவத்தில் மூழ்கினார். அதையடுத்து மகாவிஷ்ணு அவருக்குக் காட்சி தந்தார். திருமாலை விழுந்து நமஸ்கரித்தார் எமன். ‘’சுவாமி. தாங்கள் தான் எனக்கு விமோசனம் தர வேண்டும்’’ எனக் கெஞ்சினார்.

‘’வருந்தாதே எமதர்மா! உனது தலையில் முளைத்திருக்கும் கொம்புகள் மறைந்து போகட்டும். மாறாக, கொம்புகளுடன் கூடிய எருமை, உனக்கு வாகனமாகும். அத்துடன், ஆயுள் நிறைவடைந்த உயிர்களை எமலோகம் கொண்டு வர உதவியாக பாசக் கயிறு ஒன்றையும் உனக்குத் தந்தருள்கிறேன்’’ என்றார் மகாவிஷ்ணு.

மீண்டும் எமதருமன், ‘’சுவாமி, என்னுடைய கோரைப் பற்களும் மறைந்து, நான் பழைய பொலிவுடன் திகழவும் அருளுங்கள்’’ என மன்றாடி வேண்டிக் கொண்டார்.

‘’காலதேவனே... நீ சத்தியலோகம் சென்றபோது பிரம்மனை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டதால், இந்த கோர உருவமே உனக்கு நிலைக்கும்படி விதித்து விட்டார் பிரம்மன். பிரம்ம விதியை என்னாலும் மாற்றமுடியாது. உன்னாலும் மாற்றமுடியாது. எவராலும் மாற்ற முடியாது. ஆனாலும் வருந்தாதே! இந்த கோர உருவம், உலக உயிர்களிடம் உன் மீது பயத்தையும் அதேசமயம் பக்தியையும் ஏற்படுத்தும். உனது கோரைப் பற்கள் உலகில் நோய்நொடியை ஏற்படுத்தி, மரணத் தொழிலுக்கு உதவி செய்யும்’’ என்று அருளினார் மகாவிஷ்ணு. அதனால்தான் ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களை எமனின் கோரைப் பற்கள் என்கிறது சாஸ்திரம்.

இதுதான் தனது விதி என்பதை அறிந்து, ஆறுதல் அடைந்த எமதர்மன், ‘’சுவாமி, எனக்கு அருள் புரிந்த தாங்கள் இங்கேயே நிரந்தரமாக எழுந்தருள்வதுடன், தங்களை வழிபடவும் அனுமதி தர வேண்டும்’’ என வேண்டினார். “அப்படியே ஆகட்டும்” என அருளினார். சுந்தரராஜ பெருமாளாக அங்கு கோயில் கொண்டார். அந்த இடமே இன்றைய அழகர் கோயில். ‘சுந்தரம்‘ என்றால் ‘அழகு’. எனவே, இந்தப் பெருமாளுக்கு ‘அழகர்’ என்ற பெயரும் சேர்ந்தது. இங்கு, ஸ்ரீதேவி- பூதேவி சமேதராக சேவை சாதிக்கிறார் மூலவர்.

பெருமாள் இங்கு கோயில் கொண்டுவிட, அவரைத் தேடி மகாலட்சுமி வராமல் இருப்பாளா? அவளும் வந்தாள். அவளையும் அங்கேயே தங்கும்படி வேண்டினார் எமன். அதற்கு இசைந்த திருமகளும், ‘கல்யாண சுந்தரவல்லி’ எனும் திருநாமத்துடன் பெருமாளின் திருக்கரம் பற்றிக்கொண்டு இன்றைக்கும் அருள்பாலித்து வருகிறார். தன் தேவியுடன் திருமணக் கோலத்தில் காட்சி தரும் சுந்தரராஜபெருமாள், அனைவரின் மனதையும் கொள்ளை கொள்பவர் என்பதால் இவருக்கு ‘கள்ளழகர்’ எனும் திருநாமம் அமைந்தாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

இன்றைக்கும் எமதர்மர், அழகர் கோயிலுக்கு வந்து, இங்கு அர்த்தஜாம பூஜை செய்வதாக ஸ்தல புராணம் சொல்கிறது. அழகர் கோவிலில் கோயில் கொண்டிருக்கும் கள்ளழகரை தரிசித்துப் பிரார்த்தனை செய்தால், திருமண பாக்கியம் கைகூடும். சந்தான பாக்கியம் கிடைக்கப் பெறலாம். தீராத நோயும் தீரும். ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளைத் தந்தருளுவார் கள்ளழகர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in