பூமியில் அவதரிக்கும்போதும், பூமியைவிட்டுச் செல்லும்போதும், எதையும் யாரும் கொண்டுபோக முடியாது என்பதைத் தன் பாடல்கள் மூலம் உலகுக்கு உணர்த்தியவர் தாயுமானவர். ஆசையை எவ்வாறு கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்தியவர் இவர்.
திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரண்யத்தில், 17-ம் நூற்றாண்டில், சைவகுலத்தைச் சேர்ந்த கேடிலியப்ப பிள்ளை – கெஜவல்லியம்மாள் தம்பதி வசித்துவந்தனர். இவர்களின் முதல் மகனான சிவசிதம்பரத்தை, கேடிலியப்ப பிள்ளையின் அண்ணனுக்கு (வேதாரண்ய பிள்ளை) தத்துக் கொடுத்துவிட்டனர். அதன்பிறகு பல நாட்களுக்கு இவர்களுக்குப் பிள்ளைப்பேறு கிட்டவில்லை.
கேடிலியப்ப பிள்ளை, தனியாக வாணிபம் செய்துவந்தபோதும், திருச்சிராப்பள்ளியை ஆட்சிபுரிந்த விஜயரங்க சொக்கநாத நாயக்க மன்னரிடம் பெருங்கணக்கராகப் பணிபுரிந்து வந்தார். இதனால், கணவனும் மனைவியும் அடிக்கடி திருச்சிராப்பள்ளி தாயுமான சுவாமியை தரிசித்து வந்தனர். ஈசன் அருளால், இவர்களுக்கு 1705-ல் தாயுமானவர் பிறந்தார்.
மவுனகுரு அருளிய உபதேசம்
சிறுவயது முதலே இறை உணர்வுடன் வளர்ந்தார் தாயுமானவர். திருச்சிராப்பள்ளியில் பாடசாலை நடத்திவந்த சிற்றம்பல தேசிகரிடம் தமிழ் பயின்றார். சமஸ்கிருதம், கணித சாஸ்திரம், ஜோதிட சாஸ்திரம், தேவாரம், திருவாசகம், சைவ ஆகமங்கள், அருணகிரிநாதரின் திருப்புகழ் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். தினமும் தாயுமான சுவாமியை தரிசித்தபடி இருந்த தாயுமானவர், சிவபெருமான் மீது எளிய பாடல்களைப் பாடத்தொடங்கினார். திருமூலர் மரபில் வந்த மவுனகுரு சுவாமிகள், அப்பாடல்களைக் கேட்டு வியந்து தாயுமானவரைத் தனது சீடராக ஏற்றுக்கொண்டார். தாயுமானவரைத் தன்னருகே அமரச் செய்து அருட்கண்ணால் பார்த்தும் (சட்சுதீட்சை), காதில் (வாசக தீட்சை) மந்திர உபதேசமும் அருளினார். (திருச்சி மலைக்கோட்டையில் தாயுமானவர், மவுனகுரு சுவாமிகளிடம் உபதேசம் பெற்ற இடத்தைக் காணலாம்)
தக்க வயதில் பெற்றோர் விரும்பியபடி, மவுனகுரு சுவாமிகளின் ஆசிகளுடன், ‘மட்டுவார் குழலி’ என்ற பெண்ணை மணந்தார் தாயுமானவர். சிலகாலம் கழித்து இத்தம்பதிக்கு கனகசபாபதி பிறந்தார். சிலகாலம் கழித்து, தாயுமானவரின் மனைவி சிவபதம் அடைந்தார். தாயுமானவர் குழந்தையுடன் தவித்ததைப் பார்த்த சிவசிதம்பரம், அக்குழந்தையை வளர்த்து வந்தார்.
எல்லாம் சிவ உருவம்
ஒருசமயம், பூக்களைப் பறிப்பதற்கு நந்தவனம் சென்றார் தாயுமானவர். நந்தவனத்தில் முல்லை, பாரிஜாதம், இருவாட்சி, வில்வம், துளசி என்று பல மலர்களும், இலைகளும் நிறைந்திருந்தாலும், அவை எதையும் பறிக்காமல், காலி கூடையுடன் திரும்பினார். “ஏன் காலி கூடையுடன் திரும்பியுள்ளாய்?” என்று பெற்றோர் கேட்டதற்கு, “அங்குள்ள மலர்கள், என் கண்களுக்கு மலர்களாகத் தெரியவில்லை. எல்லாம் சிவ உருவமாகவே தெரிகின்றன. சிவத்தைக் கிள்ளி எவ்வாறு சிவத்தில் போட முடியும்?” என்று பதில் கேள்வி கேட்டார் தாயுமானவர்.
"பனிமலர் எடுக்க மனமும் நண்ணேன்” என்று கூறிய தாயுமானவர், “ஆடாக, மாடாக, புழு, பூச்சியாகப் பிறந்திருந்தால் எவ்வாறு சிவபூஜை செய்ய முடியும்? அதனால் மனிதப் பிறப்பை நாம் அனைவரும் விரும்புவோம், மனிதப் பிறப்பை அளித்த இறைவனுக்கு நன்றி சொல்வோம். அன்பு செய்வோம். பண்பு காட்டுவோம். மனக்குரங்கை அடக்க வேண்டும். மனதை அவனை நோக்கிச் செலுத்த வேண்டும்” என்று அருள்கிறார்.
மனப்பக்குவத்துக்குப் பாராட்டு
நாயக்க மன்னரின் பெருங்கணக்கராக இருந்த கேடிலியப்ப பிள்ளை, சிவபதம் அடைந்ததும், தாயுமானவரைப் பெருங்கணக்கராக நியமித்தார் மன்னர். தாயுமானவரின் பணியைப் பாராட்டி, விலை உயர்ந்த காஷ்மீர் சால்வை ஒன்றைப் போர்த்திப் பாராட்டினார் மன்னர். தாயுமானவர், அரண்மனையிலிருந்து வீடு திரும்பும் வழியில், மூதாட்டி ஒருவர் குளிரில் நடுங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறார். உடனே தனக்கு மன்னர் போர்த்திய சால்வையை எடுத்து, மூதாட்டிக்குப் போர்த்துகிறார்.
மறுநாள் காலை, அரசாங்க முத்திரையுடன் கூடிய சால்வையை, மூதாட்டி போர்த்திக்கொண்டிருக்கும் செய்தி மன்னரை எட்டியது. இதுகுறித்து, தாயுமானவரிடம் வினவினார் மன்னர். அதற்கு தாயுமானவர், “என்னைக் காட்டிலும் குளிரால் நடுங்கிக்கொண்டிருந்த அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு அந்த சால்வை தேவைப்பட்டதால் கொடுத்துவிட்டேன்” என்று பதிலளித்தார். துன்பத்திலுள்ளவரை, அம்பிகையாகக் கண்ட தாயுமானவரின் மனப்பக்குவத்தை உணர்ந்து, மன்னர் பாராட்டினார்.
உயிர்பலிக்கு எதிர்ப்பு
சிவராஜ யோகியாகவே மாறிவிட்டிருந்த தாயுமானவர், பல தலங்களுக்குச் சென்று, சிவபெருமானைப் போற்றிப் பாடி வழிபட்டார். அங்குள்ள இடங்களில், வேண்டுதல் என்ற பெயரில் உயிர்பலி (ஆடு, மாடு, கோழி) கொடுப்பதை விரும்பாத தாயுமானவர், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
“கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்கி,
எல்லார்க்கும் சொல்லுவது என் இச்சை பராபரமே.
கொல்லா விரதம் ஒன்று கொண்டவரே நல்லோர்
அல்லாதார் யாரே அறியேன் பராபரமே” என்று பாடுகிறார் தாயுமானவர்.
இதைக் கேட்டதும் பல அரசர்களும், உயிர்பலி கொடுப்பதைத் தடுக்க சட்டம் இயற்றினர்.
குருநாதரின் உபதேசங்கள்
மவுனகுரு சுவாமிகளிடம் இருந்து அனுபவ அறிவைப் பெற்றார் தாயுமானவர். மவுனகுரு சுவாமிகள் செய்கைகளால் செய்த உபதேசங்களை, நன்கு மனதில் பதித்துக்கொண்டார். ஆகாயம், நீர், நிலம், காற்று, நெருப்பு (பஞ்ச பூதங்கள்) எல்லாம் ‘நீயல்ல’ என்பதும், மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய அங்கங்கள் எல்லாம் ‘நீயல்ல’ என்பதும், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவையும் ‘நீயல்ல’ என்பதும், ‘அறிவுதான் ‘நீ’ என்பதும் மனதில் வந்து சென்றன.
மேலும், இவ்வுலகச் செயல்பாடுகளைக் கண்டு, உலகத்தைத் தோற்றுவித்து இயக்கிய ஒருவன் இருக்கிறான் என்பதையும், இல்லறம், துறவறம் இரண்டுமே பெரிதுதான் என்பதையும் உணர்ந்தார். உலக சுகங்கள் உவர்க்கின்றன, எச்சமயத்தில் யாருக்கு வாழ்க்கை நிறைவுபெறும் என்பது தெரியாது, அதனால் அதற்குள் இறைவனைச் சரணடைய வேண்டும் என்பதை மனதில் கொண்டார்.
குருநாதரை வணங்கிய தாயுமானவர்,
“ஐந்துவகை ஆகின்ற பூத பேதத்தினால்
ஆகின்ற அக்க நீர்மேல்
அமர்கின்ற குமிழி என நிற்கின்றது என்ன நான்
அறியாக் காலம் எல்லாம்” என்று பாடுகிறார்.
இதைத் தொடர்ந்து, தாயுமானவரிடம் நிறைய சீடர்கள் வந்து சேர்கின்றனர். “முக்திக்கு எது வழி?” என்று சீடர்கள் கேட்டதற்கு, “ஞானம் ஒன்றுதான் முக்திக்கு வாசல். இந்த ஞானம், பல கலைகளைக் கற்பதால் வரக்கூடியது அல்ல. கலைஞானம் என்பது அபரஞானம். இது திருவருளால் கைகூடும். அனுபவ ஞானமே பரஞானம். அதுவே முக்திக்கு வழியைக் காட்டும்” என்று அருளினார் தாயுமானவர்.
நாயக்க மன்னர் இறைவனடி சேர்ந்ததும், ராணி மீனாட்சி பொறுப்பேற்று நிர்வாகம் செய்துவந்தார். அவரது நிர்வாகத்திலும் அரசு கணக்கராகப் பணியாற்றி வந்தார் தாயுமானவர்.
மவுனகுரு சுவாமிகளின் ஆசியோடு, துறவறம் மேற்கொள்ள எண்ணினார் தாயுமானவர். அரசுப் பணியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். எளிய பாடல்களைப் பாடியபடி பல தலங்களை தரிசித்தார். 1736-ல் துறவறம் பூண்டார். இவரது பாடல்கள் அனைத்தும் ‘திருப்பாடல் திரட்டு’ என்ற தொகுப்பு நூலாக (தமிழ் மொழியின் உபநிடதம்) வெளியிடப்பட்டது.
தாயுமானவர் பாடல்கள்
தாயுமானவரின் அனுபவங்கள் பாடல்களாக வெளிப்பட்டன. 56-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் 1,452 பாடல்கள் இதுவரை கிடைத்துள்ளன. இவர் பாடியுள்ள 771 கண்ணிகளும் இறை அனுபவப் பாடல்களாகவும் இசையோடு பாடக்கூடிய பாடல்களாகவும் அமைந்துள்ளன. இவருடைய ‘பராபரக்கண்ணி’ மிகவும் புகழ்பெற்றது. இதில் 389 கண்ணிகள் இடம்பெற்றுள்ளன.
இதில், “அண்டகோடி புகழ்காவை வாழும் அகிலாண்ட நாயகி என் அம்மையே” என்று அகிலாண்டேஸ்வரியைப் போற்றிப் பாடியுள்ளார். தனது பாடல்கள் மூலம் சமரச சன்மார்க்க நெறியைப் பரப்பினார் தாயுமானவர். இவரது பாடல்களில் உவமைகளும் பழமொழிகளும் மிகுந்து காணப்படும்.
“சினம் அடங்கக் கற்றாலும் சித்தியெலாம் பெற்றாலும்
மனம் அடங்கக் கல்லார்க்கு ‘வாயேன்’ பராபரமே” என்ற பாடல்வரிகளும், (வாயேன் – வாய்க்க மாட்டேன், வாய் ஏன் – இருபொருள் கொண்டது),
“எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே” என்ற பாடல் வரிகளும் மிகவும் பிரபலம் அடைந்தன.
பல பாடல்களில் தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள அன்பு விளக்கப்படுகிறது. ‘கன்றினுக்குச் சேதா கனிந்திரங்கல் போலெனக்கு என்று இரங்குவாய் கருணை எந்தாய் பராபரமே’ என்ற கண்ணியில் சேதா என்பது பசுவைக் குறிக்கிறது. கன்றை ஈன்று தாய்மையில் திளைக்கும் பசு இங்கு இறைவனைக் குறிக்கிறது. அதேபோல பசுவின் கனிவிலும் இரக்கத்திலும் திளைக்கும் கன்று, இங்கு பக்தனுக்கு உவமை ஆகிறது. இறைவனின் கருணைக்குப் பெற்றோரின் கருணையை ஈடாக்கி பாடியுள்ளார்.
‘தாயிருந்தும் பிள்ளை தளர்ந்தாற் போல் எவ்விடத்தும் நீ இருந்தும் நான் தளர்ந்து நின்றேன் பராபரமே’ என்ற பாடல் மூலம் ஒரு குழந்தைக்கு உண்டான ஏக்கத்தை வெளிப்படுத்துகிறார் தாயுமானவர். தாய் அருகில் இருந்தாலும், வீட்டு வேலைகளைச் செய்வது, பிறருடன் சிரித்துப் பேசுவது போன்ற பிற வேலைகளைச் செய்யும்போது, தன்னருகில் வந்து தன்னைக் கவனிக்க வேண்டும் என்று குழந்தை அழும். அதுபோல, இறைவன் தன்னையே கவனிக்க வேண்டும் என்று இறைவனை அழைக்கிறார் தாயுமானவர்.
அருணகிரிநாதரின் பாடல்கள் தன்னைக் கவர்ந்ததாகக் கூறும் தாயுமானவர், “கந்தர் அனுபூதி பெற்றுக் கந்தர் அனுபூதி சொன்ன எந்தை அருள்நாடி இருக்கும் நாள் எந்நாளோ?” என்றும், “சும்மா இரு சொல்லற என்றலுமே அம்மா பொருளொன்றும் அறிந்திலேனே” என்று தனது சிவானுபவத்தை விளக்க முடியாமல் இருந்துள்ளார்.
வேதாந்த சித்தாந்தச் சாரமாய் விளங்கும் பாடல்களை அளித்த தாயுமானவர், பல தலங்களுக்குச் சென்று இறைவனை தரிசித்து, நிறைவாக 1742-ல் (தை மாதம் விசாக நட்சத்திரம்) ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரத்தில் முக்தி அடைந்தார். பின்னாட்களில் அந்த இடத்தில் தாயுமானவருக்குச் சமாதி எழுப்பப்பட்டது. பல இடங்களில் இன்றும் இவருக்கு குருபூஜை நடைபெறுகிறது.