உடலுக்குள் ஒரு ராணுவம் - 27: செயற்கைத் தடுப்பாற்றல் எனும் கொடை!

உடலுக்குள் ஒரு ராணுவம் - 27: செயற்கைத் தடுப்பாற்றல் எனும் கொடை!

கடந்த பல வாரங்களாக நம் உடலுக்குள் இயங்கும் இயற்கைத் தடுப்பாற்றல் (Innate immunity) குறித்துப் பேசினோம். எதிரிப் படைகளான கிருமிகள் எப்போதெல்லாம் நம் உடலுக்குள் நுழைகிறதோ அப்போதெல்லாம் நம் தடுப்பாற்றல் ராணுவம் அவற்றை அறிந்துகொண்டு, இயற்கை வழியில் அவற்றை எப்படித் துரத்துகிறது அல்லது அழிக்கிறது என்பதை அலசினோம்.

இந்த வாரம் அடுத்த தடுப்பாற்றல் குறித்துப் பேசலாம். அது, ‘செயற்கைத் தடுப்பாற்றல்’ (Acquired immunity/Adoptive immunity). மிகச் சுருக்கமாகச் சொன்னால், இயற்கைத் தடுப்பாற்றலுக்கு வலு சேர்க்கும் விதமாக நவீன மருத்துவம் கொடுக்கிற கொடைதான் செயற்கைத் தடுப்பாற்றல்.

நவீனமாகும் நாட்டின் படை பலம்

இங்கே ஒரு சின்ன உதாரணம் பார்ப்போம். சங்க இலக்கிய காலத்தில் நாட்டை ஆண்ட அரசர்களிடம் காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை என நான்கு வகைப் படைகளே இருந்ததாக வரலாறு கூறுகிறது. அந்தப் படைகள் பயன்படுத்தும் போர்க்கருவிகளைப் பொறுத்து விற்படை, வேற்படை, மற்படை, வாட்படை எனப் பிரிக்கப்பட்டதாகவும் அறிகிறோம். ஆனால், இப்போதோ காலாட்படை தவிர மற்ற எல்லாப் படைகளும் இருந்த இடம் தெரியாமல் காலியாகிவிட்டன. பதிலாக, தரைப்படை, வான்படை, கடற்படை என முப்படைகள் மட்டுமே உள்ளன. ஒற்றர் படைகளும் துணை ராணுவப் படைகளும் கடலோரக் காவல் படைகளும் இவற்றோடு இணைந்துகொண்டன.

மேலும், நவீன ராணுவத்தில் வில், வேல், வாள், அம்புகளுக்கு இடமில்லை. பதிலாக, கைத்துப்பாக்கி, இயந்திரத் துப்பாக்கி, பீரங்கி, அணுகுண்டு, கண்ணிவெடி, உந்துகணை (Rocket), எறிகணை, ஏவுகணை, ட்ரோன் கணை எனப் பலவிதப் போர்க் கருவிகள் புகுந்துவிட்டன. கடற்படையில் போர்க்கப்பல், நீர்மூழ்கிக் கப்பல் எனத் துணைப் படைகளும் சேர்ந்துகொண்டன. எதிரிகளின் படை பலம், பலவீனம், அவை நுழையும் வழிகள், தாக்கும் உத்திகள் போன்றவற்றைப் பொறுத்து அவ்வப்போது ஒரு நாட்டின் ராணுவம் நவீனமடைவதும் வலுவடைவதும் வளர்ச்சியடைவதுமாக இருக்கிறது. பொதுவாக, பொருளாதார பலம் வாய்ந்த நாடுகளில் இது சாத்தியப்படுகிறது.

அதுபோலவே, நாம் பிறக்கும்போது நம்மிடம் காணப்படுவது இயற்கைத் தடுப்பாற்றல். நாம் குழந்தையாக, சிறுவன், சிறுமியாக, பதின்பருவத்தினராக, அப்பாவாக, அம்மாவாக வளர்ச்சியடையும் ஒவ்வொரு கட்டத்திலும் நம் உடலுக்குள் இயங்கும் தடுப்பாற்றல் மண்டலம் செயற்கை வழியில் மேம்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. அதுதான் செயற்கைத் தடுப்பாற்றல். நாம் கண்ணும் கருத்துமாக ஆரோக்கியம் காப்பவர்களாக இருந்தால் இது சாத்தியம்.

20 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் மீன் எனும் சிறிய உயிரினத்தில் தோன்றிய தடுப்பாற்றலானது, மனித இனத்துக்கும் கிடைத்து, காலப்போக்கில் ஏற்படும் கிருமிகளின் உருமாற்றங்களுக்கு ஏற்ப தானும் மாறிக்கொள்கிறது என்றால், அந்த வியப்பை நாம் அறியாமல் இருக்கலாமா? வாருங்கள், அந்த வியப்புக்குரிய தடுப்பாற்றல் குகைக்குள் நுழைவோம்.

செயற்கைத் தடுப்பாற்றல் வகைகள்

நம்மைச் சுற்றி வரும் கிருமி ஒன்று நம் உடலுக்குள் நுழைகிறது என்று வைத்துக்கொள்வோம். அதை நம் தடுப்பாற்றல் மண்டலம் கவனித்து, இயற்கையாகச் சாகடிக்கும் செல்கள் (Natural killer cells) மூலம் அதை வெளியேற்றிவிடுகிறது. அதற்குப் பெயர் ‘இயற்கைத் தடுப்பாற்றல்’. அதோடு நின்றுவிடாமல், அந்தக் கிருமி அடுத்ததாக நம் உடலுக்குள் எப்போது நுழைந்தாலும், அதை நினைவில் கொண்டு துரத்துகிற ஆற்றலும் நம் தடுப்பாற்றலுக்குக் கிடைக்கிறது என்றால் அது ‘செயற்கைத் தடுப்பாற்றல்’. இப்படி, குறிப்பிட்டதொரு இனக் கிருமிக்கு மட்டும் தடுப்பாற்றல் பெறுவதை ‘தனித் தடுப்பாற்றல்’ (Specific immunity) என்றும் சொல்வதுண்டு. இதுபோல், ஒவ்வொரு இனக் கிருமியும் நம் உடலுக்குள் நுழையும்போதெல்லாம் அதற்கு எதிராக நமக்குத் தடுப்பாற்றல் கிடைத்துவிடுகிறது. அதனால்தான், நம்மைச் சூழ்ந்துள்ள கோடிக்கணக்கான கிருமிகளிடமிருந்து ஒவ்வொரு நிமிடத்திலும் நாம் தப்பித்துக்கொண்டிருக்கிறோம்.

அதேசமயம், உடலுக்குள் நுழைந்துவிட்ட கிருமிக்கு எதிராக நம் தடுப்பாற்றல் ராணுவத்தால் போராட முடியவில்லை என்று வைத்துக்கொள்வோம். அப்போது அதற்குக் கைகொடுக்க இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று, நாம் மருந்து சாப்பிட வேண்டும் அல்லது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். சமயங்களில் இந்த இரண்டும் தேவைப்படும். அதனால்தான் கரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சையும் தேவைப்படுகிறது; தடுப்பூசியும் தேவைப்படுகிறது என்கிறோம்.

இப்படிச் செயற்கை வழியில் நாம் தடுப்பாற்றல் பெறுவதை நவீன மருத்துவம் பல வகைகளாகப் பிரித்துப் பேசுகிறது. அவற்றில் முதலாவதாக முந்திக்கொண்டு வருகிறது, ‘இயற்கை வழியில் பெறப்பட்ட உந்து தடுப்பாற்றல்’ (Natural acquired active immunity). நீளமான பெயர்தான். வாசிக்க மலைக்க வேண்டாம்.

சின்னம்மை வந்தால்..?

நமக்குச் சின்ன வயதில் சின்னம்மையோ, தட்டம்மையோ வந்திருந்தால், அதற்கு எந்தவித சிகிச்சையும் எடுத்திருக்க மாட்டோம். ஆனால், அது குணமாகியிருக்கும். அதற்குப் பிறகு அது நம் வாழ்நாள் முழுமைக்கும் நம்மைத் திரும்பிப் பார்க்காது. ‘இயற்கை வழியில் பெறப்பட்ட உந்து தடுப்பாற்ற’லுக்குச் சரியான உதாரணம் இது. இது எப்படிச் சாத்தியப்படுகிறது? நம்மைத் தாக்கிய அம்மைக் கிருமிகளை தடுப்பாற்றல் ராணுவத்தில் உள்ள நினைவு செல்கள் (Memory cells) எப்போதும் நினைவில் வைத்துக்கொண்டு, அவை நம் உடலுக்குள் மறுபடி மறுபடி நுழையும்போதெல்லாம் அவற்றை விரட்டிவிடுவதுதான் இதற்குக் காரணம்.

இந்த ‘நினைவாற்றல்’ ஒரு சுவாரசியம் மிகுந்த உடலியல் அறிவியல். இன்னும் சொன்னால், செயற்கைத் தடுப்பாற்றலின் மகிமையே அதுதான். அதைப் பற்றி பின்னால் விளக்குகிறேன்.

எதிரணுக்களைப் பெறும் வழி!

சென்ற வாரங்களில் ‘எதிரணுக்கள்’ (Antibodies) பற்றி அடிக்கடி பேசினோம். அந்த எதிரணு சிப்பாய்களை நாம் பிறக்கும்போதே நம் ரத்த நதியானது தாயின் கருக்கொடி (Placenta) வழியாக இயற்கை வழியில் பெறுவதும் உண்டு; பிறந்த பிறகு வெளியிலிருந்து பெறுவதும் உண்டு. இதற்கு ஓர் உதாரணம், தாய்ப்பால். குழந்தையின் முக்கிய உணவு அதுதான். ஆனால், உணவு கொடுப்பது மட்டுமே அதன் நோக்கமல்ல! குழந்தைக்குத் தேவையான தடுப்பாற்றல் தரும் புரதங்களையும் அது அள்ளித் தருகிறது. அந்தப் புரதங்களுக்கு ‘இமுனோகுளோபுலின்கள்’ (Immunoglobulins) என்று பெயர். எதிரணுக்களுக்கு இன்னொரு பெயர் இது. இப்படி, உடலுக்குள் இருக்கிற எதிரணுக்கள் நேரடியாகப் போராட்டத்துக்கு வராமல், வெளியிலிருந்து பெறப்படும் எதிரணுக்கள் வருவதை ‘இயற்கை வழியில் பெறப்பட்ட பிறவினைத் தடுப்பாற்றல்’ (Natural acquired passive immunity) என்கிறோம்.

இந்த இடத்தில் நீங்கள் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்க நினைக்கலாம். ‘நம் உடலுக்குத்தான் இயற்கையாகவே தடுப்பாற்றல் கிடைத்துவிடுகிறதே, பிறகு எதற்கு டாக்டர் தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்ள வேண்டும் என்கிறீர்கள்?’. காரணம் சொல்கிறேன்.

தடுப்பூசி எனும் ‘யூபிஎஸ்’!

குழந்தைக்குத் தாயிடமிருந்து பெறப்படும் தடுப்பாற்றல் புரதங்கள் அதிகபட்சம் 15 மாதங்களுக்குத்தான் நீடிக்கும். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவை குறைந்து, மறைந்துவிடும். அப்போது அந்தக் குழந்தைக்கு இயற்கைத் தடுப்பாற்றலும் குறைந்துவிடும். இந்த நிலைமையைச் சரி செய்ய வேண்டும். அப்போதுதான் தொற்றுநோய்கள் குழந்தையைத் தாக்காது. அதற்குத் தடுப்பூசிகள்தான் உதவும். மின்சாரம் இல்லாதபோது ‘யூபிஎஸ்’ (UPS) பயன்படுத்துகிறோமல்லவா? அது மாதிரி, உடலில் தடுப்பாற்றல் குறைந்தவர்களுக்குத் தடுப்பூசியோ தடுப்பு மருந்தோ கொடுக்க வேண்டியது கட்டாயம்.

இது, தடுப்பூசிகள் குறித்த சின்ன ‘டீஸர்’தான். இந்தத் தொடரில், ‘தடுப்பூசிகள் என்றால் என்ன? அவற்றின் வகை என்ன? அவை எப்படித் தயாரிக்கப்படுகின்றன? எப்படி அவை வேலை செய்கின்றன? ஊக்கத் தடுப்பூசி (Booster dose) என்றால் என்ன?’ - இப்படியான பல கேள்விகளுக்கு விரிவாகவே பதில் சொல்லப்போகிறேன். பொறுத்திருங்கள்.

கட்டுரையை முடிப்பதற்கு முன்னால், இரண்டு விஷயங்களைச் சொல்லிவிடுகிறேன். ஒரு தடுப்பூசி செலுத்தப்படுவதால் நமக்குக் கிடைக்கும் தடுப்பாற்றலுக்குச் ‘செயற்கை வழியில் பெறப்பட்ட உந்து தடுப்பாற்றல்’ (Artificial acquired active immunity) என்று பெயர். சின்னம்மை, தட்டம்மை, இளம்பிள்ளைவாதம் போன்றவற்றுக்குச் செலுத்தப்படும் தடுப்பூசிகள் இந்த வகைத் தடுப்பாற்றலைத் தருகின்றன. இந்தத் தடுப்பூசிகளில் எந்த நோய்க்குத் தடுப்பாற்றல் தேவைப்படுகிறதோ அந்த நோய்க் கிருமியைத் தடுப்பூசி மூலமாக உடலுக்குள் அனுப்புவது நடைமுறை. சில தடுப்பூசிகளில் கிருமியை அனுப்பாமல், கிருமியை எதிர்த்துப் போராடும் எதிரணுக்களையே நேரடியாக அனுப்புகிறோம். போரில் ஈடுபடும் நாடுகளுக்கு உதவி செய்யும் நாடுகள் படை வீரர்களை அனுப்பாமல் ஆயுதங்களை அனுப்புகிற மாதிரியான வேலை இது. அந்த வகைத் தடுப்பூசிகள் வழங்கும் தடுப்பாற்றலுக்குச் ‘செயற்கை வழியில் பெறப்பட்ட பிறவினைத் தடுப்பாற்றல்’ (Artificial acquired passive immunity) என்று பெயர். இதற்கு ஓர் உதாரணம், ‘பிளாஸ்மா சிகிச்சை’.

அது என்ன ‘பிளாஸ்மா சிகிச்சை’?

கரோனா காலத்தில் ‘பிளாஸ்மா சிகிச்சை’ (Plasma therapy) பற்றிப் பேசக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ரத்தம் குறைந்தவர்களுக்கு ரத்தக் கொடையாளர் மூலம் ரத்தம் பெற்றுச் செலுத்துகிற மாதிரி, கரோனா தாக்கி குணமானவரின் ரத்தத்திலிருந்து ‘பிளாஸ்மா’வைப் பிரித்தெடுத்து கரோனா நோயாளிக்குக் கொடுப்பது ‘பிளாஸ்மா சிகிச்சை’. இதை நற்றமிழில் சொன்னால், தேற்றாளர் ரத்தத்தெளிநீர் சிகிச்சை (Convalescent plasma therapy). இது எப்படி வேலை செய்கிறது? கரோனாவால் பாதிக்கப்பட்டவரின் ‘ரத்தக்கள’த்தில் ஒரு ‘குருச்சேத்திர போர்’ நடந்திருக்கும். அப்போது அவருடைய ரத்தத்தில் கரோனாவுக்கு எதிரான எதிரணுக்கள் உற்பத்தியாகியிருக்கும். அதனால்தான் அவர் குணமாகி இருக்கிறார். ஆகவே, அவருடைய பிளாஸ்மாவில் கரோனா கிருமிகளைக் கொல்லும் அளவுக்கு எதிரணுக்கள் இருக்கும்.

சரி, இப்போது புதிதாக ஒரு கரோனா நோயாளி மோசமான நிலைமையில் சிகிச்சைக்கு வருகிறார் என வைத்துக்கொள்வோம். அவருக்குப் போதிய அளவு எதிரணுக்கள் இல்லை என்ற காரணத்தால்தான் கரோனா அவரைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது. அவருக்கு கரோனாவிலிருந்து தேறியவரின் பிளாஸ்மாவைச் செலுத்தினால், அதிலுள்ள எதிரணுக்கள் அவருடைய உடலுக்குள் சென்றதும் ஏற்கெனவே இருக்கும் கொஞ்சநஞ்ச எதிரணுக்களுடன் கைகோத்துக்கொண்டு புதிய உத்வேகத்துடன் போரிட்டு ஜெயிக்கும். அவர் கரோனாவின் பிடியிலிருந்து தப்பித்துவிடுவார். இது ‘பிளாஸ்மா சிகிச்சை’ தரும் பலன்.

(போர் ‘புரி’வோம்)

பா.லெட்சுமி ஸ்ரீ
பா.லெட்சுமி ஸ்ரீ

படித்தவரின் பதிவு...

அட்டகாசமான துப்பறியும் கதை!

மருத்துவர் கு.கணேசன் எழுதும் தொடர் அறிவியல் சார்ந்தது என்றாலும், அதை அவர் சொல்லும் விதம் ஒரு துப்பறியும் கதைபோல் சுவாரஸ்யமாக உள்ளது. அவரது சரளமான நடை வாசிப்பவரைக் கட்டிப்போடுகிறது. ‘எதிராளியை அறிவது எப்படி?’ கட்டுரையில் ‘பெர்ஃபியூம் போட்டுக்கொள்ளும் பாக்டீரியா’ என்ற தலைப்பே அட்டகாசம். பழுப்பேறும் செடிகொடிகள், ஆக்டோபஸ் கரங்கள், விருந்தாளியின் வருகை எனச் சொல்வளத்தாலும் கருத்துச் செறிவாலும் ‘ஆன்டிஜென்’ பற்றிய பல தகவல்களை அவர் அழகுபடுத்தி மக்களுக்குத் தெளிவாகப் புரியவைத்துவிட்டார்; மருத்துவர்களை மகிழ்ச்சியடையச் செய்துவிட்டார்.

- மருத்துவர் பா. லெட்சுமி ஸ்ரீ, முதுநிலை குடிமை கண் மருத்துவர், அரசு மருத்துவமனை, ஓசூர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in