கே.சுந்தரராமன்
sundararaman.k@hindutamil.co.in
கர்னாடக சங்கீத மூம்மூர்த்திகளில் ஒருவர் முத்துசுவாமி தீட்சிதர். பல தலங்களுக்குச் சென்று அங்கு கோயில் கொண்டிருக்கும் இறைவனைப் போற்றி ஐநூற்றுக்கும் மேற்பட்ட க்ருதிகளை இயற்றியவர். அத்வைத தத்துவம், உருவ வழிபாடு, கோயில் இருக்கும் இடம், அந்த தல இறைவனின் சிறப்புகள், பாடல் அமைந்த ராகத்தை உள்ளடக்கி இவரது க்ருதிகள் அமைந்துள்ளன.
ஹோய்சலா கர்நாடக அந்தணர் குலத்தைச் சேர்ந்த ராமசுவாமி தீட்சிதர் – சுப்புலட்சுமி தம்பதி திருவாரூரில் வசித்து வந்தனர். கோவிந்த தீட்சிதர், அவரது மகன் வேங்கடமகி வழியில் வந்த ராமசுவாமி தீட்சிதர், தெலுங்கு, சம்ஸ்கிருத மொழிகளிலும் கர்னாடக சங்கீதத்திலும் சிறந்த பாண்டித்யம் பெற்றவர். வேதம், மந்திரம் முதலான சாஸ்திரங்களிலும் வீணை வாசிப்பதிலும் வல்லவராக இருந்தார். சுப்புலட்சுமிக்கும் கர்னாடக சங்கீதத்தில் புலமை உண்டு.
ராமசுவாமி தீட்சிதருக்கு 40 வயது வரை குழந்தைப்பேறு கிட்டவில்லை. அவரும் அவரது மனைவியும் ஒவ்வொரு முறையும் வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் செல்லும்போது, இதுகுறித்து வேண்டி வந்தனர். ஒருநாள் அம்பிகை, ராமசுவாமி தீட்சிதரின் கனவில் வந்து, முத்துமாலை ஒன்றை பரிசளித்தாள். திடுக்கிட்டு எழுந்தார் ராமசுவாமி தீட்சிதர். அந்த சமயத்தில் சுப்புலட்சுமியும் திடுக்கிட்டு எழுந்தார். அவரது கனவிலும் அம்பிகை வந்து தனக்கு வெற்றிலை, பழம், மஞ்சள் அளித்ததாகச் சொன்னார் சுப்புலட்சுமி.