போர்முனை டு தெருமுனை 21: ஆமணக்கு ஆயுதம்

போர்முனை டு தெருமுனை 21: ஆமணக்கு ஆயுதம்

பயணங்களில் நாம் கைகளைத் தூய்மைப்படுத்த சானிடைசர் பயன்படுத்துவதைப் போல வேதி-உயிரி-கதிரியக்க-அணு பாதிப்பைத் தடுக்க ஏதேனும் சுலபமான வழி உண்டா? உண்டு.

வேதி ஆயுத பாதிப்பிலிருந்து தப்பிக்க சானிடைசர் போல ஒரு எளிய பாதுகாப்பு முறையை உண்டாக்கியிருக்கிறார்கள் ராணுவ விஞ்ஞானிகள். வேதி ஆயுத தாக்குதலுக்குள்ளான பகுதிகளில் மீட்புப்பணிகளுக்கு செல்லும் நம் வீரர்கள் கவசம் அணிந்திருப்பதால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. ஆனால், அவர்களின் உடைகளில், கவசங்களில், காலணிகளில், ஏன் ஆயுதங்களில் கூட வேதிப்
பொருள் தங்கியிருக்கும். அதைச் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். எப்படிச் சுத்தம் செய்வது... இதற்காக போர்முனை
யிலிருந்து மருத்தவமனைக்கு, ஆய்வுக்கூடத்துக்குச் செல்ல வேண்டுமா? இல்லை.

உயிர்காக்கும் களிமண்

சுத்தப்படுத்திக்கொள்ள தனிநபருக்கான தூய்மைப் பெட்டி (Personal Decontamination Kit) ராணுவ வீரருக்குக் கொடுக்கப்படும். ஈரத் திசுத்தாள்களை நீங்கள் முகம் துடைக்கப் பயன்படுத்தியிருக்கலாம். அதைப்போல சிறிய பைகளில் அடைக்கப்பட்ட பஞ்சு இந்தப் பெட்டியில் இருக்கும். பஞ்சு எப்படி வேதிப்பொருளை சுத்தப்படுத்தும்? வேதிப்பொருளை நீக்க பஞ்சில் கலக்கப்பட்டிருக்கும் பொருள் களிமண்!

ஆம். முல்தானி மிட்டி (Fuller earth) என்ற பெயருள்ள இந்தக் களிமண் அபாயகரமான வேதிப்பொருட்களை உடைகளிலிருந்தும், ஆயுதங்களிலிருந்தும் உறிஞ்சி எடுத்துவிடும். முல்தான் என்ற இடத்தில் (தற்போது இது பாகிஸ்தானில் உள்ளது) இருந்து கிடைக்கப்பெறும் களிமண் என்பதால் இதற்கு முல்தானி மிட்டி என்று பெயர். இந்த மண், எண்ணெயைக் கூட உறிஞ்சிக் கொள்ளும். இதனுடைய சுத்தப்படுத்தும் குணத்தால் அழகு சாதனப் பொருட்களில் பெருமளவில் இது பயன்படுத்தப்படுகிறது. மனிதர்களுக்கு மண்மீது எப்போதும் ஆசை தான்!

அணு-கதிரியக்கத் துகள்களை (Nuclear / Radiological dust) துடைத்துக்கொள்ள இந்தப் பெட்டியில் திரவ வடிவ 
சுத்தப்படுத்தியும் உண்டு. தங்களையும் ஆயுதங்களையும் துடைத்துக்கொள்ள வீரர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
ராணுவ வீரர்கள் தங்களையும் ஆயுதங்களையும் துடைத்து சுத்தப்படுத்திக் கொண்டாலும், ராணுவ வாகனங்களையும் சுத்தப்படுத்த வேண்டும். மேலும், ராணுவ முகாம்கள், பாதிக்கப்பட்ட கட்டிடங்கள், கப்பல்கள் என ராணுவக் கட்டமைப்புகளைச் சுத்தப்படுத்தினா
லொழிய அடுத்த தாக்குதலுக்கு அவற்றை ராணுவம் பயன்படுத்த முடியாது. இதற்காக எளிதில் சுமக்கக்கூடிய தீயணைப்புக்கருவி வடிவில் தூய்மைக்கருவி (Portable decontamination apparatus) உருவாக்கப்பட்டுள்ளது. நீண்ட குழலுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த தெளிப்பானை தூரத்திலிருந்து பயன்படுத்தி வேதி ஆயுதங்களைச் செயலிழக்கச் செய்யலாம்.

பாதிப்படைந்த நகர்ப்பகுதிகளில் பெரும் நிலப்பரப்பை தெளிப்பான்கள் முலம் தூய்மைப்படுத்துவது சிரமம். அதனால் வாகனங்களில் எடுத்துச் சென்று தெளிக்கும் வகையில் தூய்மைப்படுத்தும் திரவ வேதிப்பொருள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

சயனைட் கொல்லி

சயனைட் ஒரு வேதி ஆயுதமாக பலரைக் கொல்லவும், பிடிபடுகிற தீவிரவாதிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளவும் உலக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், ஒரு வேதிப்பொருளாகவும் பல தொழிற்சாலைகளில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. தீ விபத்துகளில் எழும் புகையில் ஹைட்ரஜன் சயனைட் கலந்திருக்கும். தீயினால் மட்டுமின்றி புகையைச் சுவாசிப்பதனால் கணிச
மானவர்கள் இறக்கிறார்கள்.

சயனைட் விஷத்தாக்குதலுக்கு மாற்று மருந்தாகப் (Antidote) பயன்படுத்தப்படும் பல மருந்துகளில் உள்ள குறைகளைத் தீர்க்க, ஆல்ஃபா கீடோகுளூடரேட் (Alpha-Keto Glutarate, A-KG) என்ற மருந்தை ராணுவ விஞ்ஞானிகள் கையிலெடுத்துள்ளனர். வாய் வழி மருந்தாக கொடுக்கப்படும் இது சயனைட் விஷத்தை முறிப்பதில் நல்ல வெற்றியைத் தந்துள்ளது. ஆல்கெட் (ALKET) என்று பெயரிடப்பட்ட இந்த மருந்து தீப்புகையைச் சுவாசித்தவர்களையும் சயனைட் வேதி ஆயுதத் தாக்குதலில் சிக்கிய பொதுமக்களையும் காக்க ஒரு பெரும் பாதுகாப்பு ஆயுதம். சொட்டு மருந்தைப்போல வாய் வழியாக இம்மருந்தைத் தரமுடிவதால் பாதிக்கப்பட்ட இடத்திலேயே உடனடியாக மருத்துவப் பணியாளர்களின் துணையின்றி செயல்பட்டு உயிரைக்காக்கலாம். பாதுகாப்பு படையினரிடம் பிடிபட்டபின் தற்கொலைக்கு முயலும் தீவிரவாதிகளையும் இந்த மருந்தினால் காப்பாற்றி (!) அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி நாட்டு மக்களை எதிர்காலத் தாக்குதல்களிலிருந்து காப்பாற்றலாம்.

ஆந்த்ராக்ஸ் அழி

வேதி-அணு ஆயுதங்களை தூய்மையாக்குவதைப்பற்றி பேசினோம். உயிரி ஆயுதங்களுக்கான தற்காப்பு என்ன? பேசிலஸ் ஆந்தராஸிஸ் என்ற பாக்டீரியாவால் பரவும் ஆந்த்ராக்ஸ் நோய் அபாயகரமானது. இந்த ஆந்த்ராக்ஸ் கிருமி உயிரி ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் அச்சம் உலக அளவில் இருக்கிறது. அப்படி பயன்படுத்தப்பட்டால், இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இந்தக் கிருமி பேரழிவாக முடியும். ஆந்த்ராக்ஸ் கிருமியின் பாதிப்பைக் கண்டறிந்தால் தான் மீட்பு நடவடிக்கையில் இறங்க முடியும். எப்படி கண்டறிவது?

டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள ஆந்த்ராக்ஸ் சோதனைப் பெட்டி (Detection kit) இதற்கு உதவுகிறது. நோய்களைக் கண்டறிய வழக்கமாக ‘எலிசா’ (ELISA-Enzyme Linked Immuno Sorbent Assay) என்ற சோதனை செய்யப்படும். மறைமுக ‘எலிசா’ முறையில் வடிவமைக்கப்பட்ட இந்த ஆந்த்ராக்ஸ் சோதனையில், பாதிக்கப்பட்டவரின் ரத்த பிளாஸ்மா பரிசோதனை செய்யப்படும். பழுப்பு நிறம் தோன்றினால் ஆந்த்ராக்ஸ் பாதிப்பு உள்ளது என்று அர்த்தம். இரண்டு நிமிடங்களில் சோதனை முடிவு தெரிந்துவிடும் என்பதால் உடனடியாக சிகிச்சையைத் தொடங்கி உயிர்களைக் காப்பாற்றலாம்.

ஆமணக்கு ஆயுதம்

 ‘ரிசின்’ (Ricin) - இது இன்னொரு பயங்கரமான உயிரி ஆயுதம். ‘ரிசின்’ வேறு ஒன்றுமில்லை. ஆமணக்கு விதையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு புரதப் பொருள். இது மனித செல்களைத் தாக்கி உயிரைக் கொல்லும். இது எளிதில் கிடைக்கும் இயற்கைப் பொருள் என்பதால் இதைப் பயன்படுத்தும் ஆபத்துகள் மிக அதிகம். ராணுவ விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள சோதனை மூலம் சுமார் ஏழு நிமிடங்களில் ரிசினின் பாதிப்பைக் கண்டறியலாம். இதனால் உடனடியாக சிகிச்சையிலும் மீட்புப்பணிகளிலும் களமிறங்கலாம்.

காற்றுக் கவசக்கூடாரம்

வேதி-உயிரி-கதிரியக்க-அணுத் தாக்குதல் நடந்தால் மக்களைக் காப்பாற்ற மருத்துவ சிகிச்சையோடு, அவர்களைத் தங்க வைக்கப் பாதுகாப்பான இடமும் வேண்டும். நடமாடும் கவசக்கூடாரம், நடமாடும் ஆய்வுக்கூடம் இவற்றை உருவாக்கிய ராணுவ விஞ்ஞானிகள், தற்காலிகக் கவசக்கூடாரத்தையும் வடிவமைத்திருக்கிறார்கள். வழக்கமான கூடாரத்தைப் போலில்லாமல் காற்றை நிரப்பினால் விரியும் பலூன் போல, காற்றை நிரப்பினால் இந்தத் தற்காலிகக் கூடாரம் விரியும். வேதி-உயிரி-கதிரியக்க-அணு தாக்குதலைத் தடுக்கும் இந்தக் கூடாரத்தை 10 நிமிடங்களில் விரித்து விடலாம். 30 நிமிடங்களில் காற்றுப்போக்கி, மின்வசதி உள்ளிட்ட பிறவற்றை
யும் இயக்கிவிடலாம்.

இக்கூடாரத்தில் மருத்துவ உயிர்காக்கும் உபகரணங்களும் உண்டு. மடித்த நிலையில் ராணுவ வீரர்கள் இதை எங்கு வேண்டுமானாலும் கையில் எடுத்துச் செல்லலாம். ஒரு கூடாரத்தில் 10 பேர் 48 மணிநேரம் பாதுகாப்பாகத் தங்கலாம். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்தக் கூடாரத்தை ராணுவக் கட்டுப்பாட்டு மையமாக, மருத்துவ உதவி மையமாக அல்லது மீட்பு நிவாரண அலுவலகமாகப் பயன்படுத்தலாம்.

வேதி-உயிரி-கதிரியக்க-அணு தாக்குதல்களைத் தடுக்க தொடர்ந்து பல ஆராய்ச்சி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆளில்லா விமானங்களில் உணரிகளைப் பறக்க வைத்து பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வு செய்வது, லேசர் அலைக்கற்றைகளை வைத்து காற்றில் கலந்திருக்கும் வேதிப்பொருள்களைக் கண்டறிவது எனப் பலதரப்பட்ட மும்முர ஆய்வுகளில் நமது விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள். வேதி-உயிரி-கதிரியக்க-அணு தாக்குதல்கள் பேரழிவுகள்தான். ஆனாலும் பேரறிவால் பேரழிவை எதிர்கொள்ள, தீர்ந்து போகாத திறமைகளோடும் நசிந்து போகாத நம்பிக்கை களோடும் உழைத்து வரும் நம் விஞ்ஞானிகளை உற்சாகப்படுத்துவோம்.

பண்டிகைக் காலங்களில் வீடுகளுக்கு வண்ணம் பூசுவது வழக்கம். அழகுக்காகவும் சுவர்களைப் பாதுகாக்கவும் வண்ணம் பூசப்படுகிறது. ஆனால், ராணுவ விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கும் வண்ணப்பூச்சை பூசினால் இரண்டாண்டுகளுக்கு அந்த அறையில் கொசுக்கள் வராது. அப்படியா?

(பேசுவோம்...)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in