கண்ணான கண்ணே 37

கண்ணான கண்ணே 37

தாய்மை தரும் பேரானந்தத்தில் பெண்கள் தங்களை மறந்துவிடுகின்றனர். ஏன் குழந்தைக்குள் தன்னை தொலைத்துவிடுகின்றனர். தன் உடலைக் கூட பேணாமலேயே குழந்தையைப் பேணுவதை வேண்டி விரும்பி ஏற்கின்றனர்.

ஆனால், கருவில் குழந்தையைச் சுமந்தபோது எத்தனை மெனக்கிடலுடன் உடலைப் பாதுகாத்தீர்களோ அதே மெனக்கிடலுடன் குழந்தைப் பேறுக்குப் பின்னரும் உடலைப் பேணுவது அவசியம். குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டுமானால் அன்னையும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமல்லவா? அதனால், பெண்ணே உனைப் பேணு.

பேறுகாலத்திற்குப் பின் தாய் உடலை பக்குவமாகப் பராமரிக்க சில உணவு வகைகளை உட்கொள்வது மிகமிக அவசியம். அவற்றைப் பட்டியலிடுகிறேன்.

கோந்து லட்டு...

இயற்கை பிசின் அல்லது கோந்து. அதாவது சில மரங்களில் இருந்து கிடைக்கும் கோந்தை நாம் உட்கொள்ளலாம். அத்தகைய கோந்தை பேறுகாலத்திற்குப் பின் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். இவை நோய் எதிர்ப்பு சக்தியைத் தரவல்லது. பிறப்புறுப்பை வலுப்படுத்தும். இன்சுலின் உணர்திறனை அதிகப்படுத்தும். ஆதலால் இந்தப்  பிசினை உணவில் சேர்க்க மறந்துவிடாதீர்கள். கோந்தைக் கொண்டு வீட்டில் பெரியவர்கள் லட்டு செய்வது வழக்கம். கோந்துடன் உலர்பழ வகைகளைச் சேர்த்து லட்டு செய்து கொடுப்பது குஜராத் போன்ற வடமாநிலங்களில் வழக்கமாக இருக்கிறது.

பேறுகாலம் முடிந்த முதல் மாதத்தில் கோந்தை இப்படி உட்கொள்ளலாம். இரண்டாவது மாதத்தில் கோந்தை தண்ணீரில் ஊறவைத்து பால், குங்குமப்பூ, சர்க்கரை சேர்த்து கீர் செய்து சாப்பிடலாம். இவை இரண்டுமே உங்களுக்குப் பிடிக்காவிட்டால் மூலிகைகளுடன் சேர்த்து தேநீராக அருந்தலாம்.

ஓமம்...

அஜீரனக் கோளாறு என்றால் நாம்தான் ஆன்டாசிட் மருந்துகளை நோக்கிச் செல்வோம். ஆனால், நம் பாட்டியோ வீட்டிலேயே ஏதாவது மூலிகையைத் தேடுவார். பாட்டி பயன்படுத்தும் அரியவகை மூலிகைகளில் ஒன்றுதான் இந்த ஓமம். இதில் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு என இரண்டு சக்திகளுமே ஒருசேர இருக்கின்றன. பச்சிளங் குழந்தையின் தாய் தொடர்ச்சியாக 8 மணி நேரம் உறங்க இயலாது. தடைபடும் தூக்கத்தால் தாய்க்கு அஜீரனக் கோளாறு ஏற்படுவது இயல்பே. இந்த அஜீரனத்திற்கு தீர்வு தரும் மருந்து ஓமம் போன்று வேறு ஏதுமில்லை.

ஓம நீர், பேறுகாலத்துக்குப் பின் அருந்த வேண்டிய பானம். அவ்வாறு அருந்த விருப்பமில்லை என்றால் சப்பாத்தி, பராத்தா மாவில் சேர்த்து பிசைந்து பயன்படுத்தவும். அரிசிக் கஞ்சியில் கொஞ்சம் ஓமம் சேர்த்தால் அதன் மனமே தனி. கொஞ்சம் ஓமம், நெய், நல்லெண்ணெய் சேர்த்து கபாலத்தில் மசாஜ் செய்தால் கேசம் பளபளக்கும், சருமம் மினுமினுக்கும்.

பாதாம்...

கர்ப்பகாலத்தில் பாதாம் சாப்பிடுவதன் அவசியத்தை நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். பேறுகாலத்துக்குப் பின்னரும் பாதாம் தாயின் உடலுக்கு நலம் சேர்ப்பதாக இருக்கிறது. ஆனால், உள்நாட்டில் கிடைக்கும் பாதாமைத் தேர்வு செய்யுங்கள். குறிப்பாக இமாலய பாதாம் என்றால் இன்னும் பலன் தரும். அதிலிருக்கும் டோக்கோஃபெரால்ஸ், ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ் உங்கள் கூந்தல் இழந்த பளபளப்பை மீட்டுத் தரும். முகம் இழந்த ஜொலிப்பையும் மீட்டுத் தரும். அதிலிருக்கும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் எலும்பு அடர்த்தியை வலுப்படுத்தும். வயிறு, புட்டம், தொடைப் பகுதிகளில் தேங்கும் தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும்.

முந்தைய இரவே சில பாதாம்களை தண்ணீரில் ஊறவைத்துவிட்டு மறுநாள் காலையில் அவற்றின் தோலை நீக்கிவிட்டு உண்ணவும். பர்ஃபி, லட்டு போன்ற வீட்டில் செய்யப்படும் பலகாரங்களில் தாராளமாக பாதாம் பயன்படுத்தவும். காஷ்மீரில் காவா டீ என்பது மிகவும் பிரபலம். குங்குமப் பூ, ஏலக்காய், லவங்கப்பட்டை, ரோஜா இதழ்கள், கையால் நசுக்கப்பட்ட தேயிலை ஆகியனவற்றை கொதிக்க வைத்து அந்த நீரை வடிகட்டி, நொறுக்கப்பட்ட பாதாம் அடங்கிய பாத்திரத்தில் சேர்த்து பின்னர் பருகுவர். இதுபோன்று காவா டீ செய்துகூட குடிக்கலாம்.

கம்பு...

பேறுகாலத்துக்குப் பின்னர் உட்கொள்ள வேண்டிய முக்கியமான உணவுகளில் கம்பு 4-வது இடத்தைப் பிடிக்கிறது. இதில் தாது உப்புகள், நார்ச்சத்து, அமினோ அமிலங்கள் நிறைவாக இருக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உதிரப்போக்கினால் உருவாகும் அரிப்பு, வெள்ளைபடுதல், தொற்றுநோய்களைத் தடுக்கிறது. தைராய்டு, இன்சுலின் ஆகிய இரு முக்கிய ஹார்மோன் செயல்பாட்டையும் சீராக்குகிறது. கம்புடன் சற்று தாராளமாகவே நெய்யும் சேர்த்துச் சாப்பிடலாம். கம்பங்கூழ், கம்பங்கஞ்சி, கம்பு ரொட்டி, கம்பு தோசை என விதவிதமாக சமைக்க வழிகள் இருக்கின்றன.

சோம்பு...

அறுசுவை உணவு குறிப்பாக அசைவ உணவுக்குப் பின்னர் வாய்மணக்க சோம்பு உட்கொள்கிறோம். சோம்பில் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் குணநலன் இருக்கிறது. சோம்பில் உள்ள வைட்டமின்களும் மினரல்களும் குடல் செயல்பாட்டை சீராக வைக்கிறது. வடக்கே சிலர் வெற்றிலையில் குல்கந்து, சோம்பு சேர்த்து சாப்பிடுவது உண்டு. அதன் நன்மையை எல்லோருமே பயன்படுத்திப் பெறலாம். பிறப்புறுப்பு நோய் தொற்றுகளை விரட்டும் தன்மை கொண்டது சோம்பு.

எள்...

எள் எனக்கு மிகவும் பிடித்தமான விதை. இதிலிருக்கும் அடிப்படை கொழுப்பு முதுகுத் தண்டுவடத்தைப் பலப்
படுத்துகிறது. பசியை சீர்படுத்தும் சக்தி கொண்டது. அசைந்துகொடுக்காத கொழுப்பைக்கூட கரைக்க வல்லது. அரபு நாட்டுப் பெண்களின் செழிப்பான தோலுக்கு எள் தான் முக்கியக் காரணம்.

எள் உருண்டை, எள் மிட்டாய், எள் சட்டினி, நல்லெண்ணெய் என எள்ளை உணவில் சேர்த்துக்கொள்ள எக்கச்சக்க வகைகள் இருக்கின்றன.

ஆளி விதை...

இந்தியன் சூப்பர் ஃபுட் என்ற எனது புத்தகத்தில் ஆளி விதையை நான் அழகைக் கூட்டும் மாத்திரை என்றே குறிப்பிட்டிருக்கிறேன். இதிலிருக்கும் இரும்புச் சத்தும், உடல் சோர்வை விரட்டும் தன்மையும் வேறெதிலும் கிடைக்காதது. தேங்காய்த் தண்ணீரில் ஆளிவிதையை ஊறவைத்து அருந்தினால் பேறுகாலத்திற்குப் பிந்தைய உதிரப்போக்கால் உடல் இழக்கும் தாதுக்களை எல்லாம் மீட்டுத் தரும்.

ஆளிவிதை லட்டு செய்து சாப்பிடலாம். எள்ளையும் ஆளிவிதையையும் கொண்டு பொடி திரித்தும் சாப்பிடலாம். ஏன் சட்டினிகூட செய்யலாம்.

தேங்காய்...

இயற்கை அன்னை நல்கிய ஊட்டச்சத்து நிறைந்த உணவு. தேங்காய்ப் பாலில் இருக்கும் லாரிக் அமிலம் நம்மை அனைத்து விதமான நோய் தொற்றுகளில் இருந்தும் காக்கும். நரம்புகளைப் பலப்படுத்தும். மனதை பக்குவப்படுத்தும் மருந்தாகவும் செயல்படும். தேங்காய் சேர்த்துக் கொள்வது தாய்க்கு பால் சுரக்கவும் உதவும்.

தேங்காய்த் தண்ணீரில் பாலாடை சேர்த்துப் பருகினால் முதுகுத் தண்டுவடமும், தசைகளும் பலப்படும். லட்டு, பர்ஃபியில் தேங்காய்த் துருவல் சேர்த்து சாப்பிடலாம். தேங்காய் சட்டினி செய்வதும் எளிது பலனும் அதிகம்.

வெந்தயம்...

வெந்தயம்.. நமக்கு இதன் பெருமை தெரிவதில்லை. ஆனால், அமெரிக்காவில் இப்போதெல்லாம் இதைத்தான் பாலூட்டும் அன்னைக்கு பரிந்துரைக் கின்றனர். ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுவதோடு தைராய்டு சுரப்பிகளையும் பாதுகாக்கிறது. நம் சமையலறையில் தாளிதத்துக்கு வெந்தயம் அதிகம் பயன்படுகிறது. வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்தும் உண்ணலாம்.

உணவே மருந்து. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்பதற்கு பேறுகாலத்துக்குப் பின்னர் பெண்ணின் உடலைக் கட்டமைப்பதற்கு பரிந்துரைக் கப்பட்டுள்ள இந்த உணவுகளே சரியான சாட்சி. பிள்ளையை கவனிப்பதோடு நம்மையும் பேணுவோம் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியத்துடன் இருப்போம்.

அடுத்த அத்தியாயத்தில் சில பொதுவான குறிப்புகளுடன் ‘கண்ணான கண்ணே’ தொடரை நிறைவு செய்வோம்.

 (வளர்வோம் வளர்ப்போம்...)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in