கண்ணான கண்ணே 36

கண்ணான கண்ணே 36

பேறுகாலம் ஒரு பெண்ணுக்கு மீள் பிறப்பு என்றுதான் என் பாட்டி சொல்வார். மீள் பிறப்பு சார்ந்த நம்பிக்கை தொடர்பான வாத விவாதங்கள் நமக்கு அவசியமில்லை. உடல் அளவிலும், உள ரீதியாகவும் மிகப்பெரிய போராட்டத்திலிருந்து மீள்வதால் அத்தகைய ஒப்பீட்டைச் சொல்வதாக நாம் எடுத்துக் கொள்வோம்.

ஆதலால், குழந்தைக்கு ஜனனம், தாய்க்கு மறு ஜனனம் என்ற ரீதியில் பேறுகாலத்துக்குப் பிந்தைய காலம் மிகமிக முக்கியமானது. மகப்பேறுக்கு பிந்தைய முதல் 40 நாட்களில் தாயின் நலம் பேணுதல் தொடர்பாகத்தான் அடுத்த சில அத்தியாயங்கள் விரியவுள்ளன.
மும்பையில் உள்ள ஒரு கடற்கரை கிராமத்தில்தான் என் பாட்டியின் பூர்வீக வீடு இருந்தது. அங்கே 7, 8 குடும்பங்கள் ஒன்றாக வசித்தன. அந்தக் கால கட்டுமான நிபுணர்களைக் கைதொட்டு வணங்கவேண்டும் என்றே சொல்வேன். என் பாட்டி வீட்டில் ஓர் அறை இருக்கிறது. அது குடும்பத்திலுள்ள எந்தப் பெண் பேறுகாலம் முடித்தாலும் தங்கும் அறை. மிகச் சிறிய அறைதான். ஏன், ஜன்னல்கூட இருக்காது. கிட்டத்தட்ட ஆதிகால குகைபோல் இருக்கும். புதிய தாய் அந்த அறையிலிருந்து கூடத்தின் மற்ற எல்லா பகுதிகளையும் தெளிவாகப் பார்க்க முடியும். ஒரு பார்வையாளரைப் போல் எந்த வேலையிலும் ஈடுபடாமல் அங்கிருந்து நடப்பவற்றை கண்டு ரசிக்கலாம். முழு ஓய்வில், சாது போன்ற உணவுப் பழக்கவழக்கத்துடன் 40 நாட்களுக்கு பாட்டி செய்யும் அந்த வைத்தியத்துக்கு நிகரேதும் இல்லை என்பேன்.

பாட்டி மருத்துவத்தின் மகிமைக்கு ஒரு சிறு உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள். என் பாட்டி பிறந்த பச்சிளங் குழந்தையை மல்லு துணியில் சுற்றிவைப்பார். எனது பால்ய பருவத்தில் நானேகூட அச்சமின்றி அப்படி மல்லு துணியில் சுற்றப்பட்ட குழந்தையை கையில் ஏந்திப் பார்த்திருக்கிறேன். இப்போது மேற்கத்திய நாடுகளில் கர்ப்ப காலத்தின் கடைசிப் பருவத்தில் தாய்மார்களுக்கு பச்சிளங் குழந்தைகளை எப்படித் துணியில் சுற்றி பாதுகாப்பாக வைப்பது என்பது குறித்து பயிற்சிக் கட்டணம் வசூலித்து வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. அதனால், நம் அம்மா, மாமியார், அத்தை, பாட்டி சொல்லும் பாரம்பரியப் பழக்கவழக்கங்களைப் புறந்தள்ளாதீர்கள். இத்தகைய அறிவுரைகளை சிரத்தையுடன் பின்பற்றினால் வெறும் 3 மாதங்களில் உங்கள் திருமணத்துக்குப் பின் உங்கள் கணவர் பரிசளித்த முதல் ஜீன்ஸை அணியும் அளவுக்கு உடல் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும்.

சில கேள்விகளும் அதற்கான பதில்களும்...

1. நான் எனது உடற்பயிற்சிகளை எப்போதிலிருந்து மீண்டும் தொடங்கலாம்?

பேறுகாலத்துக்குப் பிந்தைய முதல் 40 நாட்கள் ஓய்வும், ஆரோக்கிய உணவும்தான் இளம் தாய் மீண்டும் அவரின் உடலைக் கட்டுக்கோப்பாகக் கட்டமைக்க உதவும். ஓய்வும், ஆரோக்கியமும் நிறைந்த உடல்தான் உடற்பயிற்சிக்கான முழு பலனையும் பெறும். அதனால் அந்த 40 நாள் ஓய்வை பாட்டி சொற்படி கேட்டு நடக்கவும்.

அதற்காக முதல் 40 நாட்களும் நான் பூரண படுக்கை ஓய்வில் இருக்கச் சொல்லவில்லை. மாறாக அவ்வப்போது குழந்தையைச் சுமந்தவாறு குறுநடை வீட்டுக்குள்ளேயே நடக்கலாம். அவ்வப்போது சும்மாவாவது எழுந்து நிற்கலாம். சிறு வேலைகளைச் செய்யலாம். ஆனால், இதைச் செய்வதுகூட உங்களுக்கு மிகப் பெரிய சோர்வைக் கொடுக்கும். இத்தகைய சோர்விலிருந்து மீளத்தான் 40 நாட்கள் ஓய்வும் பத்தியச் சாப்பாடும். அவை உடலுக்கு உற்சாகத்தை அளிக்கும். அதன் பின்னர் நீங்கள் உங்களின் வழக்கமான உடற்பயிற்சிகளைச் செய்யும்போது மூன்றே மாதங்களில் உடல் அசாத்திய பொலிவு பெறும்.

ஒரு சிலருக்கு சற்று கூடுதலாக அதிகபட்சமாக 9 மாதங்கள்வரை இயல்பான உடல் வாகுக்குத் திரும்ப காலம் பிடிக்கும். பொறுமையும் நிதானமும் அவசியம். உடல் மொழியைக் கேட்காமல் கிராஷ் டயட் என்று சென்றால் ஹார்மோன்கள் குழம்பி, இழந்த எடையைவிட இருமடங்கு பெறும் அபாயம்கூட ஏற்படும்.

2.பேறுகாலத்திற்குப் பின்னர் தரப்படும் அந்த ‘லட்டை' (மருந்து உருண்டையை) நான் கண்டிப்பாக சாப்பிட வேண்டுமா?
நிச்சயமாக. அதில் மாற்றுக் கருத்தே இல்லை. வேண்டுமென்றால் உருண்டையின் அளவைவேண்டுமானால் உங்கள் வசதிக்கு ஏற்ப சிறிதாக்கிக் கொள்ளலாம். அவற்றில் ஃபைட்டோநியூட்ரியன்ட்ஸ் நிறைந்திருக்கும். அவை குடலில்உள்ள நல்ல பாக்டீரியாக்களை மீட்டெடுப்பதுடன், ரத்தத்தின் சர்க்கரை அளவை சீராகவைக்கும். கூடவே, ரகசியமாக உங்கள் கேசத்தை ஆரோக்கியமாகவும், சருமத்தை பளபளப்பாகவும் பராமரிக்கும். நம் பாட்டி செய்யும் அந்த உருண்டையை பிராண்டிங், பொஷிஷனிங் செய்
திருந்தால் இந்தியாவின் அந்த தயாரிப்புக்கு சர்வதேச சந்தையில் மிகப் பெரிய வரவேற்பு இருந்திருக்கும்.

3. தாய்ப்பால் புகட்டுவதற்கு ஏதேனும் உபகரணங்கள் தேவைப்படுமா?

தாய்ப்பால் புகட்டுவதில் எந்தவித சிக்கலுமே இருக்காது. உடலில் நைட்ரஜன் அளவை சீராக வைத்துக் கொள்வது அவசியம். அதனால்தான் பாலூட்டும் அன்னைக்கு புரதச்சத்து அதிகம் தேவை எனக் கூறப்படுகிறது. அதற்கு பாட்டி சொல்லும் பத்திய உணவும், சீரான தூக்கமும் அமைதியான நிம்மதியான வாழ்க்கை முறையும் அவசியம். குழந்தையை எப்படி மார்போடு அணைத்து பால் அருந்தச் செய்வது என்ற நுட்பத்தை மட்டும் வீட்டுப் பெரியவர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள். குழந்தை உடனே கற்றுக்கொள்ளும்.

4. சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தால், எனது உடல்வாகை மீட்டெடுப்பதில் கால தாமதமாகுமா?

சிசேரியன் பிரசவம் உங்களைவிட உங்களின் குழந்தைக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்பேன். ஒருவேளை சிசேரியன் கடைசி நேரத் தேவையாக இருந்திருந்தால் அதை பெரிதாக்க வேண்டாம். ஆனால், கர்ப்பத்தின் ஆரம்பித்திலிருந்தே உங்களின் மருத்துவர் சிசேரியன் அறுவைசிகிச்சைக்கு ஊக்குவித்தால் நீங்கள் மருத்துவரை மாற்றியிருக்க வேண்டியது அவசியம்.

சிசேரியன் பிரசவம், கர்ப்பகால சர்க்கரை நோய், கர்ப்பகால ரத்த அழுத்தம், இரட்டைக் குழந்தை என எதுவாக இருந்தாலும் அதிகபட்சமாக ஓராண்டுக்குள் உடல்வாகை மீண்டும் பெறலாம். அதற்கு முதலில் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை சுய விமர்சனத்துக்கு உட்படுத்தாமல் இயல்பானதுதானே என்று கொண்டாடுங்கள்.

5. பேறுகாலத்திற்குப் பின்னால் உதிரப்போக்கு எப்போது நிற்கும்?

ஒரு வாரம் முதல் 10 நாட்கள்வரை உதிரப்போக்கு இருக்கலாம். பேறுகாலத்துக்குப் பின்னர் வழங்கப்படும் பத்திய உணவு உங்களின் கர்ப்பப்பையை சுத்தப் படுத்தும் வகையில்தான் பாட்டியோ அம்மாவோ திட்டமிட்டிருப்பார். அதை ஒழுங்காகக் கடைப்பிடித்
தால் ஒரு நீண்ட மாதவிடாய் காலம் என நினைத்துக் கொள்ளும் வகையிலேயே உதிரப்போக்கு இருக்கும். 10 நாட்கள் எளிதே கடந்துவிடும்.

6. இரவு கண் விழித்து குழந்தைக்குப் பாலூட்டுவதால் எனது உடல்வாகை மீட்டெடுப்பதில் சிக்கல் ஏற்படுமா?
உண்மையைச் சொல்ல வேண்டுமானால் உங்களின் சக்தியை நிச்சயமாக அது உறிஞ்சும். அதனால்தான் கர்ப்பகாலத்திலேயும் ஏன் அதற்கு முன்னர் இருந்துமே உடற்பயிற்சியை வழக்கமாக்கிக் கொள்ள அறிவுறுத்துகிறேன்.

உடல் உறுதி உணர்ச்சிகளுக்கு மாயம் செய்யும். உணர்வுபூர்வமான விஷயங்களைக் கையாள உறுதியினைத் தரும். அதனால், உங்கள் குழந்தை ஏதாவது ஓர் இரவில் கைதங்காமல் கரைந்தாலும்கூட இதுவும் கடந்துபோகும் என்று உங்களால் எளிதாக எடுத்துக் கொள்ள இயலும். அதனால் சிறுவயதிலிருந்தே உடற்பயிற்சிக்குப் பழகியிருத்தல் அவசியம்.

7. நான் எப்போது வெளியே செல்லலாம்?

பேறுகாலத்திற்குப் பின்னர் உங்கள் உடல் எப்போது வெளியே செல்லத் தயார் என உங்களுக்கு சமிக்ஞை தருகிறதோ அப்போது செல்லலாம். பொதுவாக 45 நாட்கள் ஓய்வுக்குப் பின் பெரியவர்கள் புதிய தாயை வெளியே செல்ல அனுமதிப்பர். ஆனால், அருகிலிருக்கும் நண்பரின் வீட்டுக்கோ, உறவின் வீட்டுக்கோ சென்றுவந்தால் உடலும் உள்ளமும் உற்சாகம் பெறும் என நீங்கள் நினைத்தால் நிச்சயமாகச் செல்லுங்கள். ஆனால், அதிகபட்சமாக 15 நிமிட பயணதூரத்தைக் கடந்த இடத்திற்குச் செல்லாதீர்கள்.

8. எனது அடுத்த மாதவிடாய் எப்போது தொடங்கும்? எப்போது நான் பணிக்குத் திரும்பலாம்?

பேறுகாலத்திலிருந்து 4 மாதங்களிலோ அல்லது தாய்ப்பால் புகட்டுவதை நிறுத்தும்போதோதான் அடுத்த மாதவிடாய் சுழற்சி ஆரம்பிக்கும். அதற்கு சீரான உணவுப் பழக்கம் அவசியம். அவ்வாறு செய்தால் உங்கள் பேறுகால விடுப்பு முடிந்தவுடனேயே பணிக்குத் திரும்பலாம். ஒருவேளை நீங்கள் பேறுகாலத்திற்குப் பின்னர் வேலையைத் துறப்பதாகத் திட்டமிட்டிருந்தால் ஆரம்பத்திலிருந்தே அதை அலுவலகத்தில் வெளிப்படையாகப் பேசுங்கள். இல்லாவிட்டால், கர்ப்பவதி என்றாலே ஊதியத்துடன் கூடிய விடுப்பைப் பெற்றுவிட்டு பின்னர் வேலையைவிடும் `வேட்டு' என்பதுபோன்ற பொதுவான பிம்பம் ஒன்று உருவாகும். இது பேறுகாலத்துக்குப் பின்னர் பழைய அளவிலேயே வேலையைத் தொடர விரும்பும் பெண்களுக்கு சவாலாகிவிடும்.

9. எனது பாட்டி வயிற்றைச் சுற்றி ஒரு சேலையைச் சுற்றிக் கொள்ளச் சொல்கிறார். அது எனது உப்பிய வயிற்றைத் தட்டையாக்க உதவுமா?

நிச்சயமாக அவசியமானதே. ஆனால், மருத்துவமனைகளில் வழங்கப்படும் வெயிஸ்ட் பெல்ட் எனப்படும் பட்டையை நான் பரிந்துரைக்க மாட்டேன். அவை மூச்சுவிடுவதை சிரமமாக்கிவிடுகின்றன. பாட்டி சொல்வதுபோல் ஒரு துணியை வயிற்றை சுற்றி கட்டிக் கொள்வதால் வயிறுப்பகுதிக்குத் தேவையான ரத்த ஓட்டமும், அதன் மூலம் ஆக்ஸிஜன் வழங்குதலும் சீராக இருக்கிறது. இது தேவையற்ற கொழுப்பைக் கரைக்கிறது. மேலும், பேறுகாலத்திற்குப் பின்னர் சற்றே வலுவிழக்கும் முதுகுத் தண்டுவடத்தைப் பலப்படுத்துகிறது.

10. பேறுகாலத்துக்குப் பின்னர் முடி உதிருமா? என் தலைமுடி நரைக்குமா?

பேறுகாலம் அப்படி ஒன்றும் உங்கள் கேசத்திற்கு கேடு செய்துவிடாது. ஆனால், கர்ப்பகாலத்தின்போது சரியான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றாவிட்டால் பேறுகாலத்திற்குப் பின் தைராய்டு சுரப்பதில் குறைபாடு ஏற்படும். இந்தக் குறைபாட்டால் முடி உதிரலாம். அதனால், உணவுப் பழக்கவழக்கத்தை சீராக திட்டமிடுங்கள்.

11. தாய்ப்பால் புகட்டுவது அவசியமா?

தாய்ப்பாலில் மட்டுமேதான் உங்களின் சிசுவுக்கு மிக மிக அத்தியாவசியமான குறிப்பிட்டவகை பாக்டீரி
யாக்கள் கிடைக்கும். தாய்ப்பாலில்தான் குழந்தைக்குத் தேவையான அத்தனை ஊட்டச்சத்துகளும் நிறைந்திருக்
கின்றன. சில மாதங்களுக்குப் பின்னர் வீட்டில் வளர்க்கப்படும் நாட்டுப் பசுவின் பாலில் சரியான அளவில் தண்ணீர் கலந்து புகட்டலாம். குழந்தையின் மாதத்துக்கு ஏற்ப அரிசி கஞ்சி, கேழ்வரகு கூழ், சத்துமாவு என ஆரம்பிக்கலாம். இதனால் முழுக்க முழுக்க தாய்ப்பாலையே குழந்தை சார்ந்திருப்பதைக் குறைக்கலாம். ஆனால், தாய்ப்பால் புகட்டுவது மிக மிக அவசியம்.

இமாலய மலைகளுக்கு ட்ரெக்கிங் செல்லும் போதெல்லாம் நான் அந்த கிராமவாசிகளின் பழக்கவழக்கங்களைக் கூர்ந்து கவனித்திருக்கிறேன். ஊர் நடுவே கோயில்கள் இருக்கின்றன. அந்தக் கோயில் சாவடிகளில் ஒன்றிரண்டு இளம் பெண்கள் ஊர் குழந்தைகள் அத்தனை பேரையும் பராமரிக்கின்றனர். ஊரில் இருக்கும் எத்தனை பச்சிளங் குழந்தையாக இருந்தாலும் அவர்களே பாலூட்டிப் பராமரிக்கின்றனர். மற்றவர்கள் வேலைக்குச் சென்றுவிடுகின்றனர். அவர்களிடம் கேட்டால் வேலைக்குச் செல்வதைக் காட்டிலும் இப்படி பிள்ளைக்குத் தாய்ப்பால் கொடுப்பது முக்கியம் என்றனர். அந்தக் கோயிலின் கதவு மூடியிருந்தாலும் உள்ளே இருந்த தேவியிடம் இந்தப் பெண்களின் இப்பாரம்பரியப் பழக்கம் என்றும் தொடர வேண்டும் என்று வேண்டிக் கொள்வேன். தாய்ப்பால் புகட்டுவதில் தயக்கம் வேண்டாம்.

பேறுகாலத்துக்குப் பிந்தைய நாட்களுக்கான ஆலோசனை அடுத்த அத்தியாயத்திலும் தொடரும்.

(வளர்வோம் வளர்ப்போம்...)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in