காதல் ஸ்கொயர் 20

காதல் ஸ்கொயர் 20

ஜி.ஆர்.சுரேந்தர்நாத்

மருத்துவமனையில் கண் விழித்த கௌதம், “யாரு இவங்கள்லாம்?” என்று கேட்டவுடன் கௌதமின் அம்மா ரேணுகா பொங்கி வந்த அழுகையை,  புடவை முந்தானையைப் பொத்தி அடக்கினார். “ரேணு...” என்று மனைவியை அதட்டிய மூர்த்தி, “கௌதம்...” என்றபோது அவர் தொண்டை அடைத்தது. அருணும், “கௌதம்...” என்று அழைக்க...கௌதமின் முகத்தில் எவ்வித உணர்ச்சியுமில்லை.

கௌதமை சில வினாடிகள் கவலையுடன் பார்த்த டாக்டர் ரங்கராஜன், “கௌதம்... உங்களுக்கு என்னாச்சுன்னு தெரியுமா?” என்று கேட்க... கௌதம் ‘தெரியாது’ என்பதுபோல் தலையை அசைத்தான். சில வினாடிகள் அமைதிக்குப் பிறகு கௌதம், “நீங்க கௌதம்னு சொல்றீங்களே...அது...” என்றவுடன் அனைவரும் அதிர்ச்சியுடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். டாக்டர், “அது உங்க பேரு...” என்றவுடன், “ம்...பேரு...கௌதம்” என்று முணுமுணுத்த கௌதம் கண்களை மூடிக்கொண்டான்.

“ப்ளீஸ் கம் வித் மீ” என்று கூறிவிட்டு டாக்டர் வெளியே நடக்க... அனைவரும் அவர் பின்னால் சென்றனர். வெளியே வராந்தாவுக்கு வந்தவுடன், ரேணுகா, மூர்த்தியின் தோளில் சாய்ந்துகொண்டு மௌனமாக அழ... அவரை அணைத்து ஆறுதல் சொன்ன மூர்த்தியின் கண்களிலும் கண்ணீர். அருண், மஹிமாவின் கைகளை இறுக அழுத்திப் பிடித்து அழுகையை அடக்கினான். மூர்த்தியின் தோளில் ஆறுதலாகக் கைவைத்த டாக்டர், “ஓரளவு எதிர்பார்த்ததுதான். ஹண்ட்ரட் பர்ஸன்ட் ரெட்ரோக்ரேட் அம்னீஷியா...” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in