காதல் ஸ்கொயர் - 16

காதல் ஸ்கொயர் - 16

காதல் வந்த பிறகு, காதலர்கள் தங்களுக்கென்று ஒரு தனி உலகத்தைப் படைத்துக்கொள்கிறார்கள். கௌதமும் நந்தினியும் விடிய விடிய தூங்காமல், “இப்ப மணி இங்க ரெண்டு, அங்கயும் ரெண்டா?” என்று அபத்தமாக மெசேஜ் அனுப்பிக்கொண்டார்கள். சுற்றிலும் பத்துப் பேர் இருக்கும்போதும், எதையோ நினைத்து வெற்றிடத்தைப் பார்த்துச் சிரித்தார்கள். விழித்திருக்கும் ஒவ்வொரு வினாடியும் அருகிலேயே இருக்க வேண்டும் என்று விருப்பப்பட்டார்கள். மீண்டும் மீண்டும் சந்தித்தார்கள். பேசினார்கள். சிரித்தார்கள்.

சிவப்பு நிறப் பூக்கள் உதிர்ந்து கிடக்கும் ஸ்பெத்தோடியா மரத்தடியில் அமர்ந்தபடி நந்தினி, “கௌதம்…நமக்குக் கல்யாணமாயி… ரெண்டு, மூணு வருஷத்துல நான் செத்துட்டேன்னு வச்சுக்க…” என்று ஆரம்பிக்க, கௌதம், “சீ… பைத்தியம் மாதிரி பேசாத” என்றான்.

“இல்ல… சும்மா ஒரு பேச்சுக்குக் கேக்குறேன். அப்படி செத்துப் போயிட்டேன்னா, இன்னொரு கல்யாணம் பண்ணிப்பியா?” என்றவுடன் கௌதம் குறும்புச் சிரிப்புடன், “வேற வேலை?” என்றான். நந்தினியின் முகம் மாறியது. தொடர்ந்து கௌதம், “இன்னும் கொஞ்சம் சின்னப்பொண்ணா பாத்துக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, உன் நினைப்புல நான் அவ மடில படுத்து அழ… அவ கட்டிப்பிடிச்சு ஆறுதல் சொல்ல… நான் அப்படியே அவகூட கட்டில்ல உருண்டு பொரண்டு அழ…” என்று கூற… பாய்ந்து அவன் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்த நந்தினி ஆவேசத்துடன், “அழறதுக்கு ஏன்டா கட்டில்ல உருண்டு பொரளணும்? நீ மட்டும் இன்னொரு கல்யாணம் பண்ணினன்னு வச்சுக்க… ஜென்மத்துக்கும் உனக்கு ஃபர்ஸ்ட் நைட்டே நடக்காது” என்றாள்.

“ஏன்?”

“ஒவ்வொரு ராத்திரியும் நான் பேயா வந்து, உன் பொண்டாட்டி மேல குடியேறி, ‘டேய்… நான் நந்தினி வந்துருக்கேன்டா... அதுக்குள்ள உனக்கு இன்னொரு பொண்டாட்டி கேக்குதா?’ன்னு உன்னைத் தூக்கிப் போட்டு மிதிப்பேன் பாரு” என்று கூற…கௌதம் சத்தமாகச் சிரித்தான்.

டீப்டேல் ஓடையில் குளித்துவிட்டு, கௌதமும் நந்தினியும் கரையேறினர். நந்தினியின் மேல் நெற்றிமுடி நீரில் கலைந்து, கண்களைத் தாண்டி கொத்தாகத் தொங்கிக்கொண்டிருந்தது. தனது விரல்களால் அவள் முடியைத் தலைக்கு ஏற்றிய கௌதம், நந்தினியை உற்றுப் பார்த்தான். நீண்ட நேரக் குளியலுக்குப் பிறகு, நந்தினி சற்றுமுன் பறித்துக்கட்டிய மல்லிகைப்பூ போல் பளிச்சென்று இருந்தாள். மீண்டும் அவள் நெற்றி முடியைச் சரிசெய்த கௌதம், “அறிவுமதியோட கவிதை ஒண்ணு இருக்கு” என்றபடி அவள் கன்னத்தைத் தடவினான். “என்ன கவிதை?” என்ற நந்தினி கிறக்கத்துடன் கண்களை மூடித் திறந்தாள்.

“நெற்றிமுடியைச்

சரி செய்வதாகத்தான் தொடங்குகிறது

பெரும்பாலும் அது”

என்று  கெளதம்  கவிதையைக்  கூறி  முடிக்க… நந்தினி  உதடுகள்  துடிக்க, “எது?” என்றாள். “இது…” என்று அவள் ஈர உதட்டில் கௌதம் தனது

விரலை வைத்து அழுத்த… நந்தினி, “கௌதம்…” என்று கிசுகிசுப்

பாகக் கூறியபடி அவன் ஈரத்தோளைக் கைவிரல்களால் அழுத்தி

னாள். கௌதம்  இன்னும்  அவளை  நெருங்கி  மூச்சுக்காற்று  உரச  உற்றுப்

பார்த்தான். சில வினாடிகள் கண்கள் அலைபாய தடுமாறினாள் நந்தினி. பின்னர் சட்டென்று கிறக்கத்திலிருந்து விடுபட்டு…சற்றுப் பின்னால் தள்ளி, “இப்ப எனக்கு ஒரு கவிதை தோணுது” என்றாள். “என்ன கவிதை?” என்ற கௌதமின் குரலில் அப்படி ஒரு மயக்கம்.

நந்தினி மெல்லிய சிரிப்புடன்,

“நெஞ்சில் கை வைத்து

தள்ளுவதாகத்தான் முடிகிறது

பெரும்பாலும் அது”

என்று சொல்ல…கௌதம் ஒன்றும் புரியாமல், “எது?” என்றான். “இது…” என்ற நந்தினி அவன் நெஞ்சில் கை வைத்து வேகமாக நீரில் தள்ளிவிட்டு ஓடினாள்.

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள, ஷக்கத்தா மாரியம்மன் கோயிலுக்கு வெளியேயிருந்த புல்வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது கௌதமின் முதுகுப்புற திசையில் பார்த்த நந்தினி திடீரென்று அமைதியானாள். உடனே கௌதம், “அங்க உன்னைவிட அழகா ஒரு பொண்ணு நிக்குதா?” என்றவுடன் நந்தினி, “ஏன் திடீர்னு கேக்குற?” என்றாள்.

“கலகலன்னு பேசிட்டிருக்கிற வயசுப் பசங்க, திடீர்னு பேசுறத நிறுத்தினா, எதிர்ல கொத்து கொத்தா பொண்ணுங்க வர்றாங்கன்னு அர்த்தம். ஒரு அழகான பொண்ணு பேசிகிட்டிருக்கிறப்ப பேச்ச நிறுத்தினா, அவளவிட அழகான பொண்ணு போறான்னு அர்த்தம்” என்றபடி பின்னால் திரும்ப முயல… “கரெக்ட்…” என்ற நந்தினி பாய்ந்து அவன் கண்களைப் பொத்தினாள்.

ஒரு மழைக்கால மாலையில், அந்தப் பரந்த புல்

வெளிச் சரிவில் கௌதம் வேகமாக இறங்கி ஓடினான். பின்னால் நந்தினி மெதுவாக இறங்கியபோது, திடீரென்று பனிப்புகை அவர்களை மூட ஆரம்பித்தது. “கௌதம்… நில்லு” என்று நந்தினி கூறியபோது பனி மிகவும் அடர்த்தியாகப் பரவி, எதிரில் ஒன்றும் தெரியவில்லை. நந்தினி, “கௌதம்… எங்கருக்க?” என்றாள்.

“இங்கதான்…” என்ற கௌதமின் குரல் தூரத்திலிருந்து கேட்டது.

“இங்கன்னா?”

“நீயே கண்டுபிடி”

நந்தினி தனது கைகளை முன்பக்கம் நீட்டியபடி மெதுவாக நடந்தாள். சிறிது தூரம் சென்ற பிறகு நந்தினி, “கௌதம்...” என்று அழைத்தபோது, கௌதம் அவள் அருகில்தான் இருந்தான். ஆனால், அவனுக்கு எதிர்திசையைப் பார்த்தபடி நந்தினி கைகளை வீசிக்கொண்டிருந்தாள். கௌதம் சப்தம் எழுப்பாமல், மங்கலாகத் தெரிந்த நந்தினியின் பின்னால் சென்று நின்றுகொண்டான். நந்தினி, “கௌதம்… கௌதம்…” என்று அழைக்க…கௌதம் பதில் சொல்லவேயில்லை. “கௌதம்… வா… எனக்கு பயமா இருக்கு” என்று முன்னோக்கி நடந்தாள். கௌதம் சிரிப்புடன் அவளைப் பின்தொடர்ந்தான். தொடர்ந்து நந்தினி குரலில் பீதியுடன், “கௌதம்… போதும்… பயமா இருக்கு” என்று கூறியபோது, கௌதம் பின்னாலிருந்து அவள் இடுப்பை இழுத்து அணைக்க... நந்தினி, “ஆ…” என்று பயத்துடன் கத்தினாள். “ஏய்… நான்தான்” என்று கௌதம் அவளைத் திருப்பினான். “அறிவுகெட்ட நாயே…” என்று நந்தினி திரும்பியபோது, பனிப்புகை விலகி, அவள் முகம் தெரிய… நந்தினியின் கண்கள் கலங்கியிருந்தன.

“ஏய்... என்னாச்சு?” என்று கௌதம் அவள் கன்னங்களைத் தாங்கிப் பிடித்தான்.

“நான் பயந்துட்டேன்… பக்கத்துல பள்ளத்தாக்கெல்

லாம் இருக்கு. நீ பாட்டுக்கு பனில கண்ணு தெரியாம…” என்ற நந்தினியின் குரல் அடைத்து, விழியோரம் நீர் வழிய… அவளைப் பிரியத்துடன் பார்த்தபடி, “ஏய்… ஜஸ்ட் ஃபார் ஃபன்” என்றான் சிரிப்புடன்.

நந்தினி பதில் ஒன்றும் சொல்லாமல், கண்ணீரைத் துடைப்பதற்காகக் கையை உயர்த்தினாள்.

“இரு… நீ துடைக்காத. நான் உன் கண்ணீர, ஊதியே காய வைக்கிறேன்” என்று கௌதம் அவள் கையைப் பிடித்தான்.

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம்…”

என்று  நந்தினி  மீண்டும்  கையை  உயர்த்த…

கௌதம் மீண்டும் அவள் கைகளைப் பிடித்தான். திமிறிய அவளை இறுகப்பிடித்து நிறுத்தியபடி, அவள் இடது கன்னத்தில் வழிந்து நின்ற, உலகின் மிக அழகிய கண்ணீர் துளியில் ஊத ஆரம்பித்தான். அவன் மூன்று முறை ஊதிய பிறகு, நந்தினியின் திமிறல் நின்றது, நான்காவது முறை ஊதியபோது… அவன் தோள்களைப் பற்றிக்கொண்டாள். ஐந்தாவது முறை ஊதியபோது உதடுகளைக் கடித்துக்கொண்டாள். ஆறாம் முறை அவன் ஊதிய காற்றை நந்தினியின் உதடுகள் உள்வாங்கிக்கொண்டன.

அடுத்து வந்த மூன்று மாத காலமும், நெஞ்சில் தளும்பத் தளும்ப காதல்… சிரிப்பு… முத்தம்… அணைப்பு… நாட்கள் ஓடியதே தெரியவில்லை.

ஆறு மாத காலப் பயிற்சி நிறைவுற்று, மறுநாள் அனைவரும் கிளம்ப வேண்டும். அருண், கௌதம், நந்தினி மூவருக்கும் சென்னை அலுவலகத்தில்தான் போஸ்டிங். ஊருக்குக் கிளம்புவதற்கு முன்பாக எல்ஸி-3 பேட்ச் பயிற்சியாளர்கள் மசினகுடி சென்றுவிட்டு வருவதாகத் திட்டம். வியாழக்கிழமை காலை 7 மணிக்கே இரண்டு வேன்களில் புறப்பட்டனர். கௌதமும் நந்தினியும் ஏறிய வேனில் இடமின்றி, அருண் பின்னால் வந்த வேனில் ஏறிக்கொண்டான்.

கௌதமின் வேனில் பாட்டும் ஆட்டமுமாக ஏக ரகளை. ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, வேன் மசினக்குடிக்குச் செல்லும் வழியில் உள்ள கல்லட்டி மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தது.

கௌதம் உற்சாகமாக, “கருத்தவன்ல்லாம் கலீஜாம்… கிளப்பி விட்டாங்கஒழச்சவன்ல்லாம் நம்மாளு…ஒதுங்கி நிக்காத” என்று பாடிக்கொண்டிருந்தபோது, 35-வது கொண்டை ஊசி வளைவு வந்தவுடன், சட்டென்று வேன் நிலை தடுமாறியது. கௌதம் பாட்டை நிறுத்த…அனைவரும் ஒன்றும் புரியாமல் டிரைவரைப் பார்த்தனர். டிரைவர் வெளிறிய முகத்துடன் பிரேக்கை அழுத்தினார். பிரேக் பிடிக்காமல் வண்டி சீறி தடுப்புச்சுவரை நோக்கி வேகமாகப் பாய… அனைவரும் பீதியில் அலறினர். நந்தினி திகிலுடன் பாய்ந்து வந்து கௌதமை அணைத்துக்கொண்ட வினாடியில், வேன் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு, 300 அடி ஆழப் பள்ளத்தாக்கில் வேகமாக விழுந்தது.

(தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in