
ஷா ன் படத்தில் அமிதாப்பச்சன் ஆடிப் பாடிய “யம்மா... யம்மா...” பாடல் ஊரெல்லாம் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த நேரம்...
திருவல்லிக்கேணி கிருஷ்ணாம்பேட்டை முக்கில் கண்ணாடிக் கதவுகளோடு திறக்கப்பட்டிருந்த காஸ்ட்லியான ஹாப்பி கார்னர் டெய்லர் ஷாப்பில் அமிதாப்பச்சன் போட்டிருந்த அதே வெள்ளைக் கலர் பெல்ஸ் பேன்ட்டுக்கு ஆர்டர் குவிந்துகொண்டிருந்தது.
முந்திக்கொண்டு முதல் ஆளாக வந்து தைக்கக் கொடுத்தவன் 'டொக் டொக்' குமார்.
பெல்ஸ் பேன்ட், கூலிங்கிளாஸ், கோல்டு வாட்ச் சகிதமாக சென்று தேவி பாரடைஸில் பகல் காட்சி பார்த்தபின் அங்கிருந்து ராயப்பேட்டை வழியாக லாயிட்ஸ் ரோட்டைச் சுற்றிக்கொண்டு நைஸாக வீட்டுக்குத் திரும்பிக்கொள்ளும் டொக் டொக், சாயந்தர வேளைகளில் சாயம் போன காவி வேட்டியும் கட் பனியனுமாகக் கழுத்தைச் சுற்றி சிவப்பு கலர் காசித் துண்டோடு பார்த்தசாரதி கோயில் வாசலில் அமைதியாக நின்று கொண்டிருப்பான்.