
டாக்டர் மோகன வெங்கடாசலபதி
“எத்தனையோ சிறப்பு மருத்துவப் பிரிவுகளைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீங்க. அவங்க எல்லோரையும் விட எல்லாம் தெரிந்த ஒரு ஸ்பெஷல் டாக்டர் இருக்கார், அவரைத் தெரியுமா உங்களுக்கு?” என்றார் என் நண்பரான நுரையீரல் மருத்துவர். ‘நீங்களே சொல்லிடுங்க’ என்பதுபோல் அவரைப் பார்த்தேன். “அவர்தான் டாக்டர் கூகுள். அவரால நாம படற இம்சை இருக்கே…” என்றவர், அதன் பின் பகிர்ந்தவை கீழே.
சென்னையின் பிரபலமான மருத்துவமனை அது. நுரையீரல் மற்றும் இருதயக் கோளாறுக்காக மும்பையிலிருந்து ஒரு நோயாளி அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு மூன்று மகள்கள். மூன்று நாளைக்கு ஒருவர் வீதம் தம் தாயைப் பார்த்துக்கொள்ள வந்தனர். சிகிச்சை விவரங்களை மருத்துவர் விளக்கியவுடன் அடுத்த நாளே ஏகப்பட்ட கேள்விகளுடன் வருவார்கள். இந்த அறிகுறிக்கு என்ன காரணம்? இதை மாற்றி நீங்கள் ஏன் இப்படிச் செய்யக் கூடாது? எதற்காக இந்தப் பரிசோதனைகளைச் செய்யச் சொல்கிறீர்கள்? இந்த சிகிச்சையின் பக்க விளைவு இப்படி என்று தெரிந்தும் ஏன் இதைச் செய்கிறோம்? இப்படியெல்லாம் பலதரப்பட்ட சந்தேகங்களை எழுப்புவார்கள். ஒரு மகளுக்கு விளக்கி முடித்து ‘உஸ் அப்பாடா’ என்று உட்கார்ந்தால் அடுத்த மகள் இன்னும் நான்கு ‘எக்ஸ்ட்ரா’ கேள்விகளோடு வருவார். இவர்களுக்கு விளக்கிச் சொல்வதிலேயே மருத்துவர்ஆயாசமடைந்திருக்கிறார்.
நோயாளியின் உறவினர்களைச் சந்தித்த வகையில் பல மருத்துவர்களுக்கு இத்தகைய அனுபவம் இருக்கும். தவிர இப்படியான முறையான விளக்கங்களை அவ்வப்போது நோயாளிக்கும் அவரது உறவினர்களுக்கும் கொடுத்து வருவது மருத்துவர்களின் கடமையும் கூட. மட்டுமின்றி இதனால் ஏகப்பட்ட குழப்பங்கள் இருபுறமும் தவிர்க்கப்படும் என்பதைப் பல மருத்துவர்கள் அனுபவப்பூர்வமாக உணர்ந்தே இருக்கின்றனர்.