இணையச் சிறையின் பணயக் கைதிகள் 3: இணையமே கதி... தொலைந்தது நிம்மதி!?

இணையச் சிறையின் பணயக் கைதிகள் 3: இணையமே கதி... தொலைந்தது நிம்மதி!?

நீண்ட நேரம் சமூக வலைதளங்களில் மேய்வதால் என்ன தவறு? பல விஷயங்களைக் கற்றுக் கொள்கிறோம். அனைவருடனும் தொடர்பில் இருக்கிறோம். என்றோ தொலைத்த நண்பர்கள், நேற்று அறிமுகமான ஃபேஸ்புக் நட்புகள் என அனைவருடனும் தொடர்பில்தான் இருக்கிறோம். ஆனாலும், ‘மனசு நல்லா இல்லையே சார்!’ என்பதுபோல் உணர்கிறீர்களா? உண்மைதான்.

ஒரு காலம் இருந்தது. இன்னும் அரைமணி நேரத்தில் நண்பர்களைச் சந்திக்கப்போகிறோம் என்பதே அவ்வளவு மகிழ்ச்சியான சங்கதியாக இருக்கும். ஒருவரை ஒருவர் கண்டதும் கட்டித்தழுவி “வாடா மச்சான்... சொல்லுடா மாப்ளே…” என அன்பொழுகப் பாசத்தைப் பகிர்ந்து, எச்சில் காப்பியைக் குடித்து, நண்பன் புகைத்த எச்சில் சிகரெட்டையும் பிடிக்கும்போது இருந்த அன்னியோன்யம் இந்த நவநாகரிக காலத்தில் இல்லையே என்று உணர்ந்திருக்கிறீர்களா?

தொடுதல், பேசுதல், முகர்தல் என அனைத்து உணர்வு நரம்புகளும் வேலை செய்ய நாம் நட்பு பாராட்டிய காலத்தில் செல்போன் இல்லை, ஃபேஸ்புக் இல்லை, ட்விட்டர் இல்லை, இன்ஸ்டாகிராம் இல்லை. ஆனால், நட்பில் ஆத்மார்த்தம் இருந்தது. அன்பில் உண்மைத்தன்மை இருந்தது. கையில் காசில்லை என்று சினிமா போக பயந்தோமா, ஹோட்டல் போகத் தயங்கினோமா… எல்லாவற்றுக்கும் நட்பானது பாலமாக இருந்தது. பணக்குறைகள் மட்டுமல்ல, மனக்குறைகளுக்கும் நண்பர்கள் தீர்வாக இருந்தார்கள்.

அதே அளவு நட்பு பாராட்டினாலும் இன்று எல்லாவற்றிலும் ஒரு செயற்கைத்தன்மை ஒட்டிக்கொண்டுவிட்டது. நேரில் பேசத் தயங்கு

கிறோம். ‘எங்கேடா இவன் வந்து ஒட்டிக் கொண்டால் மொக்கை போட்டுவிடுவானே’ என்று பயப்படுகிறோம். வசதிக்கு ஏற்ப செல்போனை எடுக்கிறோம். அல்லது கண்டுகொள்ளாமல் விடுகிறோம். ‘நீங்க நாட் ரீச்சபிளா இருந்தீங்க’ என்கிறோம் கூசாமல்.

வெளியூரில் இருக்கும்போது “வாடா நண்பா ஊருக்கு” என்றார் ஒருவர். திடீரென ஒரு நாள் அவர் ஊருக்குச் சென்றவன் அவருக்குக் குறுந்தகவல் அனுப்ப, “ஸாரிடா. அவுட் ஆஃப் ஸ்டேஷன்” என்றார் மத்திய அமைச்சர் கணக்காக. ஏதோ பொறிதட்ட விசாரித்தால் “இதோ இங்கேதானே இருக்கான்” என்று அவரது எதிர் வீட்டிலிருந்து பதில் வருகிறது. பிறகு விசாரித்தால் இன்னொரு நண்பர் ஊருக்கு வந்தபோதும் இதே போலத்தான் நடந்துகொண்டிருக்கிறார்.

எனக்கும் அவருக்கும் ஒரு விரோதமும் இல்லை. கொடுக்கல் வாங்கலும் இல்லை. ஒரே ஒரு உறவுதான். ஒரே கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். ஆனால், வாட்ஸ்-அப்பில் பேசும்போது எல்லோரையும் ரொம்ப மிஸ் பண்ணுவதாகவும், தன் ஊருக்கு யார் வந்தாலும் தன்னைச் சந்திக்காமல் போகக்கூடாது என்றும் அன்புக்கட்டளை போடுவார். பின் எதற்கு அந்தச் சந்தர்ப்பம் வரும்போது அதைத் தவிர்க்கிறார்?

இதுதான் நண்பர்களே... ஆன்லைன் செய்யும் அவலங்களில் ஒன்று. ஃபேஸ்புக்கில் சாட்டிங் செய்யலாம். நம் முக பாவனைகள் எதிராளிக்குத் தெரியாது. பொய் சொல்லலாம். உண்மை சொல்லலாம். நடிக்கிறோமா, புளுகுகிறோமா என்றெல்லாம் வாட்ஸ்-அப்புக்குத் தெரியாது. இது ஒரு சவுகரியம். வீடியோ காலில் பேசுவதுகூட சலிப்பாக இருக்கிறதாம். ஒன்லி மெசேஜிங் மட்டும்தான் என்கிறார் இன்னொரு நண்பர். இப்படி இணையத்திலேயே பெரும்பாலான நேரத்தைச் செலவு செய்பவர்களுக்கு மனச்சோர்வு, மனப்பதற்றம், அளவுக்கு மீறிய தனிமையுணர்ச்சி இதெல்லாம் ஏற்படுவதாகப் பல ஆய்வுகள் கூறுகின்றன. எலெக்ட்ரானிக் கருவிகளைப் பயன்படுத்துவதற்குக் கூலியாக உண்மையான நமது மன மகிழ்ச்சியை இழக்கிறோம். நாகரிகம் நட்பை விலையாகக் கேட்கிறது.

ஏன் இப்படி நடக்கிறது? நமது உணர்ச்சிகளுக்கான இருப்பிடம் மூளையில் உள்ள ‘லிம்பிக் ஏரியா’ என்ற பகுதி. இயல்பான கலந்துரையாடல்கள், நண்பர்கள் குழாமுடன் நேரம் செலவிடுதல், சினிமா போகும்போதும் ஹோட்டலில் சாப்பிடும்போதும் துள்ளுவதும் குடிப்பதும் குதிப்பதுமாக நமது மனம் துள்ளாட்டம் போடும்போது நமது ‘லிம்பிக் ஏரியா’ ஒருவித அதிர்வுக்குப் போகிறது. நல்ல விதமான நேர்மறை அதிர்வுதான் இது. இதை ‘limbic resonance’ என்றே சொல்கிறது நரம்புச் செயல்பாட்டியல். ஆனால், இவையெல்லாம் இயற்கையான முறையில் நம் நட்பு வட்டத்தில் நேரம் செலவிடும்போது நடப்பவை. என்னதான் கணினி யுகத்தில் வாழ்ந்தாலும் எல்லா விதக்கருவிகளுடன் நாம் பரஸ்பரம் அன்பைப் பறிமாறிக்கொண்டாலும் நம் ‘லிம்பிக் ஏரியா’ போதுமான அதிர்வுக்கு ஆளாவதில்லை. ஆகவே, போதுமான நிறைவும் மகிழ்வும் அந்தப் பரிமாற்றங்களில் இருப்பதில்லை. ஊமைப்படம் பார்ப்பதைப் போலாகிவிடுகிறது பலரின் ‘கேட்ஜட்’ (gadget) வாழ்க்கை. இதனால்தான் நீண்டநேரம் ஆன்லைனில் இருப்பவர்களும் சமூக வலைதளங்களிலேயே நேரத்தைச் செலவழித்து நிஜ வாழ்வில் நேருக்கு நேரான, முகத்துக்கு முகம் பார்க்கும் உரையாடல்களைத் தொடர இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகின்றனர். குழந்தைகளின் நிலைமை இந்த விஷயத்தில் இன்னும் மோசம்.

பள்ளிப்படிப்புக் காலத்தில் படிக்க வேண்டும், நல்ல கல்லூரியில் சேரவேண்டும் என்ற ஒரே லட்சியத்தில்படிப்பிலேயே கவனம் செலுத்துவதால்நிறைய விஷயங்களை இழக்கின்றனர் மாணவர்கள். விளையாட்டு, ஒன்றுகூடிப் பேசுதல், அரட்டை போன்றவற்றை மெல்ல மிக மெல்ல அவர்கள் இழக்கிறார்கள். அதன் விளைவு அப்போது  தெரியாவிட்டாலும் சில ஆண்டுகள் கழித்துக் கல்லூரி மாணவர்களானவுடன் வெளியே தெரியஆரம்பிக்கிறது. எல்லோருடனும் சாதாரணமாக முகம் கொடுத்துப் பேசிப்பழக முடிவதில்லை. அளவுக்குமீறிய கூச்ச சுபாவம். தன்மீதே நம்பிக்கையற்றுப் போதல், கழிவிரக்கம் போன்றவற்றால் ஒரு மனநோயாளியாகவே மாறிவிடுகின்றனர்.

மிகப் புகழ் வாய்ந்த தொழில் நுட்பக் கல்லூரி மாணவர் ஒருவரை என்னிடம் அழைத்து வந்தனர். “எப்போ பாத்தாலும் கம்ப்யூட்டர்ல ஏதோ சீரியல் பாத்துட்டே இருக்கான் சார். காலேஜுக்கும் போறதில்லே. பரீட்சைக்கும் போகலே. எங்க போனையும் எடுக்கலைங்கிறதால ஹாஸ்டல் போய் பாத்தப்புறம்தான் எங்களுக்கு உண்மையே தெரிய வந்துச்சி. ஒரு நாள் முழுக்க குளிக்காம கொள்ளாம ஸ்கிரீன் முன்னாடியே உட்கார்ந்துட்டு இருக்கான் சார்…” என்று புலம்பினார்கள் பெற்றோர்.

“எப்போதும் படிப்பு படிப்புன்னு இருந்ததால நான் நிறைய இழந்துட்டேன். என்னோட நண்பர்கள், ஜாலியான அரட்டை, சினிமா இப்படி எல்லாத்தையும் விட்டேன். படிச்சேன். சீட் வாங்கி அகாடமிகலா ஜெயிச்சேன். ஆனா, வாழ்க்கையில தோத்துட்ட மாதிரி ஒரு உணர்வு. இந்த சீரியல்ல பல தொழில் பண்றவங்க வாழ்க்கையையெல்லாம் காட்டுறாங்க. அவங்க கூடவே பயணிக்கறது மனசுக்கு இதமா இருக்கு, என்னோட தனிமையை மறக்க வைக்குது” என்றார் அந்த இளைஞர். தனக்கு ஏற்பட்ட மனச்சோர்வுக்கு இணையத்தை மருந்தாக்கிக்கொண்ட அந்த மாணவர் சிகிச்சைக்குப் பின் நன்கு தேறினார்.

ஃபேஸ்புக் போன்றவற்றில் நீண்ட நேரம் செலவிடுவது கணிசமான அளவு மனச்சோர்வையும் (Facebook depression), ஆயாசத்தையும் அளிக்கும் என்பது பல ஆய்வுகளின் முடிவு. காரணம், தொடர்ந்து அங்கு பதிவேற்றப்படும் நண்பர்களின் படங்கள், பதிவுகள் போன்றவற்றைப் பார்ப்பதோடு மட்டுமல்லாமல்; நம் வாழ்க்கையோடு அவர்களை ஒப்பிட்டு நோக்கும் மனப்பான்மையும் வளர்ந்துகொண்டே வருகிறது.

ஃபேஸ்புக்கிலோ வேறு எந்த ஒரு சமூக வலைதளத்திலோ பதிவிடும்போது கணிசமான அளவு ஆராய்ச்சிக்குப் பின்பு, சிறப்பு என்று தாமே ரசிக்கும் ஒரு படத்தைத்தான் பெரும்பாலானோர் பதிவு செய்கின்றனர். உதாரணமாக ஒரு மலையுச்சியில் இருக்கும் போட்டோ, ஒரு பிரபலத்துடன் இருக்கும் போட்டோ, ஒரு வெளிநாட்டு மங்கையுடனோ அல்லது ஹோட்டல் வரவேற்புப் பெண்ணுடனோ இருப்பது போன்ற புகைப்படத்தை மட்டும்தான் நீங்கள் பார்ப்பீர்கள். அதற்குப் பின்னணியில் உள்ள உண்மை நிலவரத்தை யாரும் அவ்வளவாகப் பதிவிட மாட்டார்கள்.

அந்த மலையுச்சிப் பயணத்துக்குச் செல்லும்போது கார் டயர் வெடித்திருக்கும். அல்லது செல்லவிருந்த பஸ் ஆறு மணி நேரம் தாமதமாகி, பயங்கரக் கடுப்பில் இருந்திருப்பார் நண்பர். அதெல்லாம் பொது வெளியில் காட்டியிருக்க மாட்டார். அதற்கு அவசியமும் இல்லை. அந்தப் பிரபலத்துடனோ அழகிய பெண்ணுடனோ ஒரு போட்டோ எடுக்க அவர் பட்டபாடு அவருக்கு மட்டுமே வெளிச்சம். காரில் ஏறப்போன பிரபலத்திடம் காலில் விழாத குறையாகக் கெஞ்சி, படம் எடுக்கும் தருணத்தில் ஜெயிலுக்குப் போகும் அரசியல்வாதி சிரிப்பதைப் போன்று கம்பீர போஸ் கொடுத்திருப்பார். அதுவும் அந்த அழகிய பெண்ணுடன் போட்டோ எடுக்கக் குட்டிக்கரணமே அடித்திருப்பார். ரெண்டு நாளாக அவருக்கு ஒரு ஸ்நேகப் புன்னகையை வீசி, கிளம்பும் நாளன்று “உங்க ஹோட்டல் சாப்பாடு சூப்பர். கூப்பாடு அதை விட சூப்பர்” என்று போலிப் புகழ் மாலையாகச் சூட்டி “ஒரு போட்டோ எடுத்துக்கலாமா?” என்பதைப் பல மொழிகளிலும் பேசி, எட்டு செகண்டுகளில் ஒரு ‘கிளிக்’ எடுத்திருப்பார் உங்கள் நண்பர். ஆனால், அதைப் பார்க்கும்போது, ‘நாமெல்லாம் லோக்கல் மாமா பெண்ணுடன் போட்டோ எடுக்கவே ரெண்டு மாரியம்மன் பண்டிகையாய்க் காத்திருக்கோம். அவனைப் பாருடா ஃபாரின் ஃபிகரோடு எப்படிக் கொஞ்சிட்டு போட்டோ எடுத்திருக்கான்’ என்று தானாகவே நினைப்பு வரும் உங்களுக்கு. இதுதான் சமூக வலைதளங்களின் சக்தி. ஒரு போலி பிம்பத்தையே மிக சீரியஸாக ஆக்கிக்காட்டும். பார்ப்பவனை மனநோயாளியாக்கிவிடும் இந்தப் பரிதாபங்களை அன்றாட வாழ்க்கையில் நீங்கள் சாதாரணமாகக் காணலாம்.

இப்படி ஒப்பிட்டு நோக்கும்போதுதான் சொல்லொணாக் குழப்பத்துக்கு ஆளாகி நம் மீதே நமக்கு வெறுப்பு ஏற்பட்டுப்போகிறது.

(இணைவோம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in