
பா ப்லோ பாரம்பரியமான லிபரல் கட்சியைச் சேர்ந்தவன். அந்தக் கட்சிதான் 1983-ல் ஆட்சியில் இருந்தது. ஆனால் கொலம்பிய நாட்டுச் சட்டத்தின்படி, அந்த நாட்டின் அதிபர், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர் களுக்கும் அமைச்சர் பதவி வழங்க வேண்டும். அப்படித்தான், அந்த ஆண்டில், ‘புதிய லிபரல் கட்சி’யைச் சார்ந்த செனட்டர் ரோட்ரிகோ லாரா பொனில்லாவுக்கு சட்ட அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
பாப்லோ கலவரமானான். காரணம், லாரா, நாட்டிலிருந்த போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக மிகவும் காட்டமாகப் பேசி வந்தவர் என்பது மட்டுமல்ல... அவர் மிகவும் நேர்மையானவரும்கூட..!
1982-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ‘ஹாட் மணி’ என்ற விஷயம் மிகவும் பரவலான சர்ச்சையைக் கிளப்பியது. அரசியல் கட்சிகளுக்கு, ‘நார்கோ’க்கள் வழங்கும் நிதிதான் ‘ஹாட் மணி’. அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று வந்திருக்கும் ஆளும் கட்சியினர், அந்த ‘ஹாட் மணி’ உதவியுடன்தான் வந்திருக்கிறார்கள் என்று நம்பினார் லாரா. அதைப் பொதுவெளியிலும், நாடாளுமன்ற அவைக்குள்ளும் விமர்சித்தவர் அவர். குறிப்பாக, பாப்லோ போன்றவர்களைப் பெயர் சொல்லாமல் தன் விமர்சனங்களால் துளைத்தெடுத்தார்.
கொலம்பியாவின் போதைப் பொருள் கடத்தல்காரர்களை அமெரிக்காவிடம் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்று தீவிரமாக இயங்கி வந்தவர் லாரா. அவரே இப்போது சட்ட அமைச்சர் என்றால்…! – பாப்லோ அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறான்..?