காற்றில் பறந்த மேயரின் எச்சரிக்கை: மதுரை மாநகராட்சியில் தொடரும் அவலம்!

பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்
பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்

மதுரையில் பாதுகாப்பு சாதனங்கள் இன்றி தூய்மைப் பணியாளர்கள் மேயர் முன்பு வேலை செய்தது சர்ச்சையான நிலையிலும் அதே நிலை தொடர்கிறது.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட ரயில்வே காலனி பகுதியில் மாஸ் கிளினிங் நிகழ்ச்சியை மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி கடந்த 28-ம் தேதி காலை தொடங்கி வைத்தார். அப்போது, அங்கு பணியில் இருந்த தூய்மைப் பணியாளரிடம், சாலையில் இருந்த கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வது போன்று கூறி, அவர் கழிவுநீர் தொட்டியை திறந்து வண்டல் அள்ளும் வாகனம் மூலமாக சுத்தம் செய்தபோது மேயர் மற்றும் திமுக கவுன்சிலர்கள், அதிகாரிகள் அருகில் நின்றப்படி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இப்புகைப்படம் வெளியான நிலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளர் கையில் கையுறை, காலில் செருப்பு, முகக் கவசம் ஏதும் இன்றி வெறும் கைகளை மட்டும் பயன்படுத்தி கழிவுகளை அள்ளுவதாகவும், மேயர் முன்பாகவே இது போன்று அவலம் அரங்கேறியதாகவும் கூறி மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீது தேசிய தாழ்த்தப்பட்ட ஆணைய தலைவர் மற்றும் துணைத்தலைவர், முதலமைச்சர் தனிப்பிரிவு, மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு வழக்கறிஞர் முத்துக்குமார் கடிதம் மூலமாக புகார் மனு அளித்தார்.

சர்ச்சையான புகைப்படம்
சர்ச்சையான புகைப்படம்
மேயரின் அறிக்கை
மேயரின் அறிக்கை

இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மதுரை மேயர் இந்திராணி அறிக்கை ஒன்றை அன்றே வெளியிட்டார். அதில், `இன்று (மே 28) காலை மண்டலம் 3 வார்டு எண் 59-ல் ரயில்வே காலனி பகுதியில் சிறப்பு தூய்மைப் பணியினை தொடங்கி வைத்து பணிகளை பார்வையிட்ட போது Desilting இயந்திரத்தை இயக்கும் தூய்மைப் பணியாளர் கையுறை, காலணி, பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் இருந்ததை கவனித்து, அவரிடம் பாதுகாப்பு உபகரணங்களுடன் பணி செய்ய வேண்டுமென வலியுறுத்தினேன். இதனை உடனடியாக விசாரித்து பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் இருந்ததற்கான தக்க விளக்கத்தை அளிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்கப்பட்டு உள்ளது.

அனைத்து தூய்மைப் பணியாளர்களும் தகுந்த உபகரணங்களை அணிந்து பாதுகாப்புடன் செயல்பட வேண்டும். மண்டல உதவி ஆணையாளர், உதவி செயற்பொறியாளர், சுகாதார அலுவலர் மற்றும் வார்டு உதவி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் இதை பற்றிய போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும். மீண்டும் இவ்வாறான கவனக்குறைவான செயல் நேர்ந்தால் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மீது நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பனகல் சாலையில் இன்று காலை தூய்மைப் பணியாளர்கள் வண்டல் அள்ளும் இயந்திரத்தைப் பயன்படுத்தி தூய்மைப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, மீண்டும் கைகளில் கையுறை இன்றி, முகக்கவசம் இல்லாமலும், போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றியும் கழிவு நீரில் உள்ள வண்டல்களை அள்ளிக் கொண்டிருந்தனர். மாநகராட்சி மேயர் முன்பு இதே போன்று நடைபெற்று சர்ச்சையை ஏற்படுத்தி, அதனை எச்சரிக்கும் விதமாக அறிவிப்பு வெளியிட்டு மூன்றே நாட்களில் மீண்டும் அதே நிலை தொடர்வது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in