இலங்கை தமிழர்கள் நிவாரண நிதிக்காக யாசகம் பெற்ற 10 ஆயிரத்தை நிவாரணமாக அளித்துள்ளார் யாசகர் பூல்பாண்டியன். திண்டுக்கல் மக்கள் தர்மம் அளிப்பதில் மகானாகவும், வாரிக் கொடுக்கும் வள்ளலைப் உள்ளனர் என்று புகழாரம் சூட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன். இவர் ஊர் ஊராக சென்று கோயில்களில் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இதற்கிடையே, திண்டுக்கல் வந்த பூல்பாண்டியன் அங்குள்ள கோயில்களில் யாசகம் பெற்றதில் 10 ஆயிரம் கிடைத்துள்ளது. இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பூல் பாண்டியன் தான் யாசகம் பெற்று சேர்த்து வைத்திருந்த 10 ஆயிரத்தை இலங்கை தமிழர்களின் நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சியர் விசாகனிடம் வழங்கினார்.
இது குறித்து அவர் கூறுகையில், "இலங்கை தமிழர்கள் கஷ்டப்படும் செய்தியைத் தெரிந்து கொண்டு, அரசாங்கமே அறிவிக்காத நிலையில் என்னிடம் இருத்த 20 ஆயிரத்தை நிதியாக அளித்தேன். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ரூபாய் 1 கோடி இலங்கை தமிழர்களின் நிவாரணத்திற்காக கொடுப்பதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து, மீண்டும் 50 ஆயிரத்தை நிவாரண நிதியாக அளித்தேன்.
இச்சூழலில், கடந்த திங்கட்கிழமை அன்று திண்டுக்கல் வந்தேன். அப்போது, இங்கு இருக்கக்கூடிய மக்கள் தர்மம் அளிப்பதில் பெரிய மகானாகவும், வாரிக் கொடுக்கும் வள்ளலைப் போலவும் இருந்தனர். எனவே, இங்கு யாசகம் எடுத்து நிதி கொடுக்கலாமோ என்ற எண்ணத்தில் மொத்தமாக யாசகம் பெற்ற 10 ஆயிரத்தை இன்று இலங்கை தமிழர்களின் நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சியரிடம் அளித்தேன்" என்றார்.
இவர் ஏற்கெனவே தமிழக அரசிற்கு, கரோனா நிவாரண நிதியாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ரூபாய் 7 லட்சத்து 20 வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.