லாட்டரி மூலம் 62 லட்சத்தை இழந்த தறிபட்டறை உரிமையாளர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு எல்லப்பாளையம் முல்லை நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். தறிபட்டறை நடத்தி வரும் இவர், கருங்கல்பாளையத்தை சேர்ந்த செந்தில் என்பவரிடம் லாட்டரி வாங்கி 62 லட்சம் ரூபாய் இழந்துள்ளார். இதனிடையே, வீடியோ ஒன்றை வெளியிட்ட ராதாகிருஷ்ணன், உயிருடன் இருந்தால் இன்னும் பணத்தை இழந்து விடுவேன் என தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே தறிபட்டறை நடத்தி வந்த ராதாகிருஷ்ணன் அதில் நஷ்டம் ஏற்பட்டதால் நூல் கமிஷன் ஏஜண்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் லாட்டரியில் 62 லட்சம் இழந்ததாக வாட்ஸ் அப் பதிவிட்டு தற்கொலை செய்துள்ளார். அவரது மனைவி மாலதி அளித்த புகாரின் பேரில் ஈரோடு வடக்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.