வளைகாப்புக்கு சென்றபோது பறிபோன உயிர்கள்... குழந்தைகள் கவலைக்கிடம்: காரைக்குடி அருகே சோகம்

வேன் மோதிய லாரி
வேன் மோதிய லாரி

வளைகாப்பு நிகழ்ச்சிக்கு இளையான்குடியில் இருந்து காரைக்குடிக்கு உறவினர்களை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்த வேன், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த கழனிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் ரீகன் (30). தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரூத்திற்கு வளைகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வேன் விபத்துக்குள்ளானது
வேன் விபத்துக்குள்ளானது

இதையொட்டி, ரூத்தின் உறவினர்கள் 26 பேர் ஒரு வேனில் இளையான்குடியில் இருந்து கழனி வாசல் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்களது வேன் காரைக்குடியை அடுத்த திருச்சி-ராமேஸ்வரம் சாலையில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகம் அருகே வந்தபோது, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது திடீரென வேன் மோதியது.

இதில், வேனில் பயணித்த 7 குழந்தைகள் உட்பட 26 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும், தவப்பிரியா (22), மணிமேகலை (55) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில், ஒரு பெண்ணின் கை துண்டானது. ஒரு குழந்தை உள்பட 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து  பகுதியில் நடைபெறும் மீட்புப் பணிகள்
விபத்து பகுதியில் நடைபெறும் மீட்புப் பணிகள்

இது குறித்து தகவல் அறிந்த காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, தாசில்தார் மாணிக்க வாசகம் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in