
சீர்காழி அருகே மீனவ கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனத்தின் பாய்லர் வெடித்ததில் இருவர் உயிரிழந்தனர். மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தொடுவாய் கிராமத்தில் அலி உசேன் என்பவருக்கு சொந்தமான ’பிஸ்மி பிஷ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு மீன் மருந்து எண்ணைய் மற்றும் பவுடர் தீவனம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிறுவனத்தில் இன்று பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்தது. இதில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அருண்ஓரானா (25) பல்ஜித்ஓரான் (20) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
இதனைக் கண்ட சக ஊழியர்கள் பாய்லர் வெடித்ததில் படுகாயம் அடைந்த பாய்லர் ஆபரேட்டர் உச்சிமேடு ரகுபதி(53), பந்தநல்லூர் மாரிதாஸ்(45), திருமுல்லைவாசல் ஜாவித்(29) ஆகிய 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சம்பவம் குறித்து சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.