செல்போன் சார்ஜரை கழற்றிய போது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்!

கோபிநாத்
கோபிநாத்

குளித்துவிட்டு வந்து செல்போனை ஈரக்கையால் கழற்றிய சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் வேலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், சின்னஅல்லாபுரம், அம்பேத்கர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவருடைய மனைவி பானுமதி மற்றும் 9 வயது மகன் கோபிநாத் ஆகியோருடன் கிருஷ்ணகிரியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார். மேலும் அப்பகுதியில் போட்டோ ஸ்டூடியோ ஒன்றையும் நடத்திவருகிறார். கிருஷ்ணகிரியில் உள்ள பள்ளி ஒன்றில் 4-ம் வகுப்பு படித்துள்ளான் கோபிநாத். கோடை விடுமுறையை முன்னிட்டு குடும்பத்துடன் வேலூரில் உள்ள சொந்த வீட்டிற்கு வந்துள்ளார் செந்தில். இந்த நிலையில் நேற்று மாலை பானுமதி செல்போனுக்கு சார்ஜர் போட்டுவிட்டு வீட்டு வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது குளித்துவிட்டு வந்த கோபிநாத் ஈரக்கையுடன் செல்போனை சார்ஜரில் இருந்து கழற்றி இருக்கிறார். எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் கோபிநாத் அலறியபடி கீழே விழுந்துள்ளான். கோபிநாத் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர் மயக்க நிலையில் இருந்த கோபிநாத்தை உடனடியாக சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

கோபிநாத் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து பாகாயம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சார்ஜரிலிருந்து செல்போனை கழற்றியபோது மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in