வீட்டில் தந்தையின் உடல்... பொதுத்தேர்வை எழுதிய மாணவன்: கண்ணீருடன் நடந்த இறுதிச் சடங்கு

பதினோராம் வகுப்பு தேர்வெழுதிய மாணவன்
பதினோராம் வகுப்பு தேர்வெழுதிய மாணவன்

வேடசந்தூர் அருகே தந்தை இறந்த நிலையில் இன்று தனது பதினோராம் வகுப்புப் பொது தேர்வை எழுதியுள்ளார் மகன்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள சவேரியார்பட்டியைச் சேர்ந்தவர் ரட்சகர். சொந்தமாக தொழில் செய்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை உடல்நல குறைவு காரணமாக ரட்சகர் உயிரிழந்தார். இவருக்கு மனைவியும், சோபியா என்ற மகளும், ராபின் என்ற மகனும் உள்ளனர். சோபியா பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில், ராபின் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று பதினோராம் வகுப்புப் பொதுத்தேர்வு நடந்தது. தனது தந்தை இறந்து உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த போதிலும் ராபின், வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினார். எழுதி முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்று தனது தந்தைக்கு செய்ய வேண்டிய அனைத்து இறுதிச் சடங்குகளையும் செய்தார்.

மூத்த மகள் சோபியாவும் நிச்சயம், நாளை நடைபெற உள்ள பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதுவேன் என்று தெரிவித்தார். தந்தை இறந்து உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த போதிலும் தங்களது அரசுப் பொதுத் தேர்வை நல்லபடியாக எழுதி தந்தையின் கனவை நிறைவேற்றுவோம் என்று கூறிய பிள்ளைகளை நினைத்து அப்பகுதியினர் மெய்சிலிர்த்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in