
நகராட்சி இயக்குநரை எதிர்த்து பேசியதால் சிவகங்கை நகராட்சி ஆணையாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் சிவகங்கை நகராட்சியின் ஆணையாளராக பாலசுப்ரமணியன் பொறுப்பேற்றார் . இதற்கு முன்பு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நேரடியாக ஆணையாளர்கள் பணியமர்த்தப்படாமல் இருந்ததுடன் பொறியாளர்களே கூடுதலாக ஆணையாளர் பொறுப்பில் இருந்து வந்தனர்.
இந்நிலையில், ஆணையராக இவர் பொறுப்பேற்ற பின்னர் நகராட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. தற்சமயம், திமுகவை சேர்ந்த துரை ஆனந்த் நகர்மன்றத் தலைவராக உள்ளார். மேலும், நகராட்சி நிர்வாகமும் சற்று செயல்பட தொடங்கியுள்ளது. இச்சூழலில், இன்று ஆணையாளர் பாலசுப்ரமணியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை இயக்குநர் பொன்னையா தலைமையில் நேற்று தமிழகம் முழுவதுமுள்ள நகராட்சி ஆணையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றதாகவும். அதில், சிவகங்கை ஆணையாளர் பாலசுப்ரமணியத்தை, இயக்குநர் பொன்னையா வசைபாடியதாகவும். அதற்கு, ஆணையாளர் எதிர்ப்புத் தெரிவித்து பேசியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகங்கை நகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்று 6 மாத காலத்திற்குள்ளாகவே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் நகராட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.