மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண் குழந்தைகள் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குத்தாலம் அருகே கந்தமங்கலம் பிள்ளையார்கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர்கள் சண்முகசுந்தரம்- மணிமேகலை தம்பதியினர். சண்முகசுந்தரம் ஆந்திராவில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி மணிமேகலை விவசாய வேலைகள் செய்து வருகிறார். இவர்களுக்கு ஷன்சிகா(9), சுஜி(8) இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் அருகில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர்.
கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஷன்சிகாவும், சுஜியும் தனது சக நண்பர்களுடன் வீட்டிற்கு அருகே உள்ள ஆயிகுளத்தில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ஷன்சிகாவும், சுஜியும் கால்தவறி குளத்தில் விழுந்தனர். குளத்தில் சேரும் சகதியும் அதிகம் இருந்ததால் சேற்றில் கால்கள் சிக்கிக்கொண்டு இரண்டு பேரும் மீள முடியாமல் தவித்தனர். தங்களை காப்பாற்றுமாறு பெருங்குரலெடுத்து கதறினர். ஆனாலும் பயனில்லை. காப்பாற்றுவார் யாரும் இல்லாததால் ஒரு கட்டத்தில் நீரில் மூழ்கி இரு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மற்ற குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்தவர்கள் இரு குழந்தைகளின் உடல்களை குளத்தில் இருந்து மீட்டு கரை சேர்த்தனர். ஆம்புலன்ஸ் மூலம் குத்தாலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக குழந்தைகளின் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பரிதாப சம்பவம் குறித்து பாலையூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.