
கடலூரில் உணவு பாதுகாப்புத் துறையினர் இன்று மேற்கொண்ட ஆய்வில் 50 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடலூர் முதுநகர் மீன் விற்பனைச் சந்தை, காரைக்காடு பகுதி மீன் சந்தை, துறைமுகப் பகுதி மீன் சந்தை ஆகிய இடங்களில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என்பது குறித்து உணவு பாதுகாப்புத் துறை மற்றும் மீன்வளத் துறையினர் இணைந்து இன்று ஆய்வுநடத்தினர். உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் கைலாஷ்குமார் மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள், மீன்வளத் துறை உதவி இயக்குநர் தமிழ்மாறன் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.
ஆய்வின்போது பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்ட கெட்டுப்போன 50 கிலோ மீன்களைப் பறிமுதல் செய்து, அழித்தனர். அத்துடன் கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கெட்டுப்போன, ரசாயனம் கலந்த மீன் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மீனவர்களை மாவட்ட நியமன அலுவலர் எச்சரித்தார்.