`தென்மாவட்ட மக்கள் ஊட்டி செல்வதற்கு வசதியாக இருக்கும்'

கன்னியாகுமரியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு ரயில் இயக்க கோரிக்கை
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம்
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம்

தென்மாவட்டங்களையும், கொங்கு மண்டலத்தையும் இணைக்கும்வகையில் கன்னியாகுமரி- மேட்டுப்பாளையம் இடையே ரயில் இயக்க வேண்டும் என குமரிமாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த வழித்தடத்தில் ரயில் இயக்கப்படுவதன்மூலம் தென்மாவட்ட மக்கள் ஊட்டிக்கு செல்வதற்கும் வசதியாக இருக்கும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

எஸ்.ஆர்.ஸ்ரீராம்
எஸ்.ஆர்.ஸ்ரீராம்

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் எஸ்.ஆர்.ஸ்ரீராம் கூறுகையில், “தென்மாவட்டங்களில் இருந்து தற்போது கோயம்புத்தூருக்கு நாகர்கோவில் - கோவை பகல் நேர விரைவு ரயில், நாகர்கோவில் - கோவை இரவு நேர ரயில் என இரண்டு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த இரண்டு ரயில்களும் திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர் வழியாக மொத்தம் 533 கி.மீ தூரத்தில் இயக்கப்படுகிறது.

இதேபோல் திருநெல்வேலியிருந்து தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, கோயம்புத்தூர் வழியாக மேட்டுப்பாளையத்துக்கு வாராந்திர கோடைகால சிறப்பு ரயிலை ரயில்வே துறை இப்போது அறிவித்துள்ளது. இந்த வழித்தடம் வழியாக பயணம் செய்யும் போது மொத்தம் 459 கி.மீ தூரம் கொண்டு ஈரோடு வழியாக செல்வதை காட்டிலும் 74 கி.மீ பயண நேரம் குறைவாகும். தற்போது திருநெல்வேலியிருந்து மேட்டுப்பாளையத்துக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயிலுக்கு குமரி மாவட்டத்திலிருந்து சென்னை செல்லும் அனந்தபுரி ரயிலில் ஏறி விருதுநகர் ரயில் நிலையத்தில் 22:18 மணிக்கு இறங்கி அங்கிருந்து 23:10 மணிக்கு மேட்டுப்பாளையம் செல்லும் சிறப்பு ரயிலில் ஏறித்தான் செல்ல வேண்டியுள்ளது. இதன்மூலம் பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, போத்தனூர், கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் எளிதாக பயணம் செய்யலாம். இதைப்போல் மறு மார்க்கம் இந்த பகுதிகளிலிருந்து குமரி மாவட்டத்துக்கு வரும் பயணிகள் விருதுநகர் ரயில் நிலையத்தில் காலை 3: மணிக்கு இறங்கி விட்டு அங்கிருந்து 3:35 மணிக்கு வரும் பெங்களூரு - நாகர்கோவில் ரயிலில் ஏறி குமரி மாவட்டத்திற்கு வரமுடியும்.

இதேபோல் கன்னியாகுமரியில் இருந்தும் மேட்டுப்பாளையத்திற்கு ரயில் இயக்க வேண்டும். அல்லது இந்த ரயிலை குமரிவரை நீடிப்பு செய்யவேண்டும். மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டிக்கு மேட்டுப்பாளையம் வரை அகல ரயில் பாதையும், மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு மீட்டர்கேஜ் மலை ரயில் பாதையும் உள்ளது. இதில் மீட்டர் கேஜ் பாதையில் தினசரி ஒரு ரயில் மட்டும் இயக்கப்படுகிறது. தற்போது சென்னையிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு ஒரு சூப்பர் பாஸ்ட் ரயில் ஊட்டிக்குவரும் பயணிகள் பயணிக்கும் விதத்தில் கால அட்டவணை அமைத்து இயக்கப்படுகிறது. ஆனால் தென்மாவட்டங்களில் இருந்து நேரடியாக மேட்டுப்பாளையத்துக்கு செல்ல தினசரி ரயில் வசதி இல்லை. இங்கிருந்து செல்லும் இரவு ரயிலில் கோவை சென்று அங்கிருந்து மேட்டுப்பாளையம் பயணிகள் ரயிலில் செல்ல முடியும். இவ்வாறு சென்றாலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து செல்லும் மலை ரயிலில் பயணிக்க முடியாது. தென்மாவட்டங்களில் இருந்து ஊட்டிக்கு ரயிலில் செல்ல நேரடிவசதி இல்லாத காரணத்தால் இங்கிருந்து செல்லும் பயணிகள் பேருந்துகளில் பயணிக்கின்றனர். இவ்வாறு செல்லும் பயணிகள் மலைப்பகுதியில் செல்லும் போது மயக்கம், வாந்தி என பல்வேறு இன்னலுக்கு உள்ளாகின்றனர்.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியிலிருந்து திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, போத்தனூர், கோவை வழியாக மேட்டுப்பாளையத்துக்கு தினசரி இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும். இந்த ரயில் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு பயணிக்கும் மலை ரயிலுக்கு இணைப்பு ரயிலாக இருக்கும் விதத்தில் கால அட்டவணை அமைத்து இயக்க வேண்டும். அது சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு வருவோருக்கும் மிகவும் வசதியாக இருக்கும்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in