ரேஷன் அரிசி மூட்டை
ரேஷன் அரிசி மூட்டை

`எனது தொகுதியிலும் இதே நிலைமைதான்'- பொங்கிய அதிமுக எம்எல்ஏ

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரேசன் கடைகளில் வினியோகிக்கப்படும் அரிசி தரமற்று இருப்பதாகவும், நல்ல அரிசி வழங்காவிட்டால் ரேசன் கடையை முற்றுகையிடப் போவதாகவும் தேரூர் கிராம மக்கள் அறிவித்துள்ளனர். இதனிடையே இவ்விவகாரத்திற்கு ஆதரவாக குமரிமாவட்ட அதிமுகவும் களத்தில் குதித்துள்ளது.

தளவாய் சுந்தரம்
தளவாய் சுந்தரம்

இதுகுறித்து கன்னியாகுமரி தொகுதியின் எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் காமதேனு இணையதளத்திடம் கூறுகையில், ``குமரி மாவட்டத்தில் மொத்தம் 764 நியாய விலைக்கடைகள் உள்ளன. இதில் மொத்தம் 5,71,273 குடும்ப அட்டைகள் உள்ளன. இங்கு நியாய விலைக்கடைகளில் மக்களுக்கு முந்தைய அதிமுக ஆட்சியில் தரமான ரேசன் அரிசி வினியோகிக்கப்பட்டது. ஆனால் இப்போது வினியோகிக்கப்படும் அரிசி தரமற்ற நிலையில் உள்ளது. குறிப்பாக எனது தொகுதிக்குட்பட்ட தேரூர், மருங்கூர், வெள்ளமடம், ஆரல்வாய்மொழி உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இதுதான் நிலைமையாக உள்ளது.

தரமற்ற ரேசன் அரிசிக்கு எதிராக தேரூர் கிராம மக்கள் அந்த ஊரில் இருக்கும் ரேசன்கடையை முற்றுகையிடவும் தயாராகி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம், இந்த விசயத்தில் கவனம் செலுத்தி, மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் தரமான அரிசி மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இதேபோல் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் ஆகியோரும் இதில் தனிக்கவனம் செலுத்தவேண்டும். இல்லாவிட்டால் மக்களின் போராட்டம் தவிர்க்க முடியாததாகிவிடும்’’ என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in