`என் மரணத்துக்கு பிறகாவது ஒன்று சேருங்கள்'- அம்மாவுக்கு கடிதம் எழுதிவிட்டு உயிரை மாய்த்த மாணவன்

`என் மரணத்துக்கு பிறகாவது ஒன்று சேருங்கள்'- அம்மாவுக்கு கடிதம் எழுதிவிட்டு உயிரை மாய்த்த மாணவன்

பிரிந்து வாழும் அம்மா, அப்பாவுக்கு உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு பிளஸ்2 மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாரைக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (46). இவர் ஆழ்துளை கிணறு அமைக்கும் லாரியில் டிரில்லராக வேலை செய்து வருகிறார். இவருக்கு மேகலா (38) என்ற மனைவி, நர்மதா (19) என்ற மகள் இருக்கிறார். மகன் தருண் (17) நாரைக்கிணறு அருகே உள்ள உடையார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த ஓராண்டுக்கு முன் பிரிந்தனர். தொடர்ந்து சேந்தமங்கலம் அருகே மேலப்பாளையத்தில் மகனுடன் மேகலா வசித்து வந்தார். இந்நிலையில் பெற்றோரை சேர்த்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் தருணுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் கடந்த சில தினங்களுக்கு முன் தந்தை ரவி வேலை செய்யும் இடத்திற்கு தருண் சென்றுள்ளார். எனினும், தந்தையைக் காண முடியவில்லை. இதில் தருண் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இச்சூழலில் இன்று அதிகாலை மேலப்பாளையம் அருகில் உள்ள செங்கோட்டை காடு எனும் இடத்தில் தருண் சேலையில் தூக்குபோட்ட நிலையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து விரைந்து சென்ற பேளுக்குறிச்சி காவல் துறையினர் பிரேதத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது, தற்கொலைக்கு முன்பு, மாணவர் கடிதம் எழுதி வைத்திருக்கிறார். அந்த கடிதத்தில், எனது இறப்பிற்கு பிறகாவது தாய் தந்தை இருவரும் ஒன்றாக சேர வேண்டும் எனவும் தனது அம்மா மற்றும் அக்காவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறும், `நான் எங்கும் செல்லவில்லை. வீட்டின் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பேன்’ என எழுதியிருந்திருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை காவல் துறையினர் நடத்தி வருகின்றனர். பிரிந்து சென்ற பெற்றோரை சேர்த்து வைக்க முடியாமல் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிராம மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in