சாலையில் சுய நினைவின்றி கிடந்த முதியவரை மீட்டு 22 ஆயிரம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த 3 சிறுவர்களை நேரில் அழைத்து சல்யூட் அடித்து பாராட்டியுள்ளார் சென்னை அண்ணாநகர் துணை ஆணையர்.
சென்னை அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் கமலகண்ணன்(65). இவருக்கு குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லாததால் குடிபழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். நேற்று முந்தினம் கமலகண்ணன் குடித்துவிட்டு அண்ணா நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் சுய நினைவின்றி கீழே விழுந்து கிடந்தார். அப்போது கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் லிக்கித், யோஜித், கிரிதிக் ஆகியோர் தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது சுய நினைவின்றி கீழே கிடந்த கமலகண்ணனின் அருகே 22 ஆயிரம் ரூபாய் சிதறி கிடந்ததை கண்ட சிறுவர்கள, உடனே பணத்தை மீட்டு, குடும்பத்தினர் உதவியுடன் அவரையும் மீட்டு அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் பாபு அந்த சிறுவர்களை அழைத்து நேரில் வாழ்த்துகள் தெரிவித்ததுடன் முதியவரை அழைத்து அறிவுரை கூறி அவரது பணத்தை ஒப்படைத்தார். இதை பற்றி அறிந்த அண்ணா நகர் துணை ஆணையர் சிவபிரசாத், சிறுவர்களை நேரில் அழைத்து சல்யூட் அடித்து பாராட்டியதோடு, இனிப்பு வழங்கி ஊக்கப்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சிறுவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.