உக்ரைனுக்கு ஆதரவாகவும், ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிராகவும் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உலகத்தமிழ் பாராளுமன்றம் மற்றும் உலகத் தமிழ் வழக்கறிஞர் பேரவை ஆகியவற்றின் சார்பில் காவல் நிலையத்தில் அனுமதி கோரப்பட்டிருந்தது. அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
உலகத் தமிழ் வழக்கறிஞர் பேரவை அமைப்பின் தலைவரும், வழக்கறிஞருமான புனித தேவகுமார், தெற்கு எழுத்தாளர் இயக்கத் தலைவர் திருத்தமிழ் தேவனார் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதுதொடர்பாக மனு கொடுத்தனர். அதில், ``கல்விக்கட்டணம் குறைவு என்பதால் இந்தியாவைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உக்ரைன் நாட்டில் மருத்துவம் பயின்றுவருகின்றனர். இவர்களில் கணிசமான அளவுக்கு தமிழ் மாணவர்கள் உள்ளனர். இந்நிலையில் ரஷ்யா, உலகநாடுகளின் கண்டனத்தையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஜனநாயக நாடான உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கு பயிலும் நம் இந்திய மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவின் ஏதேச்சதிகார போக்கினால் எந்நேரமும் உலகிற்கு அணு ஆயுத ஆபத்து ஏற்பட்டு, அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் பொருளாதாரமும் பாதிப்படைந்து வருகிறது. ரஷ்யா விரைந்து போரை நிறுத்தி, உக்ரைனில் முழு அமைதி திரும்பவும், அங்கு பயிலும் அனைத்து மாணவர்களும் பத்திரமாகத் தாயகம் திரும்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறப்பட்டுள்ளது. முன்னதாக உக்ரைன் நாட்டில் போரை நிறுத்த ரஷ்யாவை வலியுறுத்தக் கேட்டு நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.