
2 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை- ராமேஸ்வரம் பயணிகள் ரயில் சேவை இன்று முதல் தொடங்கப்பட்டது.
மதுரை - ராமேஸ்வரம் இடையேயான ரயில் சேவை இருவேளைகளாக இயக்கப்பட்ட ரயில் சேவை, கரோனாால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. தற்போது, கரோனா குறைந்துவிட்டதால், மீண்டும் நிறுத்தப்பட்ட ரயிலை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அக்கோரிக்கையை வலியுறுத்தி தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம் ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி மனு கொடுத்திருந்தார். இதையடுத்து கரோனா பேரிடர் காலத்தில் நிறுத்திய மதுரை - ராமேஸ்வரம் காலை நேர பயணிகள் ரயில், ராமேஸ்வரம் - மதுரை மாலை நேர பயணிகள் ரயில்களை இன்று முதல் மீண்டும் இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, 2 ஆண்டுகளுக்கு பின் ரயில் இன்று இயக்கப்பட்டது. இந்த ரயில்கள் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், மண்டபம் முகாம், உச்சிபுளி, வாலாந்தரவை, ராமநாதபுரம், சத்திரக்குடி, பரமக்குடி, சூடியூர், மானாமதுரை, ராஜகம்பீரம், திருப்பாசேத்தி, திருப்புவனம், சிலைமான், மதுரை கிழக்கு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6.35 மணிக்கு மதுரை ரயில் நிலையத்திலிருந்து ராமேஸ்வரம் புறப்பட்டது. நீண்ட நாளுக்கு பிறகு இந்த வழிதடத்தில் ரயில் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.