திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு வழிபடச் சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, மாற்றுப்பாதையில் காவல்துறையினர் வேக வேகமாக அழைத்துச் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நேற்று முதல் இன்று வரை புதிய தேசியக் கல்விக் கொள்கை குறித்த கருத்தரங்கு நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
இதன் பின் மாலையில் அவர் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக கோயிலுக்குச் சென்றனர். அவரை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்க கிழக்கு வாசலில் காத்திருந்தனர்.
அப்போது திடீரென கிழக்கு வாசலில் இருந்த பெரிய தேன்கூட்டை புறாக்கள் கலைத்து விட்டன. இதனால், அப்பகுதியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி வரவும், காவல்துறையினர் அவரை மாற்றுப்பாதை வழியாக வேக வேகமாக அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதன் பின் அவர் சாமி தரிசனம் செய்தார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.