பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலித்த தலைமை ஆசிரியர் தான் செய்த தவறை மறைப்பதற்காக பணத்தை திருப்பிக் கொடுத்த அவலம் திண்டுக்கலில் அரங்கேறி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா கோவிலூர் அருகே இராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ராஜசேகரன். பள்ளியின் வளர்ச்சி நிதி என்று கூறி பள்ளி மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்வதாக தொடர்ச்சியாக பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட கல்வி அதிகாரி கீதா விசாரணை நடத்தி விட்டுச் சென்றார்.
இதனையடுத்து, பள்ளியின் தலைமையாசிரியர் ராஜசேகரன் தான் வசூலித்த பணத்தை திருப்பித் தருவதாக மாணவர்களிடம் கூறியுள்ளார். இது குறித்து தலைமையாசிரியரிடம் கேட்டபோது, பள்ளியின் வளர்ச்சி நிதிக்காக பள்ளி மாணவ- மாணவியர்களிடம் ரூ. 50 முதல் 100 வரை வசூல் செய்வதை ஒப்புக் கொண்டார். அதனை ஏன் திருப்பித் தந்தீர்கள் என்றதற்கு, "எங்கள் உயர் அதிகாரியான மாவட்ட கல்வி அலுவலர் கீதா திருப்பித் தர உத்தரவிட்டதன் அடிப்படையில் திருப்பித் தருகிறேன்" என்று பகிரங்கமாக வாக்குமூலம் அளித்தார்.
செய்தி சேகரித்தது, தலைமை ஆசிரியருக்கு தெரியவந்ததை அடுத்து மாணவர்களுக்கு ஒரு அப்ளிகேஷனை வழங்கி அதில் தாங்கள் பணத்தை பெற்றுக் கொண்டோம் என்று எழுதிக் கொடுத்து, பெற்றோரின் கையெழுத்தை நீங்களே போட்டுக் கொள்ளலாம், அது உங்களுடைய விருப்பம் என்று மறைமுகமாக கூறி மாணவ-மாணவிகளிடம் கையெழுத்துப் பெற்றுக் கொண்டு அவர்களிடம் வாங்கிய பணத்தை திருப்பி வழங்கி உள்ளார்.
ஏழை மாணவர்களிடம் அதிகக் கட்டணம் வசூல் செய்யும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.