பற்றி எரியும் மேற்குத் தொடர்ச்சி மலை: அரியவகை மூலிகை செடிகள், மரங்கள் எரிந்து நாசம்
புளியங்குடியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் இன்று இரண்டாவது நாளாக தீ பிடித்து எரிந்து வருகிறது. நேற்று இரவு தொடங்கிய இந்தக் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், புளியங்குடி பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலை உள்ளது. இந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் பல அரியவகை மூலிகைகளும், ஏராளமான அரிதான மரங்களும் உள்ளன. இந்நிலையில் நேற்று மாலை திடீர் என புளியங்குடி மேற்குத் தொடர்ச்சி மலையில் தீப்பற்றியது. காற்று அதிகமாக வீசியதால், இந்தத் தீ வேகமாகப் பரவியது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தும் அரியவகை மூலிகைகள், வேங்கை, மூங்கில் மரங்கள் பலவும் எரிந்து நாசமாகின. தீயை அணைப்பதற்கு போதிய உபகரணங்கள் இல்லாததால் காட்டுத்தீயை அணைப்பதில் தாமதம் நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.