
பழனி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனம் ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ளது தாசரிபட்டி கிராமம். இங்குள்ள கருப்பணசுவாமி கோயிலில் கடந்த சில நாட்களாக திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு ஆடல், பாடல், கலை நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டு போலீஸாரின் அனுமதியுடன் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிலையில், நேற்று இரவு நடந்த ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஐந்திற்கும் மேற்பட்ட பெண்கள் அரைகுறை ஆடையுடன் ஆபாச நடனம் ஆடியது சர்ச்சையாகி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கோயில் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனம் ஆடக்கூடாது என்றும், மீறி ஆடினால், உடனடியாக நிகழ்ச்சியை நிறுத்தவேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதன் உத்தரவை மீறும் வகையில், ஆபாச நடனம் ஆடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போது அவர்கள் முன்னிலையில் கடைசிவரை நடன நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால், காவல் துறையினர் அதை தடுத்து நிறுத்தாமல் அமைதி காத்திருந்தனர்.