
சாலையில் சென்றுக்கொண்டிருந்தபோதே மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. ஸ்கூட்டரை ஓட்டி வந்த வாலிபர் அதிர்ஷ்டவசாக உயிர் தப்பினார். இந்த அதிர்ச்சி சம்பவம் ஓசூரில் நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சேர்ந்த சதீஷ் என்பவர் கர்நாடக மாநிலம் பொம்மசந்திரா பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மின்சார ஸ்கூட்டரை அவர் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், சதீஷ் இன்று காலை அலுவலகத்துக்கு மின்சார ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். ஜூஜூவாடி அருகே சென்றபோது திடீரென வாகனத்தில் தீப்பற்றியது. இதனால் அதிர்ச்சியடைந்த சதீஷ், உடனடியாக வாகனத்தை நிறுத்துவிட்டு கீழே இறங்கி ஓடிவிட்டார். இந்த விபத்தில் சதீஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதைப்பார்த்த அந்தப் பகுதி மக்கள் தண்ணீரை கொண்டு தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும், வாகனம் தீயில் எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இருசக்கர மின்சார வாகனங்கள் தீப்பிடிக்கும் நிகழ்வு அடிக்கடி நடைபெறுவதால் அதனை பயன்படுத்துவோர் அச்சத்தில் உள்ளனர்.