அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் காருக்காக சாலையில் வழி விட ஒதுங்கிய முதியவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பெரியதள்ளப்பாடி கிராமத்தில் புதிதாக சாலை அமைப்பதற்காக பூமி பூஜை செய்ய ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வம் இன்று வாகனம் மூலம் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவரது வாகனத்திற்கு வழி விடுவதாக அதே பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்(60) சாலையின் ஓரம் ஒதுங்கினார். அப்போது சாலையின் ஓரம் இருந்த தற்காலிக இரும்புக்கம்பத்தை அவர் பிடித்துள்ளார். இதையடுத்து ராதாகிருஷ்ணன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதனால் பூமி பூஜை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. இதனால் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வம் அங்கிருந்து திரும்பிச் சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.