தென்காசியில் தேவர் ஜெயந்தி குருபூஜை கொண்டாட்டத்தில் கொடிக்கம்பத்தில் கொடிகட்ட முயன்ற கல்லூரி மாணவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
தென்காசி மாவட்டம், கோவிந்தபேரி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். கூலித்தொழிலாளியான இவரது மகன் முத்துகுமார்(18), அம்பாசமுத்திரத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்துவந்தார். இன்று தேவர் ஜெயந்தியை உற்சாகமாகக் கொண்டாட கோவிந்தபேரி பகுதி மக்கள் முடிவு செய்தனர்.
இதற்காக நேற்று இரவே அப்பகுதியில் உள்ள முப்பிடாதி அம்மன் கோயில் முன்பு கொடியேற்றும்வகையில் கொடிக்கம்பத்திற்கு பெயின்ட் அடித்தனர். இன்று காலையில் கொடிகம்பத்தை நடும் பணியில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஈடுபட்டனர். அப்போது மேலே இருந்த மின்சாரக் கம்பியின் மீது கொடிக்கம்பம் உரசியது. அதேநேரம், கொடிக்கம்பத்தில் ஏற முயன்ற முத்துக்குமார் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
இதில் தூக்கி வீசப்பட்ட முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற ஆழ்வார்குறிச்சி போலீஸார், அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.