உதகை மின்வாரியம் அலுவலம் அருகே உள்ள லாட்ஜில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயில் கட்டில், மெத்தை போன்ற பொருட்கள் எரிந்த நாசமாயின. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், உதகை பேருந்து நிலையம் பகுதியில் நகர மின்வாரியம் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் அருகே பல லாட்ஜ்கள் உள்ளன. இந்நிலையில், காலை 9 மணியளவில் திடீரென ரவிகிரண் லாட்ஜிலின் இரண்டாம் மாடியில் உள்ள அறையில் தீ ஏற்பட்டது. தீ மளமளவென பரவி அருகிலிருந்து அறைகளுக்கும் பரவியது. தீ கட்டிடத்தின் ஜன்னல் வழியாக வெளியே வந்தது. பொருட்கள் எரிந்ததால் கரும்புகை எழுந்து, அப்பகுதியை சூழ்ந்தது. இதனால், அருகில் உள்ள கடைக்காரர்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உறைந்தனர். அருகில் இருந்தவர்கள் தீ குறித்து தீயணைப்பு மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தீ ஏற்பட்ட கட்டிடம் அருகேலேயே மின்மாற்றி உள்ளது. இதனால், உடனடியாக அப்பகுதியின் மின் இணைப்பை மின்வாரிய அலுவலர்கள் துண்டித்தனர். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உதவி தீயணைப்பு அலுவலர் ஏ.நாகராஜ் தலைமையில் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் கூறுகையில், ‘கட்டிடத்தில் குறுகலான அறைகள் உள்ளன. மேலும், 3 எரிவாயு சிலிண்டர்கள் இருந்தன. சிலிண்டர்கள் உடனே அகற்றப்பட்டதால், அதிருஷ்டவசமாக எந்த பாதிப்பு ஏற்படவில்லை. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம்’ என்றனர்.
நகர கிராம நிர்வாக அலுவலர் ரவி கட்டிடத்தை ஆய்வு செய்து கூறும்போது, ‘கட்டிடம் மைசூருவை சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கு சொந்தமானது. தற்போது உதகையை சேர்ந்த அனீபா மற்றும் ஜூபேர் ஆகியோருக்கு குத்தகைக்கு தந்துள்ளார். அவர்கள் சுற்றுலா பயணிகளுக்கு அறைகளை வாடகைக்கு தந்து வருகின்றனர். தற்போது வட மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளிகள் தீ ஏற்பட்ட அறைகளில் தங்கியுள்ளனர். அவர்கள் காலையில் பணிக்கு சென்ற பின்னர் தீ ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்த அறையிலிருந்தவர்களை மீட்டு பாதுகாப்பாக தங்க வைத்துள்ளோம். லாட்ஜின் கீழ் தளத்தில் மட்டும் மின்சாரம் இருந்தது. மேல் தளங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால், அந்த அறைகளுக்கு மின் இணைப்பு வழங்க லூப் போடப்பட்டதா அல்லது விளக்கு எரிக்கப்பட்டதால் தீ பரவியதா என விசாரித்து வருகிறோம்’ என்றார்.
தீ விபத்து குறித்து மின்வாரிய அலுவலர்களும் ஆய்வு செய்து வருகின்றனர். காலை நேரம் பள்ளி மற்றும் அலுவலகத்துக்கு செல்ல மக்கள் பேருந்து நிலையம் பகுதியில் திரண்ட நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் உதகையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.