சிவகங்கையில் பிஜப்பூர் சுல்தான் கால நாணயங்கள் கண்டெடுப்பு!

கிடைக்கப்பெற்ற நாணயங்கள்
கிடைக்கப்பெற்ற நாணயங்கள்

சிவகங்கை அருகே பிஜப்பூர் சுல்தான் கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவற்றைத் தொன்மை பாதுகாப்பு மன்றத்தில் மாணவர்களின் பயன்பாட்டிற்கு வைக்க உள்ளதாக நாணயங்களைக் கண்டெடுத்தவர்கள் தெரிவித்தனர்.

சிவகங்கை தொல்நடைக் குழுவைச் சேர்ந்த க.சரவணன் வித்தியாசமான 3 உலோகச் சில்லுகள் சிவகங்கை அருகே உள்ள அரசனேரி கீழமேடு, பேச்சிக்குளம், முனிக் கோயிலில் கிடைத்ததாகச் சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவனர் காளிராசாவிடம் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு ஒப்படைத்தார். அவற்றை ஆய்வு செய்ததில் அவை, பிஜப்பூர் சுல்தான் கால நாணயங்கள் எனத் தெரியவந்தது.

இதுகுறித்து, தொல் நடைக்குழு நிறுவனர் கா.காளிராசா நம்மிடம், “இது செம்பால் செய்யப்பட்டதாக இருந்தாலும் நேர்த்தியான வட்ட வடிவில் இல்லாமல் முன்னும் பின்னுமாக இருந்தது. இதிலுள்ள வேறுபட்ட எழுத்து வடிவத்தைக் கொண்டு காசு என்பதை உறுதி செய்ய முடிந்தது. இது குறித்த முழுமையான தகவலைத் தஞ்சை நாணயவியல் அறிஞர் ஆறுமுகம் சீதாராமனின் உதவியோடு ஆய்வு செய்ததில் இவை பிஜப்பூர் சுல்தான் காலத்தைச் சேர்த்த காசுகள் என்பதை உறுதி செய்ய முடிந்தது.

தொல் நடைக்குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா
தொல் நடைக்குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா

நமக்குக் கிடைத்துள்ள காசுகள் செம்பால் ஆனதோடு அதிக எடை கொண்டதாகவும் உள்ளன. 3 காசுகளில் 2 காசுகள் 8 கிராம் எடையும், ஒரு காசு 7 கிராம் எடையுமாக உள்ளன. ஒரு காசில் தேவநாகரி எழுத்தில் ராஜா என்று எழுதப் பெற்றுள்ளது மற்ற எழுத்துக்கள் பாரசீக எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன. அதில், அலி அடில் ஷா 1558-1579 என்ற பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கலாம், இவரது காலம் 16-ம் நூற்றாண்டு.

காசு கிடைக்கப்பெற்ற இந்த பகுதியானது விஜயநகர, நாயக்கர் ஆட்சிக் காலத்தில் பாளையங்களாகப் பிரிக்கப்பெற்ற பகுதியிலும் பின்னர், ராமநாதபுர சேதுபதிகளின் ஆட்சியின் கீழும். 1729க்குப் பிறகு சிவகங்கை சீமைப் பகுதியிலும் இருந்திருக்கும். சேதுபதி, நாயக்கர், விஜய நகர, சசிவர்ணர் ஆகியோரது காசாக இல்லாது அதற்கு முந்தைய மதுரை சுல்தான்கள் காசாகவும் இல்லாது இப்பகுதி ஆளுகைக்குத் தொடர்பற்று இருப்பதால் இது வணிகத் தொடர்பிலோ அல்லது இறைவழிப் பயணத்தின் வழியோ இக்காசு இப்பகுதிக்கு வந்திருக்கலாம்" என்றார்

மேலும் அவர், "மதுரை, தஞ்சாவூர், கரூர், திருநெல்வேலி போன்ற பகுதிகளில் ஆண்டாண்டு காலமாய் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றில் காசுகள் இழுத்து வரப் பெறுவதும் அவற்றை அரித்துச் சலித்து எடுப்பதும் பல காலங்களாகத் தொழிலாகவே நடைபெற்று வந்துள்ளன. ஆனால், சிவகங்கை போன்ற பகுதிகளில் இவ்வாறான காசுகள் கிடைப்பது அரிதாகவே உள்ளது. மேலும் சிவகங்கை தொல் நடைக் குழுவினர் கண்டறிந்த முதல் காசு இதில் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். மேலும் இவற்றை மாணவர்களின் பயன்பாட்டிற்காகத் தொன்மை பாதுகாப்பு மன்றத்தில் ஒப்படைக்க உள்ளோம்" என்றார்.

நாணயங்கள்...
நாணயங்கள்...

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in