மதுரை அருகே 400 ஆண்டுகள் பழமையான மாலைக்கோயில்!

கண்டுபிடிக்கப்பட்ட மாலைக்கோயில்...
கண்டுபிடிக்கப்பட்ட மாலைக்கோயில்...

மதுரை விமான நிலையம் அருகே பரம்புபட்டியில் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 400 ஆண்டுகள் பழமையான மாலைக்கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மதுரை பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளரான முனைவர் முனீஸ்வரன், முனைவர் லட்சுமண மூர்த்தி ஆகியோர் மாணவர்களுடன் கடந்த மே 31-ம் தேதி மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மதுரை விமான நிலையத்தின் பின்புறம் மண்ணில் புதைந்த நிலையில் கலை நுட்பத்துடன் கூடிய கி.பி.17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிக்கல் கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து கள ஆய்வாளர்கள் கூறும்போது, "சங்க காலம் முதல் தமிழர் கலாச்சாரத்தில் நடுகற்கள் வழிபாட்டு முறை இருந்துள்ளது. குறிப்பாக, மன்னர்களுக்கு இடையே ஏற்படுகின்ற போர் பூசல் மற்றும் பிற காரணங்களால் இறந்த வீரர்களுடைய நினைவாக நடுகற்கள் நட்டு வழிபாடு செய்யும் முறை இருந்தது.

நிரை கவர்தல், மீட்டல், எதிரிகளிடம் இருந்து நாட்டைக் காத்தல், புலி, பன்றி, யானையுடன் சண்டையிடுதல், அரசனின் வெற்றிக்காக போரிடுதல் ஆகிய காரணங்களால் இறந்த கணவனுடன், உடன்கட்டை ஏறிய மனைவிக்கு அமைக்கப்படும் நடுகல்லின் மீது எழுப்பப்படும் கோயில் மாலைக்கோயில் எனப்படும்.

அதில், கணவருடன் மனைவி இருப்பது போன்று சிற்பம் அமைக்கப்பட்டிருக்கும். பெண்ணின் கை உயர்த்தி அதில் வளையல் உள்ளிட்ட அணிகலன்கள் அணிந்தது போன்று சிற்பம் அமைக்கப்பட்டிருக்கும். மனைவியின் உருவம், வீரன் உருவத்தை விட சிறியதாக அமைக்கும் வழக்கம் இருந்துள்ளது.

இத்தகைய நடுகல்லை குடும்பத்தினருடன் ஊராரும் கோயில் அமைத்து வழிபட்டு வருவது வழக்கம். இக்கோயில்களை மாலையீடு, மாலையடி, தீப்பாஞ்சம்மன், மாலைக்காரி, சீலைக்காரி என்றும் அழைப்பார்கள். புதைந்த நிலையில் கண்டறியப்பட்ட சதிக்கல் தோரணவாயில் கலைநயத்தோடு 4 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்டது. கல் சிற்பத்தில் ஆண் மற்றும் பெண்ணின் தலையின் கொண்டைப் பகுதி சற்று சாய்வாகவும், ஆடவன் கையில் நீண்ட கத்தியும், அணிகலன்களுடன் கால் பகுதியை மடக்கி தொங்கவிட்டு அமர்ந்த நிலையில் காணப்படுகிறது. இக்கல் சிற்பத்தை தற்போது மக்கள் மாலைக்கோயில் என்று வழிபடுகின்றனர்.

நாகரிகத்தையும், கலாச்சாரத்தையும் மையமாகக் கொண்ட மதுரை மாநகரைச் சுற்றி பல குறுநில மன்னர்கள் ஆண்ட வரலாற்று தடயங்கள் புதைந்த நிலையில் கேட்பாரற்று கிடக்கிறது. இதுபோன்ற, கற்சிற்பங்களை பாதுகாத்தால் நமது வரலாற்றுச் சுவடுகளை அழியாமல் பாதுகாக்க முடியும்" என்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in