நட்பு காதலானது... மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை

ராஜதுரை
ராஜதுரை

பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்த வாலிபருக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்திருக்கிறது அரியலூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம்.

அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா சித்துடையார் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராஜதுரை (20). ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அந்த கிராமத்திற்கு தனது பாட்டி வீட்டிற்கு வந்த 12-ம் வகுப்பு படித்த மாணவியுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு பழகி வந்துள்ளார். இருவரும் சுமார் இரண்டு வருடங்களாக பழகி வந்திருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 09.03.21 அன்று மாணவியை காணவில்லை. அதனையடுத்து ராஜதுரை தான் மாணவியை கடத்தி சென்றதாக அவரது பெற்றோர் 10.03.21அன்று அரியலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அரியலூர் மகளிர் போலீஸார் ராஜதுரையை கைது செய்தனர். வழக்கானது அரியலூர் மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி ஆனந்தன் இன்று தீர்ப்பை வழங்கினார்.

மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததற்காக 25 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூபாய் பத்தாயிரம் அபராதமும், கடத்திச் சென்ற குற்றத்திற்காக பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூபாய் 10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். ஆக மொத்தம் 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து குற்றவாளியை பலத்த பாதுகாப்புடன் சிறையில் அடைப்பதற்காக காவலர்கள் அழைத்து சென்றனர். மாணவியை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in