சுற்றுலா தலத்தில் இரவு அனுமதியின்றி தங்கிய சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை அதிரடியாக 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலைப் பகுதி இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகும். இங்கு இருக்கும் எஸ்டேட்டுகளுக்குள் புகுந்து வலம்வருவது மிகவும் ரம்மியமாக இருக்கும். இங்கு அம்பாசமுத்திரத்தில் உள்ள வனச்சரக அலுவலரிடம் அனுமதி பெற்றே செல்ல முடியும்.
மாஞ்சோலையில் இருக்கும் அரியவகை உயிரினங்களைக் காக்கும் நோக்கத்தில் இந்த திட்டம் உள்ளது. அதேபோல் இங்கு சுற்றுலா செல்லும் பயணிகள் அங்கு இரவு தங்க அனுமதியில்லை. இந்நிலையில் ஒரு குழுவாகச் சென்றவர்கள் அனுமதி மறுக்கப்பட்ட மாஞ்சோலையில் இரவு தங்கியிருக்கின்றனர். அவர்களுக்கு வனத்துறை அபராதம் விதித்துள்ளது.
இதுகுறித்து அம்பை புலிகள் காப்பக அதிகாரிகள் கூறுகையில், “மாஞ்சோலையைப் பொறுத்தவரை காலை முதல் மாலைவரை சுற்றிப் பார்க்க மட்டுமே அனுமதி உண்டு. இரவில் அங்கு தங்க அனுமதி இல்லை. தெளிவாகவே இந்த அறிவுறுத்தல் கொடுக்கப்பட்ட பின்புதான், வனத்துறை சார்பில் பாஸ் வழங்கப்படுகிறது. ஆனால் ஒரு கும்பல் அங்கேயே இரவு தங்கிவிட்டு மறுநாள் மாலையில் சோதனைச் சாவடிக்கு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த சுற்றுலாப் பயணிகள் குழுவுக்கு 30 ஆயிரம் அபராதம் விதித்துள்ளோம்.”என்றனர்.