
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அருகே வெளிநாட்டிற்கு கடத்தி செல்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 கோடி மதிப்புள்ள இரண்டு உலோகச் சிலைகளை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அருகே டி.மணல்மேடு கிராமத்தில் தொன்மையான 2 உலோக சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு டிஜிபி. ஜெயந்த் முரளி உத்தரவின்படி, ஐஜி தினகரன் வழிகாட்டுதல்படி கூடுதல் எஸ்பி ராஜாராம் தலைமையில் எஸ்ஐ. சின்னதுரை மற்றும் போலீஸார் மதிக்குமார், கோபால், குமராராஜா, ஜெகதீஷ், ராம்குமார், பிரவீன்செல்வக்குமார் ஆகியோர் அடங்கிய சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸார் அந்த சிலைகளை மீட்க நடவடிக்கையில் இறங்கினர்.
சிலைகளை வாங்கும் வியாபாரிகள் போல் தங்களை காட்டிக்கொண்ட சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸார் சிலர், சிலையை பதுக்கி வைத்திருந்த நபரிடம் தொடர்பு கொண்டனர். சில நாட்களாக தொடர்ந்து தொடர்பு கொண்டபிறகுதான் அவர்களின் நடத்தையில் அந்த நபருக்கு நம்பிக்கை பிறந்திருக்கிறது. அதன் பிறகு போலீஸாரிடம் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டார்.
தன்னிடம் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இரண்டு உலோக சிலைகள் இருப்பதாக கூறியவர், அதனை வெளிநாட்டுக்கு அனுப்ப உள்ளதாக கூறியவர் அதற்கான விலை இரண்டு கோடி ரூபாய் என்றும் கூறியிருக்கிறார். ஆனால் தாங்கள் வாங்கிக் கொள்வதாக உறுதியளித்து போலீஸார், அந்த சிலைகளை பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றனர். அதனையடுத்து அவர்களை அழைத்துச் சென்று, தான் பதுக்கி வைத்திருந்த சிலைகளை அந்த நபர் காண்பித்தார்.
அதனையடுத்து சிலைகளுடன் அவரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில், தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் அருகே டி.மணல்மேடு சாலைத்தெருவை சேர்ந்த அந்த நபர் சுரேஷ் (32) என்பதும், வெளிநாட்டிற்கு கடத்துவதற்காக அந்த சிலைகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
அதனையடுத்து புத்தமத பெண் கடவுள் உலோகச்சிலை ஒன்றும், அமர்ந்த நிலையில் விநாயகர் உலோக சிலை ஒன்றையும் கைப்பற்றி சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு அலுவலகத்தில் 2 உலோக சிலைகளையும் ஒப்படைத்தனர். காவல் ஆய்வாளர் இந்திரா, இதுகுறித்து வழக்கு பதிவு சுரேஷூடம் விசாரணை மேற்கொண்டார். அதன்பின் நேற்று இரவு கும்பகோணம் நீதிமன்றத்தில் சுரேஷ் ஆஜர்படுத்தப்பட்டார்.
கைப்பற்றப்பட்டது புத்தமத கடவுளான அபலோகிதேஸ்வராவின் மனைவி தாராதேவி சிலை என்றும், திபெத் நாட்டில் காக்கும் கடவுளாக வழிபடப்படுவதாகவும், அது 700 ஆண்டுகள் தொன்மையானது என்றும் கூறப்படுகிறது. அதேபோல விநாயகர் சிலை 300 ஆண்டுகள் தொன்மையானது என்றும் கருதப்படுகிறது.