வாள், சுத்தி, கம்பு கொண்டு வர தடை: தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் 4 நாட்கள் 144 தடை

தூத்துக்குடி மாநகராட்சி
தூத்துக்குடி மாநகராட்சி படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மாலை 6 மணி முதல், வரும் 15-ம் தேதி காலை 6 மணிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோயில் விசேசத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பாஞ்சாலங்குறிச்சியில் 13 மற்றும் 14-ம் தேதிகளில் வீரசக்க தேவி ஆலய திருவிழா நடக்கிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு, நாளை (12-ம் தேதி) மாலை 6 மணி முதல் 15-ம் தேதி காலை 6 மணிவரை மாவட்டம் முழுவதும் 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ஆலயத் திருவிழாவை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடக்கும்பொருட்டும், சட்டம் ஒழுங்கினை பராமரிக்கவும் இந்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதன்படி 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற பகுதிகளில் இருந்தும் வந்து விழாவில் கலந்துகொள்ளும் பொதுமக்கள் வாள், சுத்தி, கம்பு போன்ற அபாயகரமான ஆயுதங்களை ஊர்வலமாகக் கொண்டுவருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தும், வெளிமாவட்டத்தில் இருந்தும் அனைத்துவகை வாடகை வாகனங்கள் மூலமாக திருவிழாவிற்கு மக்களை அழைத்துவரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி வாகனங்கள், அன்றாட அத்தியாவசிய பொருட்களை கொண்டுசெல்லும் வாகனங்கள் , சுற்றுலா வாகனங்கள், சரக்கு வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த நாள்களில் கூட்டங்கள், அன்னதானம், ஊர்வலங்கள் நடத்த இருப்போர் , தூத்துக்குடி எஸ்.பியை அணுகி முன் அனுமதி பெற வேண்டும். மேலும் 144 தடை உத்தரவு திருமணம் மற்றும் இறுதிச்சடங்கு ஊர்வலங்களுக்குப் பொருந்தாது”எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in